7 ஆயிரம் இடங்களுக்கு 24 லட்சம் பேர் போட்டியா? TNPSC தேர்வை பேரவையிலேயே விளாசிய PTR
PTR About TNPSC Exam: ”ஆண்டுக்கு 24 லட்சம் பேர் தேர்வு எழுதி 7 ஆயிரம் பேரை தேர்வு செய்வது என்பது நியாயமே இல்லை, இது Highly inefficient model”
தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையம் நடத்திய டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வு தொடர்பாக சட்டப்பேரவையில் சிறப்பு கவன ஈர்ப்பு தீர்மானத்தை எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி கொண்டு வந்தார்.
ட்ரெண்டிங் செய்திகள்
இதற்கு விளக்கம் அளித்து பேசிய நிதி மற்றும் மனிதவள மேலாண்மை துறை அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் டிஎன்பிஎஸ்சி தேர்வு முறைகளில் நிறைய சீர்த்திருத்தங்கள் தேவைப்படுவதாகவும் அதற்கு அனைவரும் ஒத்துழைக்க வேண்டும் என்றும் பேசினார்.
அதில் டிஎன்பிஎஸ்சி அமைப்பு பல வகையில் சீர்த்திருத்தம் செய்தாக வேண்டும் என்ற கருத்தை நானே இங்கு கூறி இருக்கிறேன். மூன்று ஆண்டுகளாக தேர்வுகள் நடக்கவில்லை, அதற்கு முன்னர் நடந்த தேர்வுகள் எல்லாம் நீதிமன்றத்தால் ரத்து செய்யப்பட்டு அப்படியே நிலுவையில் உள்ளது.
நிதியைவிட மனிதவளம்தான் என்னை பொறுத்தவரை ஒரு முக்கியம் என்பதால் சென்ற நிதிநிலை அறிக்கையில் அறிவித்து வெளியிடப்பட்ட அரசாணையை எல்லோரும் எதிர்த்தார்கள்.
7 ஆயிரம் இடங்களுக்கு 24 லட்சம் பேர் போட்டி
திடீரென்று எனக்கு ஒரு கோப்பு வருகிறது குரூப் 4 தேர்வு நடந்த பட்ஜெட்டுக்கு மேல் கூடுதலாக 45 கோடி ரூபாய் வேண்டும் என்று. 7 ஆயிரம் காலி இடங்களுக்கு 24 லட்சம் பேர் விண்ணப்பம் போட்டுள்ளார்கள், அவர்களுக்காக சுமார் நூறு கோடி தாளை பிரிண்ட் செய்ய வேண்டும். 2400 மையங்களில் தேர்வை நடத்த 7 ஆயிரம் கண்காணிப்பாளர்களுக்கு சம்பளம் தர வேண்டும் என்று சொன்னார்கள்.
இதனை நான் ஆய்வு செய்தபோது இந்த விதிமுறைகள் எல்லாம் இன்றைய காலகட்டத்திற்கு ஏற்புடையது அல்ல என்று என்னுடைய நிர்வாக கருத்தை டிஎன்பிஎஸ்சி இடம் தெரிவித்தேன்.
Highly inefficient model
ஆண்டுக்கு 24 லட்சம் பேர் தேர்வு எழுதி 7 ஆயிரம் பேரை தேர்வு செய்வது என்பது நியாயமே இல்லை, இது Highly inefficient model.
காடுகளின் மரங்களை வெட்டி நூறு கோடி பக்கங்களை டைப் அடித்து, 42 கோடி செலவாவது இன்றைய தொழில்நுட்ப யுகத்தில் இது சரியான விதிமுறை இல்லை என்பதால்தான் இந்த சிஸ்டட்டதை சிறப்பிக்க வேண்டும் என்ற முதலமைச்சரின் அறிவுரையின் படி நாங்கள் பல நடவடிக்கைகளை எடுத்து வருகிறோம்.
தற்காலிக பணியாளர்கள் அரசாணை
அந்த அரசாணை வந்த போது பலரும் எதிர்த்தார்கள், அரசில் வேலை செய்யும் தற்காலிக பணியாளர்களுக்கு குறைந்தபட்ச தொகையாவது கொடுக்க வேண்டும், தற்காலிக பணியாளர்கள் 5000 மற்றும் 10000 ரூபாய் எல்லாம் வாங்குகிறார்கள். ஆனால் முழுநேர பணியாளர்கள் பல லட்சம் வாங்குகிறார்கள்; இது நியாமில்லை, அடிப்படை வேலை செய்பவர்களை ஈபிஎஃப் மற்றும் ஈபிஎஸ்யில் சேர்க்கவே நாங்கள் இந்த அரசாணையை கொண்டு வந்தோம்.
முதல் ஆளாக நிற்கிறேன்; ஒத்துழைப்பு தாருங்கள்
அதை எல்லாம் எதிர்த்து சமூகநீதிக்கு எதிர்ப்பு என்றால் சமூகநீதி அடிப்படையிலும் மனிதவள துறையை மேம்படுத்த வேண்டும் என்ற நோக்கிலும் எந்த அரசிலும் பின் தங்கிய அரசு இல்லை இந்த அரசு, முதலமைச்சர், நான்.
எல்லா சீர்த்திருத்தங்களை செய்ய முதல் ஆளாக நான் நிற்கிறேன், எல்லோரும் ஒத்துழைத்து, மாநில நலன் அரசாங்கத்திற்காக செய்ய வேண்டிய முயற்சிகளுக்கு அனைவரும் ஒத்துழைக்க வேண்டும் என பிடிஆர் பேசினார்.