தமிழ் செய்திகள்  /  தமிழ்நாடு  /  பொம்மன், பெள்ளி தம்பதியை பாராட்டிய முதல்வர்! 91 பேருக்கு ஒரு லட்சம் தர உத்தரவு!

பொம்மன், பெள்ளி தம்பதியை பாராட்டிய முதல்வர்! 91 பேருக்கு ஒரு லட்சம் தர உத்தரவு!

Kathiravan V HT Tamil
Mar 15, 2023 12:13 PM IST

யானைகள் முகாமில் பணியாற்றும் 91 பணியாளர்களுக்கு தலா ஒரு லட்சம் காசோலையை வழங்கவும் முதல்வர் உத்தரவு

ரகு எனும் யானைக் குட்டியின் பராமரிப்பாளர்களான 
பொம்மன், பெல்லி தம்பதிக்கு கேடயம் மற்றும் ஒரு லட்சம் ரூபாய்க்கான காசோலையை வழங்கும் முதலமைச்சர்
ரகு எனும் யானைக் குட்டியின் பராமரிப்பாளர்களான பொம்மன், பெல்லி தம்பதிக்கு கேடயம் மற்றும் ஒரு லட்சம் ரூபாய்க்கான காசோலையை வழங்கும் முதலமைச்சர்

ட்ரெண்டிங் செய்திகள்

தமிழ்நாடு முதலமைச்சர் திரு. மு.க.ஸ்டாலினை இன்று (15-3-2023) தலைமைச் செயலகத்தில், முதுமலை யானைகள் வளர்ப்பு முகாமில் எடுக்கப்பட்ட ஆஸ்கார் விருது பெற்ற ‘The Elephant Whisperers’ ஆவணப் படத்தில் இடம் பெற்ற ரகு எனும் யானைக் குட்டியின் பராமரிப்பாளர்களான பொம்மன், பெல்லி தம்பதியர்கள் சந்தித்தனர். இவர்களுக்கு தமிழ்நாடு முதலமைச்சர் வாழ்த்து தெரிவித்து, பாராட்டுக் கேடயமும், பொன்னாடையும் அணிவித்து தலா ஒரு இலட்சம் ரூபாய்க்கான காசோலைகளை வழங்கினார்.

இந்த ஆவணப் படத்தின் மூலம் தமிழ்நாடு வனத்துறையின் செயல்பாடு மற்றும் யானைகள் பராமரிப்பு முறை உலக அளவில் கவனம் பெற்றது. தமிழ்நாட்டில் உள்ள இரண்டு யானைகள் முகாம்களான முதுமலையில் உள்ள தெப்பக்காடு மற்றும் ஆனைமலையில் உள்ள கோழிகமுத்தி யானைகள் முகாமில் மொத்தம் 91 பணியாளர்கள் பணி புரிந்து வருகிறார்கள்.

இந்த மகிழ்ச்சியான தருணத்தில் இவர்கள் ஒவ்வொருவருக்கும் தலா ஒரு இலட்சம் ரூபாய் வீதம் முதலமைச்சரின் நிவாரண நிதியிலிருந்து நல்கை வழங்கப்படும் என முதலமைச்சர் அறிவித்துள்ளார்கள்.

மேலும், யானை பராமரிப்பாளர்களாகிய இவர்கள் வசிக்கத் தேவையான சுற்றுச்சூழலுக்கு இசைந்த, அவர்கள் பண்பாட்டிற்கு உகந்த வீடுகள் கட்ட ரூபாய் 9.10 கோடி நிதி

உதவியை அரசு வழங்கும் எனவும் அறிவித்துள்ளார்கள். ஆனைமலை புலிகள் காப்பகத்தில் உள்ள யானைகள் முகாமை ரூபாய் 5 கோடி செலவில் மேம்படுத்தவும் அரசு அறிவித்துள்ளது.

கோவை மாவட்டத்தில், சாடிவயல் பகுதியில், யானைகள் பராமரிக்கத் தேவையான தங்கும் இடங்கள் மற்றும் அடிப்படை வசதிகளுடன் ஒரு புதிய யானைகள் முகாம் ரூபாய் 8 கோடி செலவில் அமைக்கப்படும். தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் 2022-ஆம் ஆண்டு உதகை பயணத்தின் போது முதுமலை புலிகள் காப்பகத்தில் உள்ள தெப்பக்காடு யானைகள்

முகாமில் “அதிநவீன யானைகள் பாதுகாப்பு மையம் மற்றும் சுற்றுச்சூழல் வளாகம்” ஒன்று ஏற்படுத்தப்படும் என்று ஏற்கனவே அறிவித்திருந்தார்கள். இது தொடர்பாக விரிவான திட்ட அறிக்கை தயாரிக்கப்பட்டு பணிகள் முன்னெடுக்கப்பட உள்ளன.

இந்த நிகழ்ச்சியில் வனத்துறை அமைச்சர் மரு. மா. மதிவேந்தன், தலைமைச் செயலாளர் முனைவர். வெ. இறையன்பு, இ.ஆ.ப., சுற்றுச்சூழல், காலநிலை மாற்றம் மற்றும் வனத்துறை அரசு கூடுதல் தலைமைச் செயலாளர் திருமதி சுப்ரியா சாகு, இ.ஆ.ப., மற்றும் முதன்மை தலைமை வனப்பாதுகாவலர் மற்றும் தலைமை வன உயிரின காப்பாளர் திரு. ஸ்ரீனிவாஸ் ஆர். ரெட்டி, இ.வ.ப., புலிகள் காப்பக கள இயக்குநர் திரு. து.வெங்கடேஷ் ஆகியோர் உடனிருந்தனர் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.

IPL_Entry_Point