Savukku Sankar: கலைஞர் ஜல்லிக்கட்டு மைதானத்தில் சவுக்கு சங்கருக்கு சிலை? வைரல் ஆகும் புகைப்படங்கள்!
”Savukku Sankar tweet: இந்த மைதானத்தின் வாயிலில் சீறிவரும் காளையை இளைஞர் ஒருவர் அடக்குவது போன்ற சிலை வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த சிலையின் புகைப்படங்கள் சமூகவலைத்தளங்களில் வைரல் ஆகி பேசு பொருள் ஆகி உள்ளது”
மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் அருகே உள்ள கீழக்கரை கிராமத்தில் அமைக்கப்பட்டுள்ள கலைஞர் நூற்றாண்டு ஏறு தழுவுதல் அரங்கினை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்ததுடன், ஜல்லிக்கட்டு போட்டியை தொடங்கி வைத்து வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகளை வழங்கினார்.
ட்ரெண்டிங் செய்திகள்
கடந்த 2021ஆம் ஆண்டு திமுக தேர்தல் அறிக்கையில் ஜல்லிக்கட்டுக்காக பிரத்யேக மைதானம் நவீன முறையில் அமைக்கப்படும் என அறிவித்திருந்தது. இதன்படி உலகப்புகழ்பெற்ற அலங்காநல்லூருக்கு அருகே உள்ள கீழக்கரை கிராமத்தில் 66.80 ஏக்கர் பரப்பளவில், 62.77 கோடி செலவில் புதிய ஜல்லிக்கட்டு மைதானம் கட்டப்பட்டுள்ளது.
3 அடுக்கு பார்வையாளர்கள் மாடத்துடன் கட்டப்பட்டுள்ள இந்த நவீன ஜல்லிக்கட்டு மைதானத்தில் ஒரே நேரத்தில் 5 ஆயிரம் பேர் வரை அமர்ந்து பார்வையிட முடியும். ஜல்லிக்கட்டுக்காக அழைத்து வரப்படும் காளைகளை நிறுத்தி வைக்க தனி இடம், விவிஐபிகள் வசதிக்காக தனி கேலரி, மாடுபிடி வீரர்கள் மற்றும் மாடுகளின் உரிமையாளர்கள் தங்குவதற்காக தனித்தனி அறைகள், காயம் ஏற்படும் காளைகளுக்கு சிகிச்சை அளிக்க மருத்து முகாம்கள் மற்றும் மருந்தகங்கள், புல்வெளிகள், தோட்டங்கள், பார்க்கிங்க் வசதி, நூலகம், ஒளி-ஒலி காட்சி கூடம் உள்ளிட்ட பல்வேறு உட்கட்டமைப்பு வசதிகளை இந்த ஜல்லிக்கட்டு மைதானம் கொண்டுள்ளது.
இந்த மைதானத்தின் வாயிலில் சீறிவரும் காளையை இளைஞர் ஒருவர் அடக்குவது போன்ற சிலை வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த சிலையின் புகைப்படங்கள் சமூகவலைத்தளங்களில் வைரல் ஆகி பேசு பொருள் ஆகி உள்ளது.
இந்த சிலையில் காளையை அடக்கும் நபரின் உருவம் மூத்த பத்திரிக்கையாளர் சவுக்கு சங்கரின் உருவத்துடன் ஒத்துப்போவதாக கூறி விமர்சனங்கள் முன் வைக்கப்பட்டு வருகின்றனர்.
திமுக அரசின் செயல்பாடுகளை தொடர்ந்து விமர்சித்து வரும் சவுக்கு சங்கர் தனது ‘எக்ஸ்’ சமூகவலைத்தளப்பதிவில், ”என் நினைவாக ஏறுதழுவுதல் அரங்கத்தில் எனக்கு சிலை வைத்த தமிழக அரசுக்கு நன்றி” என பதிவிட்டு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு டேக் செய்துள்ளார்.