Crime: மாணவிகளுக்கு பாலியல் தொல்லை - அடுத்தடுத்து சிக்கிக் கொள்ளும் பேராசிரியர்கள்!
கல்லூரி மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் கைது செய்யப்பட்டுள்ளார்.
மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தில் உளவியல் துறையின் பேராசிரியராகக் கருப்பையா என்பவர் பணியாற்றி வருகிறார். அதே துறையைச் சேர்ந்த மாணவிகளிடம் இவர் தவறாக நடந்து கொண்டதாகவும், அவதூறான வார்த்தைகளைப் பேசியதாகவும் கூறப்படுகிறது. இதுகுறித்து மாணவிகள் பல்கலைக்கழக நிர்வாகத்திடம் பலமுறை புகார் அளித்துள்ளதாகக் கூறப்படுகிறது.
ட்ரெண்டிங் செய்திகள்
புகார் குறித்து பல்கலைக்கழக நிர்வாகம் எந்தவித நடவடிக்கையும் எடுக்காமல் இருந்து வந்துள்ளனர். இதன் காரணமாகத் தொடர்ந்து மாணவிகள் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாகி வந்துள்ளனர். இந்நிலையில் சில மாணவிகள் இந்த சம்பவம் குறித்து மதுரை காவல் ஆணையர் பொன்னியிடம் நேரடியாகச் சென்ற புகார் அளித்துள்ளனர்.
இந்நிலையில் அழிக்கப்பட்ட புகாரின் பேரில் இது குறித்து டிஐஜி பொன்னி, சமயநல்லூர் அனைத்து மகளிர் காவல் நிலைய காவல்துறையினரிடம் விசாரிக்க உத்தரவிட்டுள்ளார். இது தொடர்பாக மாணவிகளிடம் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வந்தனர்.
காவல்துறையினர் மேற்கொண்ட விசாரணையில், உளவியல் துறை பேராசிரியர் கருப்பையா தொடர்ந்து மாணவர்களுக்கு பாலியல் தொல்லை அளித்ததும், அவர்களிடம் தவறான முறையில் நடந்து கொண்டதும் தெரியவந்துள்ளது. இதனைத் தொடர்ந்து சமயநல்லூர் அனைத்து மகளிர் காவல் நிலைய காவல்துறையினர் பேராசிரியர் கருப்பையா மீது, மாணவிகளுக்கு பாலியல் தொல்லை, தவறான செய்கை உள்ளிட்ட மூன்று பிரிவுகளின் வழக்குப் பதிவு செய்து, அவரை கைது செய்தனர்.
முன்னதாக மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தில் மாணவிகளைத் தவறாகப் பேசியதாகக் கூறி, பேராசிரியர் சண்முகநாதன் வன்கொடுமை சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டார். சில நாட்களுக்கு முன்பு மதுரை மத்தியச் சிறையில் அவர் அடைக்கப்பட்டார்.
தற்போது மீண்டும் மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தில் பேராசிரியர் ஒருவர் மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்து கைது செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்த மதுரை காமராஜர் பல்கலைக்கழகம் இல்லாமல் மதுரை மாவட்டத்தில் உள்ள மற்றொரு பல்கலைக்கழகத்தின் கல்லூரி மாணவிகள் இரண்டு பேருக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக இரண்டு பேராசிரியர்கள் கைது செய்யப்பட்டனர். அதற்குக் கல்லூரி மாணவர் ஒருவர் உடந்தையாக இருந்துள்ளார். பேராசிரியர்கள் சிக்கிக்கொண்டனர் அந்த மாணவர் தலைமறைவாகிவிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
தொடர்ந்து மதுரை மாவட்டத்தில் பேராசிரியர்கள் பாலியல் வழக்கின் கீழ் கைது செய்யப்படும் சம்பவங்கள் மாணவர்கள் வட்டாரத்தில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது.