தமிழ் செய்திகள்  /  Tamilnadu  /  Highcourt: To What Extent Has This App Reached Farmers?-judges Asked

Highcourt:இந்த செயலி எந்த அளவு விவசாயிகளிடம் சென்றடைந்துள்ளது?-நீதிபதிகள் கேள்வி

Manigandan K T HT Tamil
Feb 06, 2023 01:31 PM IST

தோட்டப் பயிர்களை விவசாயம் செய்யும் விவசாயிகளுக்கு நியாயமான விலை கிடைக்க உத்தரவிட வேண்டும் என தாக்கல் செய்யப்பட்ட மனுவை விசாரித்த உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு பிறப்பித்துள்ளது.

உயர்நீதிமன்ற மதுரைக் கிளை
உயர்நீதிமன்ற மதுரைக் கிளை

ட்ரெண்டிங் செய்திகள்

தமிழ்நாடு விவசாயத்துறை செயலர் மற்றும் ஆணையர் ஆகியோரிடம் தகவல் பெற்று தெரிவிக்க உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது.

மதுரையை சேர்ந்த சுந்தர்ராஜ் உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் பொதுநல மனுவினை தாக்கல் செய்திருந்தார்.

அதில், "தென் மாவட்டங்களான மதுரை, தேனி, திண்டுக்கல், இராமநாதபுரம் பகுதிகளில் நீர்ப்பாசனம் இல்லாத நன்செய், புன்செய் நிலங்களில் தோட்டப்பயிர் விவசாயம் அதிக அளவில் செய்யப்படுகிறது.

அதேபோல் இந்த மாவட்டங்களிலுள்ள மலைப்பகுதிகளிலும் தோட்டப் பயிர்கள் விவசாயம் செய்யப்படுகிறது.

இந்த மாவட்டங்களை சேர்ந்த விவசாயிகளுக்கு வாழ்வாதாரம் தரக்கூடியது இந்த தோட்டப் பயிர்களே ஆகும். நிரந்தர நிர்ப்பாசன வசதி இல்லாத காரணத்தால் இந்த பயிர்களை விவசாயம் செய்ய சிலர் பம்புசெட் மூலமும் பலர் ஆயில் எஞ்சின் வைத்து அதிக விலையில் டீசல் வாங்கி விவசாயம் செய்கிறார்கள்.

ஆனால், விவசாயிகளின் விளைபொருட்களுக்கு அறுவடை நேரங்களிலும் கட்டுப்படியான விலை கிடைக்காமல் உள்ளது. மேலும் காய்கறிகளை இடைத்தரகர்களும், வியாபாரிகளும் மிகக்குறைந்த விலையில் வாங்கி மிக அதிக லாபத்தில் மார்க்கெட்களிலும், கடைகளிலும் விற்பனை செய்கிறார்கள்.

இதனால் பொதுமக்களும் அதிக விலை கொடுத்து வாங்கும் நிலை உள்ளது.

மத்திய மாநில அரசுகள் கரும்பு, நெல் மற்றும் பயிறு வகைகளுக்கு (MSP) குறைந்தபட்ச ஆதரவு விலையை வருடா வருடம் நிர்ணயித்து கொள்முதல் செய்கிறது.

ஆனால் தோட்ட பயிர்களான காய்கறிகள், பழங்கள், மலர்கள், தேங்காய், கடலை, பருத்தி, வத்தல் போன்றவைகளுக்கு விலை நிர்ணயம் செய்யப்படவில்லை.

இதனால் தோட்டப்பயிர்கள் செய்யும் விவசாயிகள் காய்கறிகள், தேங்காய், கடலை போன்றவைகளை நஷ்டத்தில் விற்று வருகின்றார்கள்.

சில நேரங்களில் விலை நிர்ணயம் செய்யாததால் ஒரே தோட்டப் பயிரை பலர் செய்து தாங்கள் விளைவிக்கும் தக்காளி, கத்தரி மற்றும் மற்ற காய்கனிகளை நடுரோட்டிலும், நீர் நிலைகளிலும் கொட்டுகிறார்கள். விலை இல்லாத காரணத்தால் விளைவித்த காய்கறிகளை வயலிலேயே உழுது உரமாக்கிவிடுகின்றார்கள்.

சில நேரங்களில் காய்கறிக்கு எடுப்பு கூலிக்கூட விலை கிடைக்காத நிலை உள்ளது.

எனவே, கேரளாவில் காய்கறிகளுக்கு கட்டுப்படியான விலை நிர்ணயம் செய்வது போல் தமிழகத்திலுள்ள தென்மாவட்ட விவசாயிகளுக்கும் உரிய கட்டுப்படியான விலையை நிர்ணயித்து கொள்முதல் செய்து விநியோகம் செய்வதற்கான நடவடிக்கைகள் எடுக்க வேண்டும்.

தோட்ட பயிர்கள் செய்யும் விவசாயிகளுக்கு கட்டுப்படியான விலை கிடைக்க விவசாயிகள், விவசாய அதிகாரிகள் ஆகியோரை ஒன்றிணைத்து குழுவை நியமித்த விவசாயம் பொருள்களுக்கு விலை நிர்ணயம் செய்ய வேண்டும் என்று சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு மனு அளித்தும் இதுவரை எவ்வித நடவடிக்கையும் மேற்கொள்ளப்படவில்லை.

எனவே, எனது மனுவை பரிசீலனை செய்து தோட்டப் பயிர்களை விவசாயம் செய்யும் விவசாயிகளுக்கு நியாயமான விலை கிடைக்க உத்தரவிட வேண்டும்." என மனுவில் கூறியிருந்தார்.

இந்த மனு நீதிபதிகள் கிருஷ்ணகுமார் விஜயகுமார் அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது.

அப்போது நீதிபதிகள், தென் மாவட்டங்களில் உள்ள விவசாயிகள் என்பதை தமிழ்நாடு முழுவதும் என மனுதாரர் மாற்ற வேண்டும் என தெரிவித்தனர்.

தமிழக அரசு தரப்பில், அழுகும் விவசாய பொருள்களுக்கான விலை நிர்ணயம் மத்திய அரசு செய்ய வேண்டும் என தெரிவிக்கப்பட்டது.

மனுதாரர் தரப்பில், அழுகும் விவசாய பொருட்களுக்கு தமிழக அரசே விலை நிர்ணயம் செய்யலாம் என தெரிவிக்கப்பட்டது.

மத்திய அரசு தரப்பில், e-Nam என்ற செயலி மூலம் பொருட்கள் விற்பனை செய்யலாம் என தெரிவிக்கப்பட்டது.

இதனையடுத்து நீதிபதிகள், e-Nam செயலி குறித்து இங்கு இருக்கும் பல வழக்கறிஞர்களுக்கே தெரிய வாய்ப்பில்லை. பொதுமக்களுக்கு எவ்வாறு தெரியும் என கேள்வி எழுப்பினார்.

இதனையடுத்து நீதிபதிகள், தமிழ்நாட்டில் e-Nam செயலி பயன்பாட்டில் உள்ளதா? அவ்வாறு இருந்தால் இந்த செயலி எந்த அளவு விவசாயிகளிடம் சென்றடைந்துள்ளது? இந்த செயலியை விவசாயிகளிடம் சென்றடைய வகையில் செய்யப்பட்டுள்ள விழிப்புணர்வுகள் என்ன? போன்ற கேள்விகளுக்கு தமிழக விவசாயத்துறை செயலர் மற்றும் ஆணையர் ஆகியோரிடம் தகவல் பெற்று நீதிமன்றத்திற்கு தெரிவிக்க தமிழக அரசுக்கு உத்தரவிட்டு வழக்கு விசாரணை பிப்ரவரி 13ஆம் தேதிக்கு ஒத்தி வைத்தனர்.

IPL_Entry_Point

டாபிக்ஸ்