Senthil Balaji: ‘அமலாக்கத்துறை போலீஸ் கிடையாது’ என்று உச்சநீதிமன்றம் கூறியதா? புதிய தகவல்!
அமலாக்கத்துறை போலீஸ் இல்லை என்பதற்காக அவர்கள் கைது செய்யவோ, விசாரணை நடத்தவோ அதிகாரம் இல்லை என்று சொல்ல முடியாது.
அமலாக்கத்துறையால் கைதான அமைச்சர் செந்தில்பாலாஜி தொடர்பான வழக்கு உயர்நீதிமன்றத்தில் நடந்து வரும் நிலையில், இரு நீதிபதிகள் கொண்ட டிவிஷன் பெஞ்சில், இரு நீதிபதிகள் முரண்பட்டா தீர்ப்பை வழங்கினர். இதைத் தொடர்ந்து மூன்றாவது நீதிபதியாக கார்த்திகேயன் விசாரணைக்கு தலைமை நீதிபதி உத்தரவிட்டார்.
ட்ரெண்டிங் செய்திகள்
வழக்கு விசாரணைகள் நிறைவு பெற்று, மூன்றாவது நீதிபதி நேற்று உத்தரவு பிறப்பித்தார். அதில் செந்தில்பாலாஜி கைது சரியானது என, நீதிபதி பரத சக்கரவர்த்தி தெரிவித்த கருத்தை அமோதித்து நீதிபதி கார்த்திகேயன் உத்தரவிட்டார். இந்த வழக்கில் செந்தில்பாலாஜி தரப்பில், முன் வைக்கப்பட்ட முக்கியமான வாதம், ‘அமலாக்கத்துறை போலீஸ் கிடையாது, அவர்களுக்கு கைது செய்யவோ, விசாரணைக்கு அழைக்கவோ’ அதிகாரம் இல்லை என்று தான் வாதங்கள் முன் வைக்கப்பட்டது. அதற்காக உச்சநீதிமன்றத்தின் சில தீர்ப்புகளையும் அவர்கள் முன் வைத்திருந்தனர்.
இந்நிலையில், மூன்றாவது நீதிபதி கார்த்திகேயன் உத்தரவில், பல விசயங்களை சுட்டிக்காட்டியிருந்தார். அதில் ஒன்று தான், அமலாக்கத்துறை போலீசாரா? என்கிற உச்சநீதிமன்றத்தின் உத்தரவு ஒன்றும். அந்த வகையில், நீதிபதி தெரிவித்த கருத்துக்களின் அடிப்படையில் ஒரு விசயம் தெளிவாக புரிந்தது.
அமலாக்கத்துறையினர், போலீஸ் அதிகாரிகள் கிடையாது என்று உச்சநீதிமன்றம் ஏன் தொிவித்தது என்றால், ஒரே ஒரு காரணத்திற்காக தான். சி.ஆர்.பி.சி.,யில் போலீஸாருக்கு அதிகாரம் இருக்கிறது. போலீசிடம் ஒரு வாக்குமூலம் அளித்தால், அது நீதிமன்றத்திற்கு விசாரணைக்கு வரும் போது, அது ஏற்றுக்கொள்ளப்படமாட்டாது.
எந்த ஒரு கிரிமினல் வழக்காக இருந்தாலும், போலீசாரிடம் குற்றம்சாட்டப்பட்டவர் கொடுக்கும் வாக்குமூலம், நீதிமன்றத்தில் செல்லாது. நீதிமன்ற விசாரணையில் அவர் தெரிவிக்கும் கருத்துக்கள் தான் ஏற்றுக்கொள்ளப்படும்.
பிஎம்எல்ஏ., வழக்கில் அமலாக்கத்துறையிடம் குற்றம்சாட்டப்பட்டவர்கள் அளிக்கும் வாக்குமூலம், அங்கீகரிக்கப்பட்டது ஆகும். அந்த வாக்குமூலம் நீதிமன்ற விசாரணையில் முழுமையாக ஏற்றுக்கொள்ளப்படும். அந்த காரணத்தை சுட்டிக்காட்டி தான், அமலாக்கத்துறை போலீசார் இல்லை என்று உச்சநீதிமன்றம் சுட்டிக்காட்டியிருக்கிறது.
‘‘அமலாக்கத்துறை போலீஸ் இல்லை என்பதற்காக அவர்கள் கைது செய்யவோ, விசாரணை நடத்தவோ அதிகாரம் இல்லை என்று சொல்ல முடியாது,’’ என்று நீதிபதி கார்த்திகேயன் குறிப்பிட்டதும், அந்த உத்தரவை மேற்கோள் காட்டி தான்.