Courtallam falls: குற்றாலம் செயற்கை நீர்வீழ்ச்சி வழக்கு -ஹைகோர்ட் அதிரடி உத்தரவு
மதுரை: குற்றால அருவிகளின் இயற்கை நீரோட்டத்தை மாற்றி செயற்கை நீர்வீழ்ச்சிகளை உருவாக்கும் நபர்கள் மீது என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்பது குறித்த அறிக்கையை நாளை தாக்கல் செய்ய உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.
திருநெல்வேலி மாவட்டம் அம்பாசமுத்திரத்தை சேர்ந்த வினோத் என்பவர் உயர் நீதிமன்ற மதுரை கிளையில் பொதுநல வழக்கினை தாக்கல் செய்திருந்தார். அதில், "நெல்லை மாவட்டத்தில் அமைந்துள்ள குற்றாலம் அருவி மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் இருந்து உருவாகிறது. மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் ஏராளமான அருவிகள் இயற்கையாக உருவாகின்றன. நெல்லை மற்றும் தென்காசி மாவட்டங்களில் ஐந்தருவி, குற்றாலம் அருவி உள்ளிட்ட இயற்கை அருவிகள் உள்ளன.
ட்ரெண்டிங் செய்திகள்
சீசன் காலங்களில் ஏராளமான கூட்டம் நிரம்பி வழியும் சூழலில், பொருளாதார ரீதியாக வசதி மிக்க சுற்றுலாப் பயணிகளை ஈர்க்கும் நோக்கில், ஏராளமான ரிசார்டுகள் தனியார் நீர்வீழ்ச்சிகளை உருவாக்கி, அவற்றை இணையதளங்களில் விளம்பரப்படுத்துகின்றனர்.
இதற்காக இயற்கையான அருவிகளின் நீர் வழி பாதையை மாற்றி இயற்கை சமநிலை பாதிக்கப்படும் நிலை உருவாகியுள்ளது. ஆகவே, மேற்கு தொடர்ச்சி மலையில் உருவாகும் அருவிகளின் இயற்கை நீரோட்டத்தை மாற்றி தென்காசி மாவட்டத்தில் செயற்கை நீர்வீழ்ச்சிகளை உருவாக்கும் நபர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும்" என மனுவில் கூறியிருந்தார்.
இந்த வழக்கு நீதிபதிகள் மகாதேவன், சத்திய நாராயண பிரசாத் அமர்வு முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, "அரசு தரப்பில் கூடுதல் தலைமை வழக்கறிஞர் ஆஜராகி, நீதிமன்ற உத்தரவு பிறப்பித்த உடன் நீர்வீழ்ச்சிகள் மாற்றம் செய்யும் நபர்கள் மீது நடவடிக்கை எடுப்பது குறித்தும், உரிய அனுமதி இல்லாமல் செயல்படும் ரிசார்டுகள் மீது நடவடிக்கை எடுப்பது குறித்தும் குழு அமைக்கப்பட்டுள்ளது. இந்த குழுவில் சுற்றுலாத்துறை இயக்குனர் தலைமையில் நில நிர்வாக ஆணையர், தலைமை வனக்காப்பாளர் உள்ளிட்ட 10 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது." எனத் தெரிவித்தார்.
இதையடுத்து நீதிபதிகள், நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்து 5 நாளில் குழு அமைத்த அரசின் நடவடிக்கையை பாராட்டுகிறோம். அதேசமயம் இயற்கை நீர்வீழ்ச்சி பாதையை நீர் வழி பாதையை மாற்றும் நபர்கள் மீது என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இது போன்ற ரிசார்டுகள் மீது என்னென்ன நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்பது குறித்த அறிக்கையை நாளை (டிச.02) மாலை தாக்கல் செய்ய உத்தரவிட்டு வழக்கு விசாரணையை நாளைக்கு ஒத்தி வைத்தனர்.
டாபிக்ஸ்