ராகுல் பதவி பறிப்பு.. ரயிலை மறித்து போராட்டம் - காங்கிரஸ் கட்சியினர் கைது
Congress Protest: ராகுல் காந்தியின் எம்பி பதவி பறிக்கப்பட்டதைக் கண்டித்து தமிழகம் முழுவதும் பல்வேறு இடங்களில் காங்கிரஸ் கட்சியினர் ரயில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
பிரதமர் நரேந்திர மோடி குறித்து அவதூறாகப் பேசியதாக தொடரப்பட்ட வழக்கில் காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்திக்கு இரண்டு ஆண்டு தண்டனை விதிக்கப்பட்டது. இந்த தண்டனையை எதிர்த்து ராகுல் மேல் முறையீடு செய்துள்ளார். இதனிடையே, சூரத் குற்றவியல் நீதிமன்றம் தீர்ப்பளித்த 24 மணி நேரத்தில், ராகுல் காந்தி மக்களவை உறுப்பினர் பதவியில் இருந்து தகதி நீக்கம் செய்யப்பட்டார். அரசியல் சட்டம் பிரிவு 102 (1) (ஈ) உடன் இணைந்த 1951-ம் ஆண்டின் மக்கள் பிரதிநிதித்துவ சட்டம் பிரிவு 8-ன் படி ராகுலின் பதவி பறிக்கப்பட்டது. இந்த விவகாரம் நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
ட்ரெண்டிங் செய்திகள்
ராகுலின் எம்.பி பதவி பறிக்கப்பட்டதற்கு காங்கிரஸ் மற்றும் கூட்டணி கட்சித் தலைவர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். இது தொடர்பாக மத்திய அரசைக் கண்டித்து காங்கிரஸ் கட்சியினரும் பல்வேறு பகுதிகளில் பல்வேறு முறைகளில் தொடர் போராட்டங்களை நடத்தி வருகின்றனர். இந்நிலையில் ராகுல் காந்தியின் தகுதி நீக்கத்திற்கு கண்டனம் தெரிவிக்கும் வகையில், தமிழகம் முழுவதும் காங்கிரஸ் கட்சி சார்பில் இன்று (ஏப்ரல் 15) ரயில் மறியல் போராட்டம் நடைபெறுகிறது.
ராகுல் காந்தியின் எம்.பி. பதவி பறிக்கப்பட்டதை கண்டித்து, சென்னை குரோம்பேட்டையில் புறநகர் ரயிலை மறித்து போராட்டத்தில் ஈடுபட்ட காங்கிரஸ் கட்சியை சேர்ந்த 60 பேரை போலீசார் கைது செய்தனர். சென்னை கடற்கரை - தாம்பரம் புறநகர் ரயிலை மறித்து மறியலில் ஈடுபட்ட காங்கிரஸ் கட்சியினரை போலீசார் குண்டுகட்டாக கைது செய்து அழைத்து சென்றனர். இதனால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. புதுக்கோட்டையில் ரயில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட காங்கிரஸ் கட்சியை சேர்ந்த 200 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
சேலம் ரயில் நிலையத்தில் கோவை எக்ஸ்பிரஸ் ரயில் முன்பு அமர்ந்து மறியலில் ஈடுபட்ட 150க்கும் மேற்பட்ட காங்கிரஸ் கட்சியினரை போலீசார் கைது செய்தனர். ராகுல் காந்தியின் எம்.பி. பதவி பறிக்கப்பட்டதை கண்டித்து தமிழ்நாடு முழுவதும் காங்கிரஸ் கட்சியினர் ரயில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
சென்னை எழும்பூர் ரயில் நிலையத்தில் நடைபெறும் போராட்டத்தில் தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ். அழகிரி பங்கேற்கிறார். தமிழகம் முழுவதும் 76 இடங்களில் ரயில் மறியல் போராட்டம் நடைபெறுகிறது. முக்கிய ரயில் நிலையங்களில் ரயில் ம றியல் போராட்டத்தில் காங்கிரஸ் கட்சியின் நிர்வாகிகள் ஈடுபட உள்ளனர். காங்கிரஸ் கட்சி அறிவித்துள்ள மறியல் போராட்டத்தால் ரயில் நிலையங்களில் கூடுதல் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
டாபிக்ஸ்