Coimbatore Car Explosion : கோவை கார் வெடித்து விபத்து- பாதுகாப்பு பணிகள் தீவிரம்
கோவை கார் வெடிப்பு சம்பவத்தை தொடர்ந்து தமிழகம் முழுவதும் பாதுகாப்பு பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.
கோவை உக்கடத்தில் இந்து மத வழிபாட்டு தலமான கோட்டை ஈஸ்வரன் கோவில் முன்பாக நேற்று அதிகாலை மாருதி கார் ஒன்று வெடித்து சிதறியது. இதில் காரில் இருந்த நபர் உடல் கருகி உயிரிழந்தார். முதல்கட்ட விசாரணையில் காரில் இருந்த கேஸ் சிலிண்டர் வெடித்ததில் கார் இரண்டாக உடைந்தது சிதறி இருப்பது தெரியவந்தது.
ட்ரெண்டிங் செய்திகள்
இதையடுத்து, கார் வெடிவிபத்தில் உயிரிழந்தது யார் என்பது குறித்தும், காரின் பதிவு எண் பொள்ளாச்சி முகவரியில் இருப்பதால் , அந்த முகவரி குறித்தும் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வந்தனர். இந்நிலையில், கோவை உக்கடம் பகுதியைச் சேர்ந்த ஜமேசா முபின் என்ற நபர் இந்த கார் வெடிவிபத்தில் உயிரிழந்தது தெரியவந்தது.
இந்த கோவில் அருகே போலீஸ் சோதனை சாவடி உள்ளது. காரில் ஜமேஷா முபின் வந்த போது போலீசாரை கண்டதும், காரை விட்டு இறங்கி செல்ல முயன்று உள்ளார். அப்போது இந்த சம்பவம் நடைபெற்றது தெரியவந்தது. இதனை தொடர்ந்து அவரது வீட்டில் தனிப்படையினர் சோதனை நடத்தினர்.
அப்போது நாட்டு வெடிகுண்டு தயாரிக்க பயன்படும் பொட்டாசியம் குளோரைடு, அலுமினியம் நைட்ரேட், சல்பர், உள்ளிட்ட வெடி பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டு உள்ளது. இறந்த நபர் மீது வழக்குகள் எதுவும் நிலுவையில் இல்லை. அவரது செல்போனை கைப்பற்றி அவருடன் தொடர்பில் உள்ள நபர்களிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்நிலையில் கோவை கார் வெடிப்பு சம்பவத்தை தொடர்ந்து தமிழகம் முழுவதும் பாதுகாப்பு பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. தீபாவளி பண்டிகையொட்டி கோவில்கள், பேருந்து, ரெயில் நிலையங்கள், கடைவீதிகள் உள்பட முக்கிய இடங்களில் கூடுதல் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.அனைத்து மாவட்டங்களிலும் போலீசார் கண்காணிப்பு மற்றும் ரோந்து பணியில் தீவிரமாக ஈடுபட வேண்டும் என்று காவல்துறையினருக்கு, டி.ஜி.பி.சைலேந்திரபாபு அறிவுறுத்தி உள்ளார்.
டாபிக்ஸ்