fake website in tn temples name:போலி இணையத்தளம் மூலம் வசூல்! நீதிமன்றம் உத்தரவு
தமிழக கோயில்கள் பெயர்களில் போலி இணையதளம் தொடங்கி காணிக்கை வசூலிப்பது தொடர்பாக நடவடிக்கை எடுக்க கோரிய வழக்கில், கோயில் இணையதளங்கள் குறித்து உரிய வழிகாட்டு நெறிமுறைகள் உத்தரவாக பிறப்பிக்கப்படும் எனக் கூறி தீர்ப்பை ஒத்தி வைத்தது உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.
ராமநாதபுரத்தை சேர்ந்த சுப்பிரமணியன் மற்றும் மார்கண்டன் ஆகியோர் உயர் நீதிமன்றம் மதுரைக்கிளை பொதுநல மனு ஒன்றை தாக்கல் செய்தனர். அதில், "தமிழகத்தில் இந்து சமய அறநிலையத்துறைக்கு சொந்தமான பல முக்கிய கோயில்கள், மடங்கள் செயல்பட்டு வருகிறது.
ட்ரெண்டிங் செய்திகள்
இந்தக் கோயில்களுக்கு வெளிநாட்டில் இருந்து பலர் தற்போது அதிகளவில் வந்து செல்கின்றனர். இங்கு நேரடியாக வரும் பக்தர்கள் காணிக்கைகளை செலுத்தி அதற்கான ரசீதுகளை பெற்று செல்கின்றனர்.
வெளி மாவட்டங்கள், வெளியூர், வெளிநாட்டில் இருக்கும் பக்தர்கள் கோயில்களின் இணையதளத்தில் உள்ள கணக்குகளில் பணத்தை காணிக்கையாக செலுத்துகின்றனர்.
தமிழகத்தில் முக்கியமான கோயில்களான சென்னை கபாலீஸ்வரர் கோயில், மதுரை மீனாட்சி அம்மன் கோயில், தஞ்சை பிரகதீஸ்வரர் கோயில், அறுபதாம் திருமணம் நடைபெறும் திருக்கடையூர் அமிர்தகடேஸ்வரர் கோயில், திருச்சி ஸ்ரீரங்கம் கோயில், பழனி முருகன் கோயில் சென்னை வடபழனி கோயில், ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயில், திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோயில் போன்ற இன்னும் பல பிரபலமான கோயில்களின் பெயரில் சிலர் போலி இணையதள முகவரி வைத்து, மேற்கூறிய கோயில்களுக்கு பக்தர்கள் அனுப்பும் காணிக்கைகளை பெற்று மோசடி செய்து வருகின்றனர்.
இதுகுறித்து மனு அளித்தும் எவ்வித நடவடிக்கையும் இல்லை. எனவே, தமிழகத்தில் இந்து சமய அறநிலையத்துறைக்கு சொந்தமான கோயில்கள் மற்றும் மடங்களில் பெயர்களில் போலியாக செயல்படும் இணையதளங்களை முடக்கவும், அவற்றின் பெயரில் போலியாக இணையதளம் வைத்திருப்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்கவும் உத்தரவிட வேண்டும்." என மனுவில் கூறியிருந்தார்.
இந்த மனு நீதிபதிகள் மகாதேவன், சத்தியநாராயணன் அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர் தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் கார்த்திகேயன் கோயில்களின் பெயரில் உள்ள இணையதளங்களை அந்த கோயில்களுக்கு எந்த விதத்திலும் சம்பந்தமில்லாத சிலர் வைத்துள்ளதற்கான ஆதாரங்களை தாக்கல் செய்தார்.
இதைத்தொடர்ந்து நீதிபதிகள் கோயில் இணையதளங்கள் செயல்பாடு குறித்து உரிய வழிமுறைகளை நீதிமன்றம் பிறப்பிக்கும் எனக் கூறி வழக்கின் தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் ஒத்தி வைத்தனர்.
டாபிக்ஸ்