Benedict Anto: போலீஸ் விசாரணையில் திடுக்கிடும் தகவலை கூறிய பாதிரியார் பெனடிக்ட்
Church Priest Benedict Anto: ஆபாச சாட்டிங், இளம்பெண்களின் ஆபாச காட்சிகள் என சமூக வலைத்தளங்களில் பரவி முகம் சுளிக்கும் வகையில் வீடியோக்கள் இருந்தன.
காதலித்த பெண்ணை திருமணம் செய்து, குடும்ப வாழ்க்கையில் ஈடுபட விரும்பினேன் என காவல் துறை விசாரணையில் கைதான பாதிரியார் பெனடிக்ட் ஆன்டோ தெரிவித்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
ட்ரெண்டிங் செய்திகள்
காதலித்த பெண்ணை திருமணம் செய்ய விடாமல் பெற்றோர் தடுத்ததால் விரக்தியில் பெண்களிடம் பழகி, ஆபாச படங்களை எடுத்திருக்கிறார் என்பது தற்போது போலீஸார் விசாரணையில் திடுக்கிடும் தகவலாக தெரியவந்துள்ளது.
கன்னியாகுமரி மாவட்டம், விளவங்கோடு பாத்திமா நகர் பகுதியைச் சேர்ந்த் பெனடிக்ட் ஆன்டோ (வயது 29), குமரி மாவட்டத்தில் உள்ள சில தேவாலயங்களில் பணியாற்றி வந்தார்.
சில இளம்பெண்களுடன் இவர் ஆபாசமாக இருக்கும் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் சமூக வலைத்தளங்களில் சமீபத்தில் வைரலாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
ஆபாச சாட்டிங், இளம்பெண்களின் ஆபாச காட்சிகள் என சமூக வலைத்தளங்களில் பரவி முகம் சுளிக்கும் வகையில் இவரது வீடியோக்கள் வெளியாகி இருந்தன.
தேவாலயப் பணிக்காக மதுரை, சென்னை, பெங்களூரு உள்ளிட்ட பல்வேறு இடங்களுக்குச் சென்று இருக்கிற இந்த பாதிரியார், அங்கும் தேவாலயங்களுக்கு வரும் இளம்பெண்களை மயக்கி தனது வலையில் வீழ்த்தி ஆபாச வீடியோ எடுத்து அவர்களை மிரட்டியதாக கூறப்படுகிறது.
இந்த நிலையில், பேச்சிப்பாறை பகுதியைச் சேர்ந்த 18 வயதுடைய நர்சிங் மாணவி ஒருவர் மாவட்ட சைபர் கிரைம் போலீசில் புகார் கொடுத்தார்.
அந்தப் புகாரில், 'பாதிரியார் பெனடிக்ட் ஆன்டோ தன்னை பாலியல் ரீதியாக சமூக வலைத்தளம் மூலம் பாலியல் தொல்லை கொடுப்பது, மிரட்டுவது போன்ற செயலில் ஈடுபட்டதாக குறிப்பிட்டுள்ளார்.
அந்தப் புகாரின் அடிப்படையில் பெனடிக்ட் ஆன்டோ மீது சைபர் கிரைம் போலீசார் 5 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தினர்.
இதை அறிந்த பெனடிக்ட் ஆன்டோ காவல் துறைக்கு பயந்து தலைமறைவானார். அவரை பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டது.
இந்த நிலையில், பாதிரியார் பெனடிக்ட் ஆன்டோ பெங்களூருவில் உள்ள ஒரு தனியார் ஓட்டலில் பதுங்கி இருந்தது தனிப்படை போலீஸாருக்கு தெரியவந்தது. உடனே அங்கு விரைந்த போலீசார் பாதிரியார் பெனடிக்ட் ஆன்றோவை தேடினர். ஆனால் அவர் அங்கிருந்து தப்பினார். இதனை தொடா்ந்து அவர் கேரளாவுக்கு சென்று தொடர்ந்து தலைமறைவாக இருந்தார்.
நாகர்கோவில் பார்வதிபுரம் பகுதியில் பதுங்கி இருப்பதாக சைபர் கிரைம் போலீசாருக்கு ரகசிய தகவல் வந்தது. உடனே நள்ளிரவில் அங்கு விரைந்த போலீசார் பெனடிக்ட் ஆன்டோவை கைது செய்தனர்.
இந்த நிலையில், பாதிரியார் பெனடிக்ட் ஆன்டோவால் மிரட்டப்பட்ட பெண்கள் தைரியமாக புகார் கொடுக்கலாம், அவர்களுடைய பெயர் விவரம் ரகசியம் காக்கப்படும் என காவல் துறை உயரதிகாரி ஒருவர் உறுதியளித்தார்.
அதைத் தொடர்ந்து பெனடிக்ட் ஆன்டோ மீது மேலும் 4 பெண்கள் புகார் அளித்தனர். அந்த புகாரின் அடிப்படையிலும் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
டாபிக்ஸ்