கடலூருக்கு ராணுவம் வந்தாலும் கவலையில்லை! திமுகவுக்கு அன்புமணி எச்சரிக்கை!
"தமிழக அரசு மீண்டும் இந்த போக்கில் செயல்பட்டால் சிந்தூர், நந்திகிராம் போல் கடலூர் மாறும்"
என்.எல்.சி நிறுவனத்தின் நில எடுப்பு நடவடிக்கையை கண்டித்து கடலூரில் முழு அடைப்பு போராட்டத்திற்கு பாமக அழைப்புவிடுத்துள்ள நிலையில், பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், என்.எல்.சி நிறுவனத்திற்கு 37,000 ஏக்கர் நிலம் கொடுத்த மக்களுக்கு மொத்தத்தில் 66 ஆண்டுகளாக 1800 பேருக்கு மட்டுமே வேலை கொடுத்துள்ளார்கள் அவர்கள் யாரும் இப்போது வேலையில் இல்லை.
ட்ரெண்டிங் செய்திகள்
தற்காலிகமாக 3500 பேருக்கு வேலை கொடுத்துள்ளார்கள். சமீபத்தில் 297 இளநிலை பொறியாளர் வேலைக்கு ஆட்களை எடுத்ததில் ஒருவர் கூட தமிழ்நாட்டை சேர்ந்தவர்கள் கிடையாது.
நிலத்தடி நீரை ஒழித்து விவசாயத்தை என்.எல்.சி அழித்துள்ளது. என்.எல்.சி என்ற நிறுவனமே வேண்டாம் என்பதுதான் எங்களின் எண்ணம்.
நெய்வேலியின் 40,000 ஏக்கர் நிலங்கள் பாலைவனமாக மாறிவிட்டது. தனியாரிடம் அடுத்த ஆண்டில் என்.எல்.சி விற்கப்படும் நிலையில் அதற்கு நிலம் கையகப்படுத்த திமுக அரசு ஏன் துணை போகிறது என்பதை முதலமைச்சர் விளக்க வேண்டும்.
கடலூரில் வணிகர்களாக முன் வந்து பெரும்பாலான கடைகளை அடைத்துள்ளனர். சில இடங்களில் திமுகவினர் அச்சுறுத்தலால் சில கடைகள் திறக்கப்பட்டுள்ளது. தமிழக அரசு மீண்டும் இந்த போக்கில் செயல்பட்டால் சிந்தூர், நந்திகிராம் போல் கடலூர் மாறும்.
இதே கடலூர் மாவட்ட அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர் செல்வம், என்.எல்.சிக்கு எதிராக 3 ஆண்டுகளுக்கு முன்னர் போராடினார். இப்போது ஆதரவாக நிற்கிறார். ஏன் நீங்களெல்லாம் அமைச்சர்களாக இருக்கிறீர்கள்?. என்.எல்.சி நிர்வாகத்திற்கு ஏஜெண்ட்டுகளா நீங்கள்?
ராணுவத்தை கூட்டி வந்தாலும் எங்களுக்கு கவலையில்லை, உறுதியாக நாங்கள் தொடர்ச்சியாக போராட்டம் நடத்துவோம்.
அன்னூரில் 1500 ஏக்கரில் சிப்காட்டிற்கு நிலம் எடுப்பதை கண்டித்து பாஜகவின் அண்ணமலை, அதிமுகவில் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் போராடினர். உடனே அந்த திட்டத்தை நிறுத்திவிட்டனர்.
அப்போது அன்னூருக்கு ஒரு நியாயம் கடலூருக்கு ஒரு நியாயமா? என அன்புமணிராமதாஸ் கேள்வி எழுப்பி உள்ளார்.
என்.எல்.சி விவகாரத்தில் தமிழ்நாடு அரசின் நிலைப்பாடு என்ன என்பதை முதலமைச்சர் விளக்க வேண்டும்.