MGR Birthday Celebration:106 கிலோ கேக் வெட்டி அதிமுக தலைமையகத்தில் கொண்டாட்டம்
மறைந்த முன்னாள் முதல்அமைச்சரும், அதிமுக நிறுவனர் எம்ஜிஆர் 106வது பிறந்தநாளை முன்னிட்டு அவரது சிலைக்கு அதிமுக முன்னணி தலைவர்கள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
எம்ஜிஆர் பிறந்த நாளை முன்னிட்டு அதிமுகவினர் தமிழ்நாடு முழுவதும் நலத்திட்ட உதவிகள் மற்றும் இனிப்புகள் வழங்கி கொண்டாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் கட்சியின் இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி எம்ஜிஆர் சிலைக்கு மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செலுத்தினார். இதன்பின்னர் கட்சி நிர்வாகிகள், தொண்டர்களுக்கு இனிப்புகளையும் வழங்கினார்.
ட்ரெண்டிங் செய்திகள்
எம்ஜிஆரின் 106வது பிறந்தநாளை குறிப்பிடும் வகையில் 106 கிலோ பிரமாண்ட கேக்கும் வெட்டப்பட்டது. அதிமுக துணை பொதுச்செயலாளர் கே.பி.முனுசாமி, அவைத் தலைவர் தமிழ்மகன் உசேன், முன்னாள் அமைச்சர்கள் ஜெயக்குமார், திண்டுக்கல் சீனிவாசன், கோகுல இந்திரா, வளர்மதி, பொன்னையன் உள்பட கட்சியின் முக்கிய பிரமுகர்கள் பலர் கலந்து கொண்டனர்.
இதேபோல் தில்லி அதிமுக அலுவலகத்தில் பணிபுரிந்து மரணம் அடைந்த சந்திரசேகரன், குடும்பத்துக்கு ரூ.10 லட்சம் மற்றும் அ.தி.மு.க. கொடியை கட்டும்போது மின்சாரம் தாக்கி உயிரிழந்த தொண்டர் குடும்பத்துக்கு ரூ.5 லட்சம் நிதி உதவிகளையும் எடப்பாடி பழனிசாமி வழங்கினார்.
சென்னை அண்ணா சாலையில் ஸ்பென்சர் எதிரில் உள்ள எம்ஜிஆர் சிலைக்கு முன்னாள் முதல்அமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். இதில் முன்னாள் அமைச்சர்கள் வைத்திலிங்கம், வெல்ல மண்டி நடராஜன், மனோஜ் பாண்டியன் எம்.எல்.ஏ. ஜே.சி.டி.பிரபாகரன், எம்.ஜி.ஆர். மன்ற மாநில இணை செயலாளர் மங்காராமன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
இதன் பின்னர் தி.நகரில் உள்ள எம்.ஜி.ஆர் இல்லம், ராமாவரம் எம்.ஜி.ஆர். தோட்டம் ஆகிய இடங்களுக்கும் சென்று ஓ.பன்னீர் செல்வம், எம்.ஜி.ஆர். சிலைக்கு மரியாதை செலுத்தினார். தி.நகரில் உள்ள எம்.ஜி.ஆர். நினைவு இல்லத்தில் முன்னாள் மேயர் சைதை துரைசாமி மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
டாபிக்ஸ்