PM CARES Fund: பி.எம் கேர்ஸ் நிதி - அறங்காவலராக ரத்தன் டாடா நியமனம்
பி.எம் கேர்ஸ் நிதியின் அறங்காவலர்களாக ரத்தன் டாடா, கே.டி.தாமஸ் உள்ளிட்டோர் நியமிக்கப்பட்டுள்ளனா்.
புதுதில்லி: பி.எம்., கேர்ஸ் நிதியின் அறங்காவலர்களாக தொழிலதிபரும், டாடா சன்ஸ் தலைவருமான ரத்தன் டாடா, உச்ச நீதிமன்ற முன்னாள் நீதிபதி கே.டி.தாமஸ், மக்களவை முன்னாள் துணை சபாநாயகர் கரிய முன்டா ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளதாக அதிகாரப்பூர்வமாக அரசு அறிவித்துள்ளது.
ட்ரெண்டிங் செய்திகள்
மேலும், முன்னாள் தலைமை கணக்கு தணிக்கையாளர் ராஜிவ் மகரிஷி, இன்ஃபோசிஸ் நிறுவனத்தின் முன்னாள் தலைவர் சுதா மூர்த்தி, டெக் ஃபார் இந்தியா நிறுவனத்தின் இணை நிறுவனர் ஆனந்த் ஷா ஆகியோர் இதன் ஆலோசனைக் குழு உறுப்பினர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்.
புதுதில்லியில் பி.எம். கேர்ஸ் நிதி தொடர்பான கூட்டம் நேற்று நடைபெற்றது. பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் நடைபெற்ற இந்த கூட்டத்தில், நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன், உள்துறை அமைச்சர் அமித் ஷா ஆகியோருடன் புதிய அறங்காவலர்களும், ஆலோசனைக் குழு உறுப்பினர்களும் கலந்துகொண்டனர்.
கொரோனா பெருந்தொற்று காலத்தில் நிவாரண உதவிகளை அளிப்பதற்காக பி.எம். கேர்ஸ் நிதி தொடங்கப்பட்டது. இதன் மூலம் பிரபலங்கள், பொது மக்கள் என பலரும் நிதி அளித்து வருகின்றனா். இதற்கு வருமான வரிவிலக்கு உண்டு. கொரோனாவால் பெற்றோரை அல்லது பாதுகாவலரை இழந்த குழந்தைகளுக்கு இந்தத் திட்டத்தின் மூலம் உதவ நடவடிக்கை எடுக்கப்பட்டது. இந்தத் திட்டத்தின் கீழ் 4,345 குழந்தைகளுக்கு நிதி உதவி அளிக்கப்பட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.