30 Years of Veera: ரஜினிகாந்த் - இளையராஜா காம்போவின் கடைசி படம்! லாஜிக்குடன் சொல்லப்பட்ட ரெண்டு பொண்டாட்டி கதை
சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்தின் படத்துக்கு இசைஞானி இளையராஜா இசையமைத்த கடைசி படமாக வீரா உள்ளது. ரெண்டு பொண்டாட்டி கதையான இந்த படத்தை லாஜிக்குடன் ரசிகர்களை நம்பவைத்திருப்பார்கள்.

தெலுங்கில் மோகன் பாபு நடிப்பில் வெளியாகி சூப்பர் ஹிட்டான அல்லரி மோகுடு படத்தின் தமிழ் ரீமேக் தான் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான வீரா திரைப்படம். ரீமேக் என்ற ஷாட் பை ஷாட் என்று இல்லாமல் அந்த படத்தின் மையக்கதையை வைத்து தமிழுக்கு ஏற்றவாறும், ரஜினியின் ரசிகர்களுக்கு ஏற்றவாறும் இந்த படத்தின் திரைக்கதையை அமைத்திருப்பார் படத்தின் தயாரிப்பாளரும், திரைக்கதை ஆசிரியருமான பஞ்சு அருணாச்சலம்.
ரஜினிகாந்த் - சுரேஷ் கிருஷ்ணா கூட்டணி
அண்ணாமலை படத்தின் மாஸ் ஹிட்டுக்கு பிறகு ரஜினிகாந்த் - சுரேஷ் கிருஷ்ணா கூட்டணி மீண்டும் இந்த படத்தில் இணைந்தனர். பாட்ஷா கதையை தான் சுரேஷ் கிருஷ்ணா எடுக்க விரும்பியுள்ளார். ஆனால் ரஜினி கேட்டுகொண்டதற்கு இணைங்க வீரா படத்தை எடுக்க சுரேஷ் கிருஷ்ணா ஒப்புக்கொண்டாராம்.
ஒரிஜினல் தெலுங்கு பதிப்பின் கதை ரஜினிக்கு கொஞ்சம் கூட பொருத்தமாக இல்லை என சுரேஷ் கிருஷ்ணா நினைத்துள்ளார். அதிலும் இரண்டு பொண்டாட்டி கதை என்பதை ரசிகர்களிடம் வரவேற்பு கிடைக்குமா என்கிற சந்தேகமும் இருந்துள்ளது.