Mamannan: ‘மாமன்னன்’ திரைப்பட வழக்கு; நீதிமன்றம் தலையிட முடியாது - ஐகோர்ட் திட்டவட்டம்!
Mamannan: உதயநிதி ஸ்டாலின் நடிப்பில் உருவான மாமன்னன் திரைப்படத்துக்கு தடை கோரிய மனுவை அவசர வழக்காக விசாரிக்க உயர் நீதிமன்ற மதுரைக் கிளை மறுத்துவிட்டது.
திருநெல்வேலி மாவட்டம் பாளையங்கோட்டையை சேர்ந்த மணிகண்டன் என்பவர் உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் மனுத்தாக்கல் செய்திருந்தார். அதில், "இயக்குனர் மாரி செல்வராஜ் ‘பரியேறும் பெருமாள்’, ‘கர்ணன்’, தற்போது ‘மாமன்னன்’ போன்ற குறிப்பிட்ட சமூகத்தை சார்ந்த படங்களை எடுத்து வருகிறார். கடைசியாக இவர் எடுத்த கர்ணன் படத்தில் கொடிக்குளம் கிராமத்தில் நடைபெற்ற சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டு இருந்தது.
ட்ரெண்டிங் செய்திகள்
தற்போது உள்ள சமூகத்திற்கு இது போன்ற சம்பவங்கள் நினைவில் இல்லை. ஆனால், அதனை நினைவு கூறும் விதமாக கர்ணன் படம் இருந்தது. தற்போது இயக்குனர் மாரி செல்வராஜ் இயக்கியுள்ள 'மாமன்னன்' ஜூன் 29ம் தேதி திரைக்கு வரவுள்ளது. இதனுடைய பாடல்கள் மற்றும் ட்ரெய்லர் ஆகியவை இரு சமூகத்திற்கு இடையே பிரச்சனையை காட்டும் விதமாகவே அமைந்துள்ளது.
தென்காசி மாவட்டத்தில் சுதந்திரப் போராட்டத்தில் ஈடுபட்ட காத்தப்ப புலிதேவன் என்பவரை மாமன்னன் என அழைப்பார்கள். அவரை தவறாக சித்தரிக்கும் வண்ணம் இப்படம் அமைந்துள்ளது. மேலும், இப்படத்தில் கதாநாயகனாக நடித்துள்ள உதயநிதி, தமிழக சட்டமன்ற உறுப்பினராகவும், இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு துறை அமைச்சராகவும் உள்ளார். இது இந்திய அரசியலமைப்புச் சட்டம் 173 (ஏ) க்கு எதிராக உள்ளது.
இப்படம் வெளிவந்தால் இரு வேறு சமூகத்திற்கு இடையே பிரச்சனை ஏற்பட வாய்ப்புள்ளது. எனவே, 29.06.2023 அன்று ‘மாமன்னன்’ படத்தை வெளியிட இடைக்கால தடை விதிக்கவும், இப்படத்தை திரையிலோ, எந்த ஓடிடி தளம் போன்ற வேறு ஏதேனும் தளத்திலோ ஒளிபரப்பவும் தடைவிதித்து உத்தரவிட வேண்டும்.” என்று அந்த மனுவில் குறிப்பிட்டு இருந்தார்.
இந்நிலையில் இந்த மனுவை அவசர வழக்காக விசாரிக்குமாறு நீதிபதிகள் ஆர்.சுப்பிரமணியன், எல்.விக்டோரியாகவுரி அமர்வு முன்பு மனுதாரர் தரப்பில் இன்று முறையீடு செய்யப்பட்டது. அப்போது மனுதாரர் தரப்பில், 'மாமன்னன்' திரைப்படம் வெளியானால் இருதரப்பினர் இடையே மோதல் ஏற்படும் வாய்ப்பு உள்ளது என தெரிவிக்கப்பட்டது.
அதற்கு நீதிபதிகள், ”இந்த மனுவை அவசர வழக்காக விசாரணை செய்ய தேவையில்லை. திரைப்படத்துக்கு திரைப்பட தணிக்கை துறை அனுமதி வழங்கிய பிறகு நீதிமன்றம் தலையிட முடியாது, சட்டம்- ஒழுங்கு பிரச்சனை ஏற்பட்டால் காவல்துறையினர் பார்த்து கொள்வார்கள். திரைப்படம் மக்கள் பார்க்கவே. இரண்டு நாட்களில் அதனை மறந்து விடுவார்கள். பேச்சு உரிமை, கருத்து உரிமை அனைவருக்கும் உள்ளது” எனத் தெரிவித்து விசாரணையை ஒத்திவைத்து உத்தரவிட்டனர்.
சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:
Google News: https://bit.ly/3onGqm9
தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், புகைப்பட கேலரி, வெப் ஸ்டோரி, வேலைவாய்ப்பு தகவல்கள், சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.
டாபிக்ஸ்