Bobby Simha: விடாது துரத்தும் கொடைக்கானல் விவகாரம்.. நடிகர் பாபி சிம்ஹா மீது பாய்ந்தது வழக்கு!
கொடைக்கானல் காவல் நிலையத்தில் பிரபல நடிகர் பாபி சிம்ஹா மற்றும் கேஜிஎப் படத்தில் வில்லனாக நடித்த ராமசந்திரா ஆகிய இருவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது .
திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் வில்பட்டி ஊராட்சிக்கு உட்பட்ட பேத்துப்பாறை பகுதியில் நடிகர் பாபி சிம்ஹாவிற்கு 15 சென்ட் நிலம் சொந்தமாக இருக்கிறது. இதில் அவர் வீடு கட்டி வருகிறார். இந்த வீட்டின் கட்டிடப் பணிகளை ஒப்பந்த அடிப்படையில் கொடைக்கானலைச் சேர்ந்த ஒப்பந்ததாரரான ஜமீர் என்பவர் கவனித்து வந்தார். இந்த கட்டிட பணிகள் 90 சதவிகிதம் முடிந்ததாக கூறப்படுகிறது.
ட்ரெண்டிங் செய்திகள்
இதனிடையே பாபி சிம்ஹாவிற்கும் ஒப்பந்தகாரர் ஜமீருக்கும் கட்டிட கட்டுமான சம்மந்தமாக முரண்பாடுகள் ஏற்பட்டு கட்டிட பணிகள் நிறுத்தப்பட்டுள்ளது. பாபி சிம்ஹா ஒப்பந்தகாரருக்கு பல லட்சம் ரூபாய் பணம் தர வேண்டும் என சொல்லப்படுகிறது. மேலும், ஜமீர் அவரது தந்தை இருவரும் பாபிசிம்ஹாவிடம் பணம் கேட்கும் போது பாபி சிம்ஹா முதியவர் என்று பாராமல் ஜமீரின் தந்தையை தகாத வார்த்தைகளால் திட்டியதாக சொல்லப்படுகிறது.
இதனிடையே ஒப்பந்தகாரர் ஜமீரின் உறவினரான உஷேன்,பாபி சிம்ஹா இருவரும் பள்ளி நண்பர்களாக இருந்து வந்துள்ளனர். இதன் காரணமாக இந்த கட்டிட பணி ஒப்பந்தம் ஜமீருக்கு கிடைத்ததால் இது குறித்து ஜமீர் உஷேனிடம் தெரிவித்தாக சொல்லப்படுகிறது. இதன் அடிப்படையில் உஷேன் பாபி சிம்ஹாவிடம் அறிவுரை கூற முற்பட்ட போது இந்த விஷயத்தில் தலையிட வேண்டாம் என கூறியதாக சொல்லப்படுகிறது.
இதனையடுத்து உஷேனுக்கு சொந்தமான தங்கும் விடுதி செண்பகனூர் பகுதியில் உள்ளது. இந்த விடுதிக்கு கடந்த மாதம் 20ஆம் தேதி பாபி சிம்ஹா மற்றும் கேஜிஎப் படத்தின் வில்லன் நடிகரான ராமசந்திரா ராஜி மற்றும் அடையாளம் தெரியாத இருவர் உள்ளிட்ட நான்கு நபர்கள் சென்றதாகவும் இந்த விஷயத்தில் தலையிட்டால் கொன்று விடுவேன் என்று மிரட்டல் விடுத்ததாகவும், அதிக சத்தம் எழுப்பியதாகவும் விடுதியில் இருந்த ஊழியர்கள் தெரிவிக்கின்றனர்.
இதனையடுத்து விடுதியின் மேலாளர் காவல் நிலையத்திலும் , மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மற்றும் டிஐஜி-க்கும் புகார் அளித்துள்ளனர். இதன் அடிப்படையில் கடந்த 10 ஆம் தேதி தபாலில் வரப்பெற்ற புகார் அடிப்படையில் பாபி சிம்ஹா மற்றும் ராமசந்திரா ராஜி அடையாளம் தெரியாத இருவர் உள்ளிட்ட நான்கு நபர்கள் மீது கொடைக்கானல் காவல் நிலையத்தில் இரண்டு பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும் ஒப்பந்தகாரரின் ரூ.10 லட்சம் மதிப்புள்ள பொருட்களை பாபி சிம்ஹா திருடி கட்டிடத்திற்குள் வைத்துள்ளதாகவும் புகார் மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த 1 ஆம் தேதி பாபி சிம்ஹா கொடைக்கானல் காவல் நிலையத்தில் ஒப்பந்தகாரர் ஜமீர் மற்றும் அவரது தந்தை, ஒப்பந்தகாரரின் உறவினர் உஷேன், பேத்துப்பாறை மகேந்திரன் உள்ளிட்ட நான்கு நபர்கள் மீது புகார் அளிக்கப்பட்டு 3 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த வழக்கில் 3வது நபர் உஷேன் தற்போது பாபி சிம்ஹா மற்றும் கேஜிஎப் வில்லன் ராமசந்திரா ராஜி மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதும் குறிப்பிடத்தக்கது. இரண்டு தரப்புகளில் இருந்தும் மாறி மாறி கொடுக்கப்படும் புகார்களால் தொடர்ந்து இரண்டு தரப்புகளிலும் வழக்கு பதிவு செய்யப்பட்டு வருவது தற்போது காவல் நிலையத்தில் குழப்பத்தை ஏற்படுத்தி வருகிறது.
சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:
Google News: https://bit.ly/3onGqm9
தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், ஆன்மிகம், புகைப்பட கேலரி, வெப் ஸ்டோரி, வேலைவாய்ப்பு தகவல்கள், சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.
டாபிக்ஸ்