MotoGP race in india: முதல் முறையாக இந்தியாவில் மோட்டோஜிப் ரேஸ்
Sep 21, 2022, 11:42 PM IST
உலக அளவில் புகழ் பெற்ற மோட்டோஜிபி பைக் ரேஸ் முதல் முறையாக இந்தியாவில் நடைபெறவுள்ளது. அத்துடன் ஏழு ஆண்டுகளுக்கு இந்த பைக் பந்தயத்தை நடத்துவதற்கான ஒப்பந்தமும் கையெழுத்தாகியுள்ளது.
70 ஆண்டுகளுக்கு மேலாக நடைபெற்று வரும் மோட்டோஜிபி பைக் ரேஸ் உலகம் முழுவதும் பல்வேறு நாடுகளில் நடைபெற்றுள்ளது. இதையடுத்து முதல் முறையாக இந்த தொடரை நடத்தும் வாய்ப்பை இந்தியா பெற்றுள்ளது.
இதையடுத்து 2023ஆம் ஆண்டுக்கான மோட்டோஜிபி உலக சாம்பியன்ஷிப் போட்டிகள் இந்தியாவில், 'கிராண்ட் பிரிக்ஸ் ஆப் பாரத்' என்ற பெயரில் நடத்தப்பட உள்ளது. இந்த பந்தயங்கள் தில்லி அருகே நொய்டா நகரில் உள்ள புத்தா சர்வதேச சர்க்கியூட் மைதானத்தில் நடைபெற உள்ளது. இந்தப் போட்டியில் 19 நாடுகளை சேர்ந்த பைக் ரேஸ் பந்தய வீரர்கள் பங்கேற்க உள்ளனர்.
முன்னதாக, மோட்டோஜிபியின் வர்த்தக உரிமையாளர் டோர்னா மற்றும் நொய்டாவின் ஃபேர் ஸ்ட்ரீட் ஸ்போர்ட்ஸ் அமைப்பினர் இந்த பந்தயத்தை ஏழு ஆண்டுகளுக்கு இந்தியாவில் நடத்துவதற்கு கையொப்பமிட்டுள்ளனர்.
'மோட்டோஜிபி ரேஸ் போட்டிகளை தொடர்ந்து எலெக்ட்ரிக் பைக்குகளை மட்டும் பங்கேற்கும் மோட்டோ ஈ ரேஸ் போட்டிகளும் இந்தியாவில் நடைபெறும் பந்தயத்தில் அறிமுகப்படுத்தவுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்மூலம் ஆசியாவிலேயே முதல்முறையாக மோட்டோஈ பைக் ரேஸ் இந்தியாவில் நடைபெறவுள்ளது.