Pay CM poster: கர்நாடகாவில் வைரலாகும் Pay CM போஸ்டர் முக்கிய செய்திகள் (செப்.21)
Sep 21, 2022, 06:54 PM IST
பெங்களூரு ‘PAYCM' என கியூ ஆர் கோடுடன் ஆன போஸ்டர்கள், உக்ரைன் மீதான போர் உள்பட பல முக்கிய செய்திகளை இந்த தொகுப்பில் சுருக்கமாக காணலாம்.
ஸ்பைஸ்ஜெட் நிறுவனத்துக்கு சொந்தமான விமானங்களுக்கு விதிக்கப்பட்ட கட்டுப்பாட்டை விமான போக்குவரத்து இயக்குநரகம் அக்டோபர் 29ஆம் தேதி வரை நீட்டித்துள்ளது.
இந்தியாவில் 15 வயதுக்கு மேற்பட்டவர்களின் வேலையின்மையில் 37.3 சதவீதத்துடன் ஹரியாணா மாநிலம் முதலிடத்தில் உள்ளது.
மும்பை நவசேவா துறைமுகத்தில் 22 ஆயிரம் கிலோ ஹெராயின் போதைப்பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
ஆந்திராவில் காகித தட்டுகள் தயாரிக்கும் தொழிற்சாலையில் ஏற்பட்ட தீ விபத்தில், தொழிற்சாலையின் உரிமையாளர் உள்ளிட்ட 3 பேர் உடல் கருகி உயிரிழந்துள்ளனர்.
பிகார் மாநிலத்திலுள்ள பகாஹா மாவட்டத்தில் 4 கண்களுடனும், விமானம் போன்ற துடுப்புகளையும் உடைய அரியவகை மீன் ஒன்று கண்டெடுக்கப்பட்டுள்ளது.
வெளிநாடுகளிலிருந்து இந்தியாவுக்கு கடத்தி வரப்பட்ட 394 தங்கக் கட்டிகளை வருவாய் புலனாய்வுத் துறையினர் பறிமுதல் செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஈரானில் ஹிஜாப் அணியாததால் 22 வயது இளம் பெண் ஒருவர் காவலர்களால் அடித்துக் கொல்லப்பட்ட சம்பவத்தைத் தொடர்ந்து அந்நாட்டில் ஹிஜாபுக்கு எதிராக பெண்களின் போராட்டம் தீவிரமடைந்துள்ளது.
கடந்த 2021ஆம் ஆண்டு நாளொன்றுக்கு ரூ.1,612 கோடி சொத்துக்களை சம்பாதித்து உலகின் 2வது பெரிய பணக்காரராக கெளதம் அதானி முன்னேறியுள்ளதாக சமீபத்தில் வெளியான அறிக்கை தெரிவித்துள்ளது.
மறைந்த பாலிவுட் நகைச்சுவை நடிகர் ராஜு ஸ்ரீவஸ்தவாவை கெளரவிக்கும் விதமாக உத்தரப்பிரதேச சட்டப்பேரவையில் 2 நிமிடங்களுக்கு மெளன அஞ்சலி செலுத்தப்பட்டது.
பி.எம். கேர்ஸ் நிதியின் அறங்காவலர்களாக ரத்தன் டாடா, உச்ச நீதிமன்ற முன்னாள் நீதிபதி கே.டி.தாமஸ் உள்ளிட்டோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.
கர்நாடக அமைச்சர்கள் ஒப்பந்ததாரர்களிடம் கமிஷன் கேட்பதாக புகார் எழுந்துள்ள நிலையில், பெங்களூருவிலுள்ள அம்மாநில முதல்வர் பசவராஜ் பொம்மைக்கு எதிராக ‘PAYCM' என கியூ ஆர் கோடுடன் ஆன போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஜார்க்கண்ட் மாநிலத்தில் கூட்டு பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கிய குற்றவாளியின் வீடு தகர்க்கப்பட்டது.
ஜெய்ப்பூர் முதல் தில்லி வரையிலான மேம்பாலம் ஆய்வுப் பணிக்காக மூடப்பட்டதால் அப்பகுதியில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது.
புதுச்சேரியில் கர்ப்பிணி மருமகள் உயிரை மாய்த்துக் கொண்ட சோகத்தைத் தாங்காமல் மாமியாரும் உயிரை மாய்த்துக் கொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஆஸ்திரேலியாவின் மேற்கு கடற்கரையோரம் 230க்கும் அதிகமான திமிங்கலங்கள் கரை ஒதுங்கியதால் இயற்கை ஆர்வலர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.
தில்லியில் வேகமாக ஓடிய டிரக் ஒன்று சாலைத் தடுப்பில் பாய்ந்ததில் அங்கு தூங்கிக் கொண்டிருந்தவர்களில் 4 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.
குடியரசு துணைத் தலைவர் ஜக்தீப் தன்கர் மிகப் பெரிய மாயாஜாலக்காரர் என்று ராஜஸ்தான் முதல்வர் அஷோக் கெலாட் கிண்டலடித்துள்ளார்.
தமிழ்நாட்டுக் கவிஞரும், எழுத்தாளருமான மீனா கந்தசாமிக்கு இந்த ஆண்டுக்கான ‘பென் ஜெர்மனி’ (PEN Germany) என்ற சர்வதேச விருது அறிவிக்கப்பட்டுள்ளது.
14 வழக்கு விசாரணைகளை ரத்து செய்வதாக உச்ச நீதிமன்றத்தில் சிபிஐ தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
உக்ரைன் மீதான போரை தீவிரப்படுத்தும் நோக்கத்தில் ரஷியாவில் படைகளை திரட்டுமாறு அதிபர் புதின் உத்தரவிட்டுள்ளார்.
டாபிக்ஸ்