Benefits of Cardamon:நறுமணம் தரும் ஏலக்காய் நுரையீரலுக்கு என்ன நன்மை செய்யும்?
Dec 03, 2022, 05:27 PM IST
ஏலக்காய் இல்லாத சமையல்கட்டே இருக்காது என்று சொன்னால் அது மிகையில்லை. எல்லா வீட்டிலும் கட்டாயம் இருக்கும். நாம் சமைக்கும் உணவுக்கு சுவையையும் மணத்தையும் மட்டும்தான் இந்த மசாலா ஐட்டம் தரும் என்று நினைத்தால் அதைப் பற்றி நாம் இன்னும் நிறையத் தெரிந்து கொள்ள வேண்டும் என்று அர்த்தம்.
நம் ரத்தத்தை சுத்தப்படுத்தும் நுரையீரலுக்கு இந்த ஏலக்காய் மிகுந்த வலுவை சேர்க்கும் என்றால் ஆச்சரியப்பட்டுப் போவீர்கள்.
ஆம். அப்படியொரு மகத்தான சக்தி இந்த ஏலக்காய்க்கு உண்டு.
இன்றைய சூழலில் நம் வாழும் தேசத்தில் காற்று மாசுபாடு சகிக்க முடியாத அளவுக்குச் சென்று விட்டது. அப்படிப்பட்ட நச்சுத்தன்மை நிறைந்த காற்றின் பாதிப்பின் மத்தியில் நமக்கு இரண்டே வாய்ப்புதான் மிஞ்சியுள்ளது.
ஒன்று இந்த மாசுபாடுக்குக் காரணமாக அரசின் மீது பழியைத் தூக்கிப் போடலாம். ஏட்டளவில்தான் மாசுக்கட்டுப்பாடு விதிகளைப் பின்பற்றுகின்றனர் எனத் தூற்றிவிடலாம். மற்றொன்று, பண்டைய காலந்தொட்டும் நம் முன்னோர்கள் பின்பற்றி வந்த கைவைத்தியம். அதிலும் குறிப்பாக நம்மை எளிதாகத் தொற்றிக் கொள்ளும் இருமல், ஜலதோஷம், காய்ச்சல் போன்றவற்றுக்கு நமது பாட்டி வைத்தியமே கைமேல் பலன் தந்து வந்துள்ளதால் அதைப் பின்பற்றுவதாகும்.
அந்தவகையில் பாட்டி வைத்தியத்தில் முக்கிய இடத்தைப் பிடித்துள்ள ஏலக்காய், உள்ளங்கை நெல்லிக்காயாகும். ஆம் அது கிடைத்தற்கரிய அருமருந்தாகும். நாம் அன்றாடம் சமைக்கும் உணவுகள், கறி வகைகள், அருசுவை பானங்கள், இனிப்புகள் என எல்லாவற்றிலும் நீக்கமற நிறைந்திருக்கும் இந்த ஏலக்காய்.
அப்படிப்பட்ட ஏலக்காய் நம் நுரையீரலின் செயல்பாட்டை எப்படி தூண்டிவிடுகிறது என்பதை நாம் இப்போது அறிந்து கொள்ள இருக்கிறோம்.
கபத்தை குறைத்து இயற்கையான சுவாசப் புத்துணர்ச்சி
நுரையீரலில் கபம் உண்டாவது ஒரு நோயல்ல. மாறாக அது நம் உடலில் இயற்கையிலே உருவாகும் எதிர்ப்புச் சக்தியாகும். காற்றில் நிறைந்துள்ள நச்சுத்தன்மை, தூசுகளுக்கு எதிராக போராடுவதற்குத்தான் இவ்வாறு கபம் உண்டாகிறது. ஆனால் அந்தக் கபம் அல்லது சளியானது அதிகமாக நுரையீரலில் உற்பத்தியாகிவிட்டால் அதுவே உடலுக்குத் தீங்காகவும் அமைந்து முச்சுத்திணறலுக்குக் காரணமாகிவிடும். இந்தக் கபம் பல்வேறு அபாயகரமான நோய்களின் ஊற்றுக்கண் ஆகிவிடும்.
இந்தச் சூழலில்தான் ஏலக்காய் நமக்குக் கை கொடுக்கும். ஏலக்காயில் உள்ள ஒரு வகை மூலப்பொருளான சினியோல் அல்லது சினியோலியில் அடங்கியிருக்கிறது அந்த விசேஷம். நுரையீரலில் பீடித்துள்ள கபத்தை உருக்கி வெளியேற்றும் மாயசக்தி இந்த சினியோலிக்கு உண்டு. நமது சுவாச மண்டலத்துக்கு மட்டுமல்லாமல் ஜீரண மண்டலத்துக்கும் இதனால் பல நன்மைகள் கிடைக்கிறது.
ஆஸ்துமா, பிராங்கைட்டீஸ், நிமோனியா பாதிப்பு உள்ளவர்களுக்கும் சுவாசப்பாதையில் வீக்கம் மற்றும் அதிக அளவு கபச்சுரப்பு காரணமாக அவதிப்படுபவர்களுக்கும் சிறப்பான நிவாரணத்தை சினியோலி அளிக்கும்.
சுவாசப்பாதை வீக்கத்தை குறைக்கும்
அதிகப்படியான மாசுபாடு மற்றும் நச்சுத்தன்மைக்கு ஆளாகும்பட்சத்தில் நமது சுவாசப்பாதை அல்லது சுவாசக்குழாய்கள் உள்கூடி வீக்கம் உண்டாகிறது. இதனால் சுவாசம் தடைப்படுகிறது. இந்த இம்சையைப் போக்குவதற்கு நமக்கு ஏலக்காய் கை கொடுக்கிறது. உடலுக்குக் குளிர்ச்சியைத்தருவது மட்டுமல்லாமல் இந்த நறுமண ஐட்டம், சுவாசக்குழாய் உள்வீக்கத்தை தடுக்கும் ஒரு சக்திவாய்ந்த மருந்தாகும்.
மிகுதியான ஆன்ட்டி-ஆக்ஸிடெண்ட்
ஏலக்காயில் ஆற்றல்மிக்க ஏராளமான ஆன்ட்டி-ஆக்ஸிடெண்ட்கள் உள்ளன. மாசுபாடு காரணமாக உருவாகும் ஃப்ரி ராடிகல்லை எதிர்த்து போராடும் திறன் உள்ள இந்த ஆன்ட்டி- ஆக்ஸிடெண்டுகள் நமது சுவாசமண்டலம் சீக்கிரமே முதிர்ச்சியடைவதைத் தடுக்கின்றன.
இதுமட்டுமல்ல, ஏலக்காயில் மாங்கனீஸ் தாது நிரம்பியுள்ளது. இந்த தாதுவின் விசேஷ குணமே விஷமுறிவாகும். கொஞ்சம் தண்ணீரில் இஞ்சி, ஒரிரு ஏலக்காய்களைப் போட்டு காய்ச்சினால், மிகச்சிறந்த இயற்கையான நச்சு முறிவு கசாயம் தயார்!
இந்தக் கசாயத்தைக் குடித்தால் உங்களது கல்லீரல், நுரையீரல் மற்றும் சிறுநீரகங்களில் படிந்திருக்கும் நச்சுத்தன்மையை அறவே போக்கிவிடும்.
பல்லாயிரக்கணக்கான ஆண்டுகள் பழமையான நமது ஆயுர்வேத மருத்துவத்தில்கூட ஏலக்காயின் மகிமை பற்றி எடுத்துரைக்கப்பட்டுள்ளது. நெஞ்சுச்சளியை விடாமல் பிடித்துத் தொங்கி கபத்தை உருவாக்கும் காரணிகளை ஓடஓட விரட்டியடித்துவிடும் என்றால் பார்த்துக் கொள்ளுங்களேன்.
ஏலக்காயில் அடங்கியுள்ள மூலப்பொருள் சினியோலியில் சக்திவாய்ந்த கிருமிநாசினிகள் மற்றும் ஆன்ட்டி செப்டிக் குணங்கள் உள்ளன. இதனால், நுரையீரலை மறைமுகமாகவும் நேரடியாகவும் பாதிக்கக்கூடிய நுண்கிருமிகள் அழிக்கப்படும்.
பயன்படுத்தும் முறைகள்:
ஏலக்காய் டீ – டீ கொதித்து வரும்போது 1-2 ஏலக்காய்களை சேர்க்கவும்.
இந்தியன் கறிமசால் பவுடர் – மசாலா பொடிகளில் இதை கலக்கலாம்.
கார்டமம் எசன்ஷியல் ஆயில் – கார்டமம் எசன்ஷியல் ஆயிலை பயன்படுத்தி ஆவிபிடித்தல், வேப்பரைஸர்களில் ஊற்றி பீய்ச்சி அடித்தல் போன்றவற்றை செய்தால் அபார பலன் கிடைக்கும்.
பொடித்து தூளாக்கப்பட்ட விதைகள் – ஸ்மூத்தீஸ், லட்டு, எனர்ஜி பார்கள், ஷேக்குகளில் கலந்து உட்கொள்ளலாம்.
ஏலக்காய் பொடியை சேர்த்து காபி தயாரிக்கலாம்- 1 கப் குளிர்ந்த நீரை எடுத்துக் கொள்ளுங்கள்.
தேவைக்கு ஏற்ப சன்னமாக அரைக்கப்பட்ட காபித்தூள் 1 டேபிள் ஸ்பூன் சேர்க்கவும். இது காபியினால் ஏற்படும் அமிலத்தன்மையைத் தணிக்கப் பயன்படும். அவ்வளவுதான். எப்படி ஏலக்காய் டீ தயாரித்தோமோ அப்படியே இந்த ஏலக்காய் காபியையும் தயாரிக்க வேண்டியதுதான்.
தொண்டைக் கரகரப்பைப் போக்கும் லொசாஞ்சஸ் எனப்படும் மருந்து மிட்டாய்கள் போல 1-2 ஏலக்காய்களைச் சப்பிச் சாப்பிடுங்கள்.
மசாலா டீ:
தேவையான பொருட்கள்s:
1/4 கப் கிராம்பு.
¼ கப் பச்சை ஏலக்காய்
1/4 கப் கறுப்பு ஏலக்காய்.
1 டேபிள்ஸ்பூன் சோம்பு.
6 அங்குல நீள (இலங்கை) பட்டை
2 டேபிள் ஸ்பூன் சுக்குத்தூள்.
1 ஜாதிக்காய் (துருவியது)
செய்முறை:
ஜாதிக்காய் துருவல் தவிர எல்லா மூலப்பொருட்களையும் மிக்ஸியில் இட்டு கரகரப்பாக அரைக்கவும். அதில் ஜாதிக்காய் துருவலை சேர்க்கவும்.
இந்தக் கலவையை காற்றுப்புகாத கன்டெய்னரில் நிரப்பி ஒரு மாதத்துக்கு விட்டுவிடவும்.
பின்னர், ஒரு கப் இந்தியன் மசாலா டீக்கு, இந்த கலவையில் இருந்து கால் டீஸ்பூன் அளவு என்ற விகிதத்தில் கலந்து அருந்தலாம். அல்லது 1 கப் வெந்நீரில் கால் டீஸ்பூன் இந்தக் கலவையை சேர்த்து குடிக்கலாம். புத்துணர்ச்சியை பெறலாம்.
எச்சரிக்கை!: நிறைய பேருக்கு ஏலக்காய் என்றால் அலர்ஜி அல்லது ஒவ்வாமை ஏற்படலாம். எனவே கொஞ்சூண்டு அளவு எடுத்து பயன்படுத்துங்கள். ஏதாவது அசௌகரியங்கள் ஏற்பட்டால் உடனடியாக நிறுத்தி விடுங்கள்.
பெரிய அளவில் மண்ணீரல் கல் உபாதை உடையவர்கள் மிகுந்த எச்சரிக்கையுடன் ஏலக்காயை உட்கொள்ள வேண்டும். சிறந்த அறிவுரை என்று சொன்னால் ஒரு நிபுணரின் ஆலோசனைப்படி சாப்பிடுவது சாலச் சிறந்தது.
மருந்துகளுடன் வினையாற்றல் நிகழ்வதை அறவே தவிர்க்க வேண்டும் (குறிப்பாக எச்.ஐ.வி., ஐபிஎஸ், மனஅழுத்தத்தைப் போக்கும் மருந்துகள் அல்லது ஆஸ்பிரின்)
எந்த நறுமணப் பொருளையும் மிதமிஞ்சி சாப்பிடக்கூடாது. அதற்கு ஏலக்காயும் விதிவிலக்கல்ல. 1-2 ஏலக்காய்கள் போதும்.