தல்லாகுளம் பிரசன்ன வெங்கடாஜலபதி கோயில்!
Jul 07, 2022, 02:34 PM IST
தல்லாகுளம் அருள்மிகு பிரசன்ன வெங்கடாஜலபதி கோயில் சிறப்புகள் குறித்து இங்கே காண்போம்.
மதுரை நகரத்தின் மையப்பகுதியில் அமைந்துள்ள தல்லாகுளம் அருள்மிகு பிரசன்ன வெங்கடாஜலபதி கோயில், 400 ஆண்டுகள் பழமை வாய்ந்தது. மதுரையை ஆண்ட நாயக்க பேரரசின் வல்லமை பெற்ற அரசராக திகழ்ந்தவர் திருமலை நாயக்கர்.
சமீபத்திய புகைப்படம்
திருப்பதி வெங்கடாஜலபதியின் பக்தரான இவர், எப்பொழுதும் பெருமாளின் அருளாசி தனக்கு கிடைக்க வேண்டும் என்பதற்காக திருப்பதியில் பூஜைகள் நடக்கும் காலங்களில் தனது அரண்மனையில் இருந்தவாறு வழிபாடுகள் மேற்கொள்வது வழக்கம்.
இந்நிலையில் ஒரு நாள் திருமலை நாயக்கர் மன்னரின் முன்பாக பிரசன்னமான வெங்கடாஜலபதி மதுரையில் தனக்கு கோயில் கட்டி வழிபாடு நடத்த உத்தரவிட்டதாக கூறப்படுகிறது. இதன் அடிப்படையில் ஆஞ்சநேயர் சுயம்புவாக எழுந்த தல்லாகுளத்தில் பெருமாளுக்கு கோயில் கட்டி வழிபட தொடங்கினார்.
தெற்கு பார்த்தவாறு பெருமாள் வீற்றிருக்கும் ஒரே வைணவ தலமாகும். 108 திவ்ய தேசங்களில் தல்லாகுளம் பெருமாள் கோயில் இல்லை எனினும் குறிப்பிடத்தகுந்த பழமை சிறப்பு வாய்ந்த கோயில்களில் ஒன்றாக போற்றப்படுகிறது.
இக்கோயில் மதுரை கள்ளழகர் திருக்கோயிலுக்கு பாத்தியப்பட்டதாகும். இக்கோயிலுக்கு சொந்தமான திருமுக்குளமும் வைகையோடு இணைக்கப்பட்டிருந்த வாய்க்கால் வழியாக தண்ணீர் நிரப்பப்பட்டு காணப்படுவது இதன் தனிச்சிறப்பு.
இக்கோயிலில் வைகுண்ட ஏகாதசி, ஆனி பூரணம், புரட்டாசி பிரம்மோற்சவம் ஆகியவற்றோடு சித்திரை திருவிழா உள்ளிட்டவை வெகு விமர்சையாக கொண்டாடப்பட்டு வருகிறது. மதுரையில் இருந்து திருப்பதிக்கு செல்ல இயலாதவர்கள் இந்த பெருமாளை வழிபடுவதன் மூலமாக திருப்பதி வெங்கடாஜலபதி நேரில் சென்று வணங்கிய பலனை பெறுவார்கள் என்பது காலம் காலமாக நிலவி வரும் ஐதீகம்.
குழந்தை பேறு, திருமணம், நல்ல வேலை என சகலவிதா ஐஸ்வர்யங்களுக்கும் இந்த கோயிலில் வீற்றிருக்கும் பிரசன்ன வெங்கடாஜலபதியை தொடர்ந்து வழிபடுவதன் மூலம் சகலவித சௌபாக்கியங்களும் தங்களுக்கு கிடைக்கும் என்பது பக்தர்களின் நம்பிக்கையாகும்