அவசர அவசரமாக பஸ் ஸ்டாண்டில் திருமணம் - நொடிப்பொழுதில் மாயமான காதல் ஜோடி!
Ambur: ஆம்பூர் பஸ் ஸ்டாண்டில் அவசர அவசரமாக இளம் பெண்ணுக்கு தாலி கட்டிய கையோடு அங்கிருந்து தப்பியோடிய காதல் ஜோடியை போலீசார் தேடி வருகின்றனர்.
பரபரப்பாக இயங்கி வரும் ஆம்பூர் பேருந்து நிலையத்தில் இளம் பெண்ணுக்கு இளைஞர் ஒருவர் அவசர அவசரமாக தாலி கட்டிய சம்பவத்தின் வீடியோ வெளியாகி சமூக வலைத்தளங்களில் வைரலாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. மாயமான காதல் ஜோடியை காவல் துறையினர் தீவிரமாக தேடி வருகின்றனர்.
ட்ரெண்டிங் செய்திகள்
திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூரில் பல்வேறு தொழில் நிறுவனங்கள், வணிக நிறுவனங்கள், வங்கிகள் செயல்பட்டு வருகின்றன. இதனால் இங்குள்ள பேருந்து நிலையம் பகல் நேரத்தில் எப்போதும் பரபரப்பாக காணப்படும். வெளியூர் செல்லும் பயணிகளின் நடமாட்டமும் அதிக அளவில் இருக்கும்.
இந்த நிலையில் நேற்றிரவு இரவு சுமார் 9 மணியளவில் ஆம்பூர் பேருந்து நிலையத்தில் இளம் காதல் ஜோடி ஒன்று திருமணம் செய்துகொண்டனர். அங்குள்ள கழிவறை பின்புறமாக சென்று யாரும் இல்லாததை அறிந்த இளைஞர் அவசர அவசரமாக தனது காதலிக்கு தாலி கட்டிவிட்டு அதன் பின்னர் மாயமாக மறைந்துவிட்டார். இளம் பெண்ணுக்கு இளைஞர் ஒருவர் தாலி கட்டிய வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
இந்த வீடியோ வைரலாகி வரும் நிலையில் ஆம்பூர் நகர காவல்துறையினர் அந்த பகுதிக்கு சென்று அவசர அவசரமாக திருமணம் செய்து கொண்ட காதல் ஜோடி யார்? என்பது குறித்து விசாரணை செய்தனர். அவர்கள் எந்த பகுதியைச் சேர்ந்தவர்கள் என்பது குறித்தும் அங்குள்ள கடைகளில் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். பேருந்து நிலையத்தின் அருகில் உள்ள சிசிடிவி காட்சிகளையும் ஆய்வு செய்து காதல் ஜோடியை தேடி வருகின்றனர்.
மேலும், இரவு நேரங்களில் ஆம்பூர் பேருந்து நிலையத்தில் காதல் ஜோடி மற்றும் சமூக விரோத செயல்கள் அதிகமாக நடப்பதாக கூறப்படும் நிலையில், தற்போது பேருந்து நிலையத்திலேயே தாலி கட்டி திருமணம் நடந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், புகைப்பட கேலரி, வேலைவாய்ப்பு, சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.
டாபிக்ஸ்