சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை - முதியவர்களுக்கு ஆயுள் – 2 கொடூர சம்பவங்கள்
திருச்சி மற்றும் அரியலூரில் இரு சம்பவங்களில் இரண்டு சிறுமிகளை பாலியல் வன்கொடுமை செய்த இரண்டு முதியவர்களுக்கு ஆயுள் தண்டனை வழங்கப்பட்டது.
அரியலூர் மாவட்டம் ஸ்ரீபுரந்தான் கிராமத்தைச் சேர்ந்தவர் சுந்தரம் (80). சைக்கிள் கடை வைத்திருந்தார். இவர் கடந்தாண்டு ஆகஸ்ட் மாதம் தன்னிடம் சைக்கிள் பஞ்சர் ஒட்ட வந்தபோது அதே பகுதியைச் சேர்ந்த 9 வயது சிறுமியை வலுக்கட்டாயமாக பாலியல் வன்கொடுமை செய்துள்ளார்.
ட்ரெண்டிங் செய்திகள்
இதனால், உடல்நிலை பாதிக்கப்பட்ட சிறுமி ஜெயங்கொண்டம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றார். இதுகுறித்து ஜெயங்கொண்டம் அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசார் சிறுமியிடம் வாக்குமூலம் பெற்றனர். தொடர்ந்து சிறுமியின் தாயார் அளித்த புகாரின் அடிப்படையில், ஜெயங்கொண்டம் அனைத்து மகளிர் காவல்நிலையத்தில் இந்திய தண்டனைச்சட்டம் மற்றும் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
தொடர்ந்து இந்த வழக்கில் சுந்தரம் கைது செய்யப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்டார். இந்த வழக்கு அரியலூர் மகிளா விரைவு நீதிமன்றத்தில் நடைபெற்றது. இதில் அனைத்து மகளிர் காவல்நிலைய ஆய்வாளர் சுமதி, சுந்தரத்திற்கு எதிரான அனைத்து சாட்சிகள் மற்றும் ஆதாரங்களை நீதிமன்றத்தில் சமர்ப்பித்தார்.
விசாரணைகள் முடிந்து வழங்கப்பட்ட தீர்ப்பில், அரியலூர் மகிளா விரைவு நீதிமன்ற நீதிபதி ஆனந்தன் சுந்தரத்திற்கு 12 ஆண்டுகள் சிறை தண்டணையும் மற்றும் ஒரு லட்ச ரூபாய் அபராதமும் விதித்து தீர்ப்பளித்தார். மேலும் பாதிக்கப்பட்ட சிறுமிக்கு தமிழக அரசு நிவாரண நிதியில் இருந்து ரூ. 2 லட்சம் நிவாரணம் வழங்க உத்தரவிட்டார்.
இதேபோல் திருச்சி உறையூர் பகுதியைச் சேர்ந்தவர் துரை (70). இவர் அதே பகுதியில் வசித்து வந்த 3 வயது சிறுமியை கடந்த 2019ம் ஆண்டு அக்டோபர் 7ம் தேதி மறைவான இடத்திற்கு அழைத்துச் சென்று பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். இச்சம்பவத்தை கண்ட அப்பகுதியைச் சேர்ந்தவர்கள் சத்தம் போட்டவுடன் துரை அங்கிருந்து தப்பியோடிவிட்டார்.
இதுகுறித்து, பாதிக்கப்பட்ட குழந்தையின் பெற்றோர், ஸ்ரீரங்கம் மகளிர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தனர். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து அடுத்தநாள் துரையை கைது செய்தனர். இதுதொடர்பான வழக்கு திருச்சி மகளிர் நீதிமன்றத்தில் நடந்து வந்தது.
வழக்கை விசாரித்த நீதிபதி ஸ்ரீவத்சன், சிறுமியை பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கிய துரைக்கு ஆயுள் தண்டனையும், ரூ. 2 ஆயிரம் அபராதமும் விதித்து தீர்ப்பளித்தார். மேலும், பாதிக்கப்பட்ட சிறுமிக்கு அரசு சார்பில் ரூ.5 லட்சம் நிவாரணம் வழங்க உத்தரவிட்டார். தொடர்ந்து, துரை திருச்சி மத்திய சிறையிலடைக்கப்பட்டார்.
டாபிக்ஸ்