Tiruvar: கொட்டும் மழை: திருவாரூர் மாவட்ட பள்ளிகளுக்கு விடுமுறை: பயிர்கள் நாசம்!
Rain Update: திருவாரூர் மாவட்டத்தில் கனமழை காரணமாக பள்ளிகளுக்கு விடுமுறை.தொடர் மழையின் காரணமாக அறுவடை பணிகள் பாதிப்பு.
வங்க கடலில் நிலவும் காற்றழுத்த தாழ்வு மண்டலத்தின் காரணமாக திருவாரூர் நாகப்பட்டினம் தஞ்சாவூர் கடலூர் மயிலாடுதுறை உள்ளிட்ட மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை மண்டல வானிலை ஆய்வு மையம் அறிவித்திருந்தது.அதன் அடிப்படையில் திருவாரூரில் நேற்று காலை முதல் மிதமான மழை என்பது அவ்வப்போது விட்டுவிட்டு பெய்து வந்தது.
ட்ரெண்டிங் செய்திகள்
இந்த நிலையில் இன்று அதிகாலை முதல் திருவாரூர் மாவட்டம் முழுவதும் கனமழை என்பது விட்டு விட்டு அவ்வப்போது பெய்து வருகிறது.குறிப்பாக திருவாரூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளான நன்னிலம் குடவாசல் குளிக்கரை மாங்குடி சன்னாநல்லூர் உள்ளிட்ட பகுதிகளிலும், திருத்துறைப்பூண்டி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளிலும் மன்னார்குடியில் கோட்டூர் சவளக்காரன் பாமணி கூத்தாநல்லூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளிலும் இந்த கன மழை என்பது இன்று அதி காலை முதல் விட்டு விட்டு பெய்து வருகிறது.
இந்த கனமழையின் காரணமாக திருவாரூரில் மாவட்டத்தில் உள்ள பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவித்து மாவட்ட வருவாய் அலுவலர் சிதம்பரம் உத்தரவிட்டிருக்கிறார்.
திருவாரூர் மாவட்டத்தில் இந்த ஆண்டு நான்கு லட்சம் ஏக்கர் பரப்பளவில் சம்பா மற்றும் தாளடி நெல் சாகுபடி பணிகளில் விவசாயிகள் ஈடுபட்டு வருகின்றனர். தற்பொழுது மாவட்டம் முழுவதும் கடந்த 10 தினங்களுக்கும் மேலாக நெல் அறுவடை பணிகள் என்பது தீவிரமாக நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் விவசாயிகள் தாங்கள் அறுவடை செய்த நெல்லை அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் மூலமாக விற்பனை செய்து வருகின்றனர்.
இந்த நிலையில் இலங்கையை ஒட்டி காற்றழுத்த தாழ்வு மண்டலம் வலு பெற்றுள்ளதையடுத்து டெல்டா மாவட்டங்களில் கன மழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது. இந்த நிலையில் கடந்த இரண்டு தினங்களாக திருவாரூர் நாகப்பட்டினம் உள்ளிட்ட டெல்டா மாவட்டங்களில் விட்டுவிட்டு கனமழை என்பது பெய்து வருகிறது. இந்தத் தொடர் மழையின் காரணமாக விவசாயிகள் மிகப்பெரிய அளவில் கவலை அடைந்துள்ளனர்.
தற்பொழுது திருவாரூர் மாவட்டத்தில் நெல் அறுவடை பணிகள் நடைபெற்று வரும் நிலையில் கடந்த இரண்டு தினங்களாக தொடர்ந்து பெய்து வரும் கனமழையின் காரணமாக அறுவடைப்பனைகள் மிகப்பெரிய அளவில் பாதிக்கப்பட்டிருக்கிறது மேலும் மாவட்டம் முழுவதும் 15,000 ஏக்கர் அறுவடைக்கு தயாராக உள்ள நெல் பயிர்கள் கனமழையால் சாய்ந்துள்ளன. இதனால் விவசாயிகள் மிகப்பெரிய அளவில் வேதனை அடைந்துள்ளனர். ஒரு ஏக்கருக்கு இருபதாயிரம் ரூபாய் வரை செலவு செய்து தற்பொழுது அறுவடை செய்யும் நேரத்தில் இந்த மழை பெய்து வருவதால் நெல் பயிர்கள் மிகப்பெரிய அளவில் பாதிப்பை சந்தித்துள்ளதாக விவசாயிகள் தெரிவித்துள்ளனர். மேலும் தொடர்ந்து மழை பெய்தால் விவசாயிகள் மிகப்பெரிய அளவில் பொருளாதார இழப்பை சந்திக்க கூடும் எனவும் விவசாயிகள் வேதனை தெரிவித்துள்ளனர்.
டாபிக்ஸ்