பள்ளி மாணவன் கொலை விவகாரம்: தலைமை ஆசிரியர் உள்பட 3 ஆசிரியர்கள் சஸ்பெண்ட்
Student Murder: தொட்டியம் பாலசமுத்திரம் பகுதியில் மாணவர்கள் பயிற்சி வகுப்பின்போது ஏற்பட்ட தகராறில் ஒரு மாணவன் கொலை செய்யப்பட்டார். அதில் சக மாணவர்கள் 3 பேர் கைது செய்யப்பட்டனர். மேலும் தலைமை ஆசிரியர், வகுப்பாசிரியர் மற்றும் கணித ஆசிரியர் ஆகியோரை பள்ளிக்கல்வித் துறை சஸ்பெண்ட் செய்தது.
திருச்சி மாவட்டம் முசிறி அருகே தொட்டியம் பால சமுத்திரம் பகுதியில் அரசு மேல்நிலைப்பள்ளி அமைந்துள்ளது. இந்தப் பள்ளியில் தோளூர் பட்டியைச் சேர்ந்த கொத்தனார் வேலை செய்துவரும் கோபி என்பவரது மகன் மௌலீஸ்வரன் என்பவர் பத்தாம் வகுப்பு படித்து வந்தார்.
ட்ரெண்டிங் செய்திகள்
இந்நிலையில் நேற்று பள்ளி வளாகத்தில் மாணவர்களுக்கு பயிற்சி வகுப்புகள் நடைபெற்றது. அப்போது மாணவர்கள் அனைவரும் ஒன்றாக அமர்ந்து படித்துக்கொண்டிருந்தார்கள். சக மாணவர்கள் சிறு சிறு கற்களை தூக்கிப்போட்டு விளையாடியதாக தெரிகிறது. இதில் சில மாணவர்கள் மௌலீஸ்வரன் தான் கற்களை தூக்கி வீசியதாக தவறாக எண்ணி அவரை தாக்கியுள்ளனர். இதில் மாணவன் மௌலீஸ்வரன் படுகாயம் அடைந்தார். இதையடுத்து பள்ளி ஆசிரியர்கள் ஆம்புலன்ஸ் உதவியுடன் தொட்டியம் அரசு மருத்துவமனைக்கு முதலுதவி சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். பின்னர் அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக நாமக்கல் அரசு மருத்துவமனைக்கு மாணவன் மௌலீஸ்வரன் கொண்டு செல்லப்பட்டார்.
அங்கு மாணவனை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர். தகவலறிந்த மௌலீஸ்வரனின் பெற்றோர்கள், உறவினர்கள் பள்ளி வளாகத்தை முற்றுகையிட்டு மாணவனின் இறப்புக்கு நியாயம் கேட்டு மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து போலீசார் அவர்களை சமாதானப்படுத்தினர். அங்கு நிலவிய பரபரப்பால் பள்ளிக்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டது.
இந்நிலையில், மாணவன் கொலை வழக்கில் தலைமையாசிரியர் மற்றும் 2 ஆசிரியர்கள் குற்றவாளிகளாக சேர்க்கப்பட்டனர். இந்த வழக்கில் முன்னதாக அவனுடன் படித்த 3 மாணவர்கள் கைது செய்யப்பட்டு, கூர்நோக்கு இல்லத்தில் அடைக்கப்பட்டனர்.
இந்த சூழலில் பணியின்போது கவனக்குறைவாக இருந்ததாக பள்ளியின் தலைமையாசிரியர் ஈஸ்வரி, வகுப்பாசிரியர் ராஜேந்திரன், கணித ஆசிரியர் வனிதா ஆகியோர் இக்கொலை வழக்கின் குற்றவாளிகள் பட்டியலில் சேர்க்கப்பட்டனர்.
இதையடுத்து அந்த மூன்று ஆசிரியர்களையும் பணியிடை நீக்கம் செய்து பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.
தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், புகைப்பட கேலரி, வேலைவாய்ப்பு, சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.
டாபிக்ஸ்