மீனவர் சமூகம் பழங்குடி சமூகமாக அங்கீகரிக்கப்படுமா?KKSSR பதில்
கன்னியாகுமரி நீரோடி கிராமல் முதல் திருவள்ளூர் மாவட்டம் குணங்குப்பம் கிராமம் வரை கடல் சார்ந்த 13 மாவட்டங்களில் 18 சட்டமன்ற தொகுதிகளில் வாழும் மீனவர் சமூகத்தை பழங்குடியினர் பட்டியலில் சேர்க்க திருவொற்றியூர் எம்.எல்.ஏ கே.பி.பி.சங்கர் கோரிக்கை
தமிழ்நாடு சட்டப்பேரவை பட்ஜெட் கூட்டத்தொடர் கடந்த மார்ச் 20ஆம் தேதி தொடங்கி நடந்து வருகிறது. கடந்த மார்ச் 20ஆம் தேதி பொதுபட்ஜெட்டும், மார்ச் 21ஆம் தேதி வேளாண் பட்ஜெட்டும் தாக்கல் செய்யப்பட்ட நிலையில் துறை ரீதியான மானியக்கோரிக்கை விவாதங்கள் நடைபெற்று வருகிறது.
ட்ரெண்டிங் செய்திகள்
இன்றைய தினம் (17-04-2023) மாற்றுத்திறனாளிகள் மற்றும் சமூகநலத்துறை மானியக்கோரிக்கை நடைபெற உள்ள நிலையில் கேள்வி நேரத்தின் போது திருவொற்றியூர் எம்.எல்.ஏ கே.பி.பி சங்கர், காட்டுநாயக்கன் பழங்குடியின மக்களுக்கு சாதி சான்றிதழ் வழங்குவதில் தாமதம் ஏற்படுவதாகவும் அதனை உடனடியாக வழங்க வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.
இதற்கு பதிலளித்து பேசிய வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன், காட்டுநாயக்கன் வகுப்பு பழங்குடியினர் வகுப்பின் கீழ் வகைப்படுத்தப்பட்டுள்ளது.
தவறான காட்டுநாயக்கன் பழங்குடியினர் சான்றிதழை தவிர்க்கும் பொருட்டு மனுதாரர்களால் தரப்படும் ஆவணங்களை கவனத்துடன் ஆய்வு செய்ய வேண்டி உள்ளது. காட்டு நாயக்கன் சாதி சான்றிதழ் கோரும் இனங்களில் காட்டு நாயக்கன் சாதி என்று பழங்குடியினர் என்று வழங்குவற்கு தேவையான ஆவணங்களை ஆதாரங்களாக மனுதாரர்கள் தாக்கல் பட்சத்தில் குறிப்பிட்ட காலக்கெடுவுக்குள் சாதிச்சான்றிதழ் வழங்கப்படுகிறது. குறிப்பிட்ட ஆவணங்கள் வழங்கப்படாத நிலையில் குறிப்பிட்ட விசாரணைக்கு பிறகே வழங்கப்படுகிறது என்றார்.
தொடர்ந்து பேசிய திருவொற்றியூர் சட்டமன்ற உறுப்பினர் கே.பி.பி.சங்கர், கன்னியாகுமரி நீரோடி கிராமல் முதல் திருவள்ளூர் மாவட்டம் குணங்குப்பம் கிராமம் வரை கடல் சார்ந்த 13 மாவட்டங்களில் 18 சட்டமன்ற தொகுதிகளில் மீனவர்கள் வாழ்ந்து வருகிறார்கள். மீனவர்களை பழங்குடியினர் பட்டியலில் சேர்க்க அரசு நடவடிக்கை எடுக்குமா? என்று கேள்வி எழுப்பினார்.
இதற்கு பதிலளித்து பேசிய வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன், புதியதாக பழங்குடியினர் மக்களாக சேர்க்க வேண்டுமானால் மாநில அரசு மட்டுமல்ல மத்திய அரசும் சேர்ந்து செய்ய வேண்டியுள்ளது. இந்த கோரிக்கையை முதலமைச்சரும் கேட்டுக் கொண்டுதான் இருக்கிறார்கள். நீங்கள் சொல்வது முதலமைச்சரும் கேட்டுக்கொண்டுதான் இருக்கிறார்கள். எதிர்க்காலத்திலே இதனை முடியும் என்றால் அதற்கு வேண்டியதை செய்வார்கள் என தெரிவித்தார்.