'செந்தில் பாலாஜி கைது பாஜகவின் பழிவாங்கும் நடவடிக்கை' - வைகோ ஆவேசம்!
அமலாக்கத் துறையினரால் தமிழ்நாடு மின்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி கைது செய்யப்பட்டிருப்பது பாஜகவின் பழிவாங்கும் நடவடிக்கை என்று மதிமுக பொதுச்செயலாளர் வைகோ கண்டனம் தெரிவித்துள்ளார்.
தமிழ்நாடு மின்சாரம் மற்றும் மதுவிலக்கு ஆயத்தீர்வை துறை அமைச்சரான செந்தில் பாலாஜியின் வீடு, அலுவலகங்களில் அமலாக்கத்துறையினர் நேற்று சோதனை நடத்தினர். இந்த சோதனைக்கு பிறகு அவர் நள்ளிரவில் அதிரடியாக கைது செய்யப்பட்டுள்ளார். அமைச்சர் செந்தில் பாலாஜி நள்ளிரவில் கைது செய்யப்பட்ட விவகாரம் தமிழக அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இதனிடையே, அவரை விசாரணைக்கு அழைத்துச் செல்ல அமலாக்கத்துறையினர் முயற்சி செய்தனர். அப்போது, அவருக்கு திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டது. இதையடுத்து, அவர் சென்னை ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில் உள்ள ஐசியு வார்டில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.
ட்ரெண்டிங் செய்திகள்
அமைச்சர் செந்தில் பாலாஜியின் கைதுக்கு திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சித் தலைவர்கள் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். அமைச்சர் செந்தில் பாலாஜி அமலாக்கத் துறையினரால் கைது செய்யப்பட்டதற்கு மதிமுக பொதுச் செயலாளர் வைகோ கண்டனம் தெரிவித்துள்ளார். இந்த கைது நடவடிக்கை பாஜகவின் பழிவாங்கும் நடவடிக்கை என்றும் அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், "மத்தியில் ஆளும் பாஜக அரசு, எதிர்க்கட்சிகளை முடக்குவதற்கு அமலாக்கத் துறை, மத்திய புலனாய்வுத் துறை உள்ளிட்ட பல்வேறு அமைப்புகளை ஏவி விடுவது தொடர்ந்து கொண்டு இருக்கிறது. எதிர்க்கட்சிகள் ஆட்சி புரியும் மாநிலங்களில் பழிவாங்கும் நடவடிக்கைகளில் இறங்கி இருக்கிறது.
மேற்கு வங்காளம், புது டெல்லி உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் பாஜக நடத்திய அரசியல் சித்து விளையாட்டுகளை தமிழ்நாட்டிலும் அரங்கேற்றுவதற்கு திட்டம் தீட்டி, அதைச் செயல்படுத்த முனைந்திருக்கிறது. அதன் ஒரு பகுதியாகத்தான் தமிழ்நாடு அரசின் தலைமைச் செயலகத்திற்குள் அமலாக்கத் துறை அதிகாரிகள் அத்துமீறி நுழைந்து திமுக அரசுக்கு களங்கம் கற்பிக்க முயற்சிக்கிறார்கள்.
தமிழ்நாடு மின்சாரத் துறை மற்றும் ஆயத்தீர்வுத் துறை அமைச்சர் செந்தில் பாலாஜி அமலாக்கத் துறை விசாரணைக்கு முழு ஒத்துழைப்புக் கொடுப்பதாக தெரிவித்தும்கூட, விசாரணை முடிந்து, எந்தவிதமான சட்ட நெறிமுறைகளையும் பின்பற்றாமல் நள்ளிரவில் அவரைக் கைது செய்து துன்புறுத்தியிருப்பது வன்மையான கண்டனத்திற்கு உரியது. ஜனநாயகத்தில் இத்தகைய மிரட்டல் போக்குகளுக்கு ஒருபோதும் இடம் இல்லை. இதனை திராவிட முன்னேற்றக் கழக அரசு முறியடிக்கும் என்று தெரிவித்துக் கொள்கிறேன்." இவ்வாறு வைகோ வைகோ கூறியுள்ளார்.
சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:
Google News: https://bit.ly/3onGqm9
தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், புகைப்பட கேலரி, வெப் ஸ்டோரி, வேலைவாய்ப்பு தகவல்கள், சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.