DMDK: ’விஜயகாந்த் உடல்நிலை பாதிக்க இவர்கள்தான் காரணம்’ போட்டு உடைத்த பிரேமலதா!
”நாடாளுமன்றத் தேர்தல் கூட்டணி குறித்து அதிகாரப்பூர்வ பேச்சுவார்த்தை இதுவரை நடக்கவில்லை”
தேமுதிக பொதுச்செயலாளராக தேர்வாகி உள்ள பிரேமலதா விஜயகாந்த் சென்னையில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், கேப்டன் நடிகராக இருந்தவரை எல்லோரும் விரும்பக் கூடியவராக இருந்தார். ஆனால் எப்போது கட்சி ஆரம்பித்தாரோ அத்தனை பேரும் கேப்டனுக்கு எதிராளியாக மாறும் சூழ்நிலை வந்தது. எதிர்நீச்சல் போட்டே கேப்டன் தனது பயணத்தை அரசியலில் பயணித்தார்.
ட்ரெண்டிங் செய்திகள்
விஜயகாந்தின் வழிநடத்துதலின்படிதான் கடைசி வரை தேமுதிக இயங்கும். நூறு ஆண்டுகாலம் வர வேண்டிய அனுபவத்தை அரசியல் கட்சி தொடங்கிய பிறகு நாங்கள் கற்று இருக்கிறோம்.
2011ஆம் ஆண்டு வரை தேமுதிக யாருடனும் கூட்டணி இல்லாமல் இருந்தபோது எங்கள் சக்தி எல்லோருக்கும் தெரிய வந்தது. 2011ஆம் ஆண்டுக்கு பிறகு கூடவே இருந்து கேப்டன் சந்தித்த துரோகங்கள், எதிர்க்கட்சித் தலைவரான மூன்றே மாதத்தில் எம்.எல்.ஏ பதவி கொடுத்தவர்கள் முதுகில் குத்திவிட்டு செய்த துரோகம் சறுக்கலை கொடுத்தது. அன்று அவர்கள் கொடுத்த வலிதான் அவரது உடல்நிலையை மோசமாக்கியது.
அரசியலில் எனக்கு ரோல்மாடல் யார் என்றால், புரட்சித் தலைவி ஜெயலலிதாவை சொல்லலாம். பெண்களுக்காக அவர்கள் சந்திக்காத சவால்கள் இல்லை. எம்ஜிஆர்தான் கேப்டனுக்கு ரோல் மாடல், அதே போல் எனது ரோல் மாடலாக புரட்சித் தலைவி ஜெயலலிதாவை எடுத்துக் கொள்கிறேன்.
நாடாளுமன்றத் தேர்தல் கூட்டணி குறித்து அதிகாரப்பூர்வ பேச்சுவார்த்தை இதுவரை நடக்கவில்லை. ஆனால் பொதுச்செயலாளராக பதவி ஏற்ற எனக்கு எல்லாத் தலைவர்களும் வாழ்த்துக்களை சொல்லி உள்ளனர். தேர்தல் நேரம் வரும்போது கூட்டணி குறித்த விவரங்களை சொல்லுவோம். அனைத்து அரசியல் கட்சித் தலைவர்களும் தேமுதிகவுடன் நட்புறவில்தான் உள்ளனர்.
டாபிக்ஸ்