தமிழ் செய்திகள்  /  தமிழ்நாடு  /  Gutka Case: குட்கா முறைகேடு: கூடுதல் அவகாசம் கேட்ட சிபிஐ; மார்ச் 20 ஒத்திவைப்பு!

Gutka Case: குட்கா முறைகேடு: கூடுதல் அவகாசம் கேட்ட சிபிஐ; மார்ச் 20 ஒத்திவைப்பு!

HT Tamil Desk HT Tamil
Feb 17, 2023 11:53 AM IST

சுட்டிக்காட்டப்பட்டிருந்த பிழைகளை முழுமையாக திருத்தும் பணிகள் இன்னும் நிறைவடையவில்லை கூடுதல் கால கூடுதல் கால அவகாசம் வேண்டும் என சிபிஐ தரப்பில் கூறப்பட்டது. இதைத் தொடர்ந்து வழக்கு விசாரணையை மார்ச் 20 ஆம் தேதிக்கு நீதிபதி ஒத்திவைத்தார்.

குட்கா முறைகேடு வழக்கை விசாரிக்கும் சிபிஐ
குட்கா முறைகேடு வழக்கை விசாரிக்கும் சிபிஐ

ட்ரெண்டிங் செய்திகள்

தமிழகத்தில் புகையிலை பொருட்களுக்கு கடந்த 2015-ம் ஆண்டு தடை விதிக்கப்பட்டது. கடந்த 2016-ம் ஆண்டு செங்குன்றம் பகுதியில் மாதவராவ் என்பவருக்கு சொந்தமான குட்கா கிடங்கில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தி லஞ்சம் கொடுக்கப்பட்டதாக ஒரு டைரியையும் பறிமுதல் செய்தனர்.

இந்த சர்ச்சையில் அப்போதைய தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர், முன்னாள் போலீஸ் டிஜிபி டி.கே.ராஜேந்திரன், சென்னை முன்னாள் போலீஸ் ஆணையர் ஜார்ஜ் உள்ளிட்ட மத்திய, மாநில அரசு உயரதிகாரிகள், போலீஸ் உயரதிகாரிகளின் பெயர்களும் அடிபட்டது.

இந்நிலையில் இந்த குட்கா ஊழல் தொடர்பாக திமுக தரப்பில் தொடரப்பட்ட வழக்கை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம், இந்த வழக்கு விசாரணையை சிபிஐ-க்கு மாற்றி உத்தரவிட்டது.

இந்த வழக்கில் கிடங்கு உரிமையாளர்கள் மாதவராவ், சீனிவாசராவ், உமாசங்கர் குப்தா, உணவு பாதுகாப்புத்துறை அதிகாரி செந்தில்முருகன், மத்திய கலால்துறை அதிகாரி நவநீத கிருஷ்ண பாண்டியன், சுகாதாரத்துறை அதிகாரி சிவக்குமார் ஆகிய 6 பேர் கடந்த 2016 ஆம் ஆண்டு கைது செய்யப்பட்டு பின்னர் ஜாமினில் வெளி வந்தனர்.

இந்நிலையில் இந்த வழக்கில் சிபிஐ போலீஸார் சென்னை சிபிஐ நீதிமன்றத்தில் கடந்த ஆண்டு குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தனர். அதில் கைது செய்யப்பட்ட மாதவராவ் உள்ளிட்ட 6 பெயர்கள் மட்டுமே இடம் பெற்றிருந்தது.

அமைச்சர் மற்றும் டிஜிபி என வேறு யாருடைய பெயர்களும் அந்த குற்றப்பத்திரிகையில் இடம்பெறவில்லை.

இதனிடையே முன்னாள் அமைச்சர்கள் பி.வி.ரமணா, சி.விஜய பாஸ்கர், முன்னாள் டிஜிபி டி.கே.ராஜேந்திரன், சென்னை முன்னாள் போலீஸ் ஆணையர் ஜார்ஜ் உள்ளிட்ட மத்திய, மாநில அரசு அதிகரிகள் உள்ளிட்ட 11 பேருக்கு எதிராக குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய தமிழக அரசு கடந்த ஜூலை 19 ஆம் தேதி அனுமதி வழங்கியது.

இதைத்தொடர்ந்து, இந்த வழக்கு கடந்த முறை சென்னை சிபிஐ நீதிமன்ற நீதிபதி மலர் வாலண்டினா முன்பு விசாரணைக்கு வந்தபோது, சிபிஐ தரப்பில் 11 பேருக்கு எதிராக கூடுதல் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தது.

அந்த கூடுதல் குற்றப்பத்திரிகையில் பல்வேறு தவறுகள் இருந்ததால் அதனை திருத்தம் செய்தும் சாட்சிகள் குறித்த விபரங்கள் மற்றும் அவர்களின் வாக்குமூலம் குறித்த விபரங்களை இணைத்து தாக்கல் செய்ய விசாரணை அதிகாரிக்கு நீதிபதி உத்தரவிட்டிருந்தார்.

சுட்டிக்காட்டப்பட்டிருந்த பிழைகளை முழுமையாக திருத்தும் பணிகள் இன்னும் நிறைவடையவில்லை கூடுதல் கால கூடுதல் கால அவகாசம் வேண்டும் என சிபிஐ தரப்பில் கூறப்பட்டது. இதைத் தொடர்ந்து வழக்கு விசாரணையை மார்ச் 20 ஆம் தேதிக்கு நீதிபதி ஒத்திவைத்தார். 

IPL_Entry_Point

டாபிக்ஸ்