Crime News: மலையடிவாரத்தில் மர்மமாக இறந்து கிடந்த தோழிகள்… ‘ஷாக்‘ ஆன போலீஸ்
துறையூர் மலையடிவாரத்தில் தோழிகள் மர்மமான முறையில் இறந்து கிடந்தது அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.
திருச்சி மாவட்டம் துறையூர் அருகேயுள்ள பகளவாடி கிராமத்தைச் சேர்ந்த கிருஷ்ணன் மனைவி சம்பூர்ணம். அதே ஊரைச் சேர்ந்தவர் பெரியக்காள். இருவரது கணவரும் இறந்துவிட்ட நிலையில், கடந்த சில ஆண்டுகளாக சம்பூர்ணமும் பெரியக்காளும் உயிர்த் தோழிகளாக பழகி வந்துள்ளனர். இருவரும் அடிக்கடி ஒன்று சேர்ந்து கோயிலுக்குச் செல்வது, வெளியே செல்வது என்று இருந்துவந்துள்ளனர்.
ட்ரெண்டிங் செய்திகள்
இவர்களின் நட்பு இருவரின் குடும்பத்தினருக்கும் பிடிக்கவில்லை. எனவே, குடும்பத்தினர் இருவரையும் கண்டித்துள்ளதாக தெரிகிறது. இதையடுத்து கடந்த ஜனவரி மாதம் சம்பூர்ணம், பெரியக்காள் ஆகிய இருவரும் வீட்டிலிருந்து வெளியேறினர். இதுதொடர்பாக இருவீட்டாரும் புலிவலம் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தனர். அதன்பேரில் போலீசார் விசாரணை நடத்தி, திருச்சியில் தங்கியிருந்த இருவரையும் மீட்டு மீண்டும் குடும்பத்தினரிடம் ஒப்படைத்தனர்.
இந்த சூழலில் கடந்த 1ம் தேதி இருவரும் மீண்டும் மாயமாகினர். இதுதொடர்பாக பெரியக்காள், சம்பூர்ணம் குடும்பத்தினர் மீண்டும் புலிவலம் போலீசில் புகார் கொடுத்தனர். அதன்பேரில் போலீசாரும், அவர்களது உறவினர்களும் இருவரையும் தேடி வந்தனர். ஆனால் கிடைக்கவில்லை.
இந்த நிலையில் துறையூர் அருகே பெருமாள் மலை அடிவாரத்திலிருந்து பெருமாள் மலைக்கோயிலுக்குச் செல்லும் சாலையிலுள்ள சோதனைச்சாவடிக்கு அருகே, 20 அடி பள்ளத்தில் உள்ள பாறையின் மீது பெரியக்காள், சம்பூர்ணம் ஆகிய இருவரும் ஒரே இடத்தில் இறந்து கிடந்தனர். உடல்கள் அழுகிய நிலையில் காணப்பட்டதால் இறந்து 5 நாட்கள் ஆகியிருக்கலாம் என தெரியவந்தது. அவர்கள் கொலை செய்யப்பட்டிருக்கலாமோ என்ற சந்தேகத்தின் அடிப்படையில் பதறியடித்தபடி, துறையூர் போலீசார் அங்கு சென்று இருவரது உடலையும் கைப்பற்றி, பிரேத பரிசோதனைக்காக துறைர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். விசாரணையில் இவர்கள் இருவரும் ஏற்கனவே வீட்டைவிட்டு வெளியேறி இருந்தவர்கள் என்பதும், விஷம் குடித்து தற்கொலை செய்துகொண்டிருக்கலாம் என்பதும் தெரியவந்தது. அதனடிப்படையில் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
டாபிக்ஸ்