Fire Accident: ஜூவல்லரிபாக்ஸ் குடோனில் கொளுந்துவிட்டு எரியும் தீ ..கோவையில் பரபரப்பு!
கோவை அடுத்த குனியமுத்தூர் ஜூவல்லரி பாக்ஸ் தயாரிக்கும் குடோனில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இந்த தீ விபத்து காரணமாக அந்த பகுதி முழுவதும் கரும்புகை சூழ்ந்துள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
கோவை, குனியமுத்தூர் அறிவொளி நகர் பகுதியில் தனியாருக்கு சொந்தமான குடோனில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இந்த தீ விபத்து காரணமாக அந்த பகுதி முழுவதும் கரும்புகை சூழ்ந்துள்ளது. கோவைப்புதூர் தீயணைப்பு நிலைய வீரர்கள் விரைந்து வந்து தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
ட்ரெண்டிங் செய்திகள்
கோவை அடுத்த குனியமுத்தூர் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் ஏராளமான தொழிற்சாலைகள் இயங்கி வருகின்றன. இந்த தொழிற்சாலைகளில் தயாரிக்கப்படும் பொருட்களை சேமித்து வைப்பதற்காக தனியாக குடோன்களும் இயங்கி வருகின்றன.
இங்கு பல்வேறு விதமான பொருட்கள் தயாரிக்கப்பட்டு நாடு முழுவதும் அனுப்பி வைக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் ரஷீத் என்பவருக்கு சொந்தமான நிறுவனம் குனியமுத்தூர் அடுத்த அறிவொளி நகர் பகுதியில் செயல்பட்டு வருகிறது. இங்கு நகைக்கடைகளில், நகைகளை வைக்க பயன்படுத்தப்படும் நகைப்பெட்டிகள் தயாரிக்கப்பட்டு பல்வேறு நிறுவனங்களுக்கும் விநியோகிக்கப்பட்டு வருகிறது.
இந்த பணியில் நூற்றுக்கும் மேற்பட்ட ஊழியர்கள் பணியாற்றி வருகின்றனர். இந்த நிலையில், 50-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள், நகைப் பெட்டிகளை தயாரிக்கும் பணியில் வழக்கம்போல் ஈடுபட்டிருந்தனர். அப்போது, திடீரென நிறுவனத்தின் ஒரு பகுதியில் தீ விபத்து ஏற்பட்டு தொழிற்சாலை முழுவதும் தீ பரவத் துவங்கியது. இதனால் அதிர்ச்சி அடைந்த தொழிலாளர்கள், உடனடியாக அங்கிருந்து வெளியேறினர். அடுத்த சில நிமிடங்களில் தொழிற்சாலை முழுவதும் மளமளவென தீப்பிடித்து எரியத் துவங்கியது.
அதிக வெப்பம் காரணமாக தொழிற்சாலையில் இருந்த இயந்திரங்களும் வெடித்து சிதறத் தொடங்கின. இந்த தீ விபத்து காரணமாக அந்த பகுதி முழுவதும் கரும்புகை சூழ்ந்துள்ளது.
இதுகுறித்து தகவல் கிடைத்ததும், கோவைப்புதூர் தீயணைப்பு நிலைய வீரர்கள் விரைந்து வந்து தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். தண்ணீர் கொண்டு தீயை அணைக்க முடியாததால் ரசாயன நுரை கொண்டு தீயை கட்டுப்படுத்தும் பணியில் தற்போது தீயணைப்பு வீரர்கள் ஈடுபட்டுள்ளனர். இதனிடையே இந்த தொழிற்சாலையில் ஏற்பட்ட தீ விபத்து அருகாமையில் உள்ள மற்ற பிளாஸ்டிக் குடோனுக்கும் பரவியதால் தீ மேலும் பரவும் அபாயம் உருவாகி உள்ளது. இதையடுத்து தீயை கட்டுக்குள் கொண்டுவரும் பணியில் தீயணைப்புத் துறையினர் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். இந்த சம்பவம் காரணமாக அப்பகுதியில் பெரும் பரபரப்பு நிலவி வருகிறது. மின்கசிவு காரணமாக இந்த தீ விபத்து ஏற்பட்டதா அல்லது வேறு ஏதேனும் காரணமா என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:
Google News: https://bit.ly/3onGqm9
டாபிக்ஸ்