ஈரோடு கிழக்கு தொகுதி நாம் தமிழர் வேட்பாளரை அறிவிப்பது எப்போது?- சீமான் பேட்டி
ஈரோடு கிழக்கு சட்டமன்றத் தொகுதி இடைத்தேர்தல் குறித்து மாவட்டவாரியாக நாம் தமிழர் கட்சிப் பொறுப்பாளர்களுடனான கலந்தாய்வு கூட்டம் நடைபெற்று வருகிறது.
சென்னை வளசரவாக்கத்தில் கலந்தாய்வு கூட்டத்தை முடித்த பிறகு நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் செய்தியாளர்களை சந்தித்தார்.
ட்ரெண்டிங் செய்திகள்
அப்போது அவர் கூறியதாவது:
சென்னையில் இன்றும் நாளையும் சந்திப்புக் கூட்டம் நடைபெறுகிறது. 25ஆம் தேதி புதுக்கோட்டை மாவட்டத்திலும், 26ஆம் தேதி மதுரையை மையப்படுத்தி ராமநாதபுரம், சிவகங்கை மாவட்ட பொறுப்பாளர்களுடன் சந்தித்து கலந்துரையாட உள்ளோம்.
ஈரோடு கிழக்கு தொகுதியில் நான் நிற்கவில்லை. பெண் வேட்பாளரை களமிறக்குகிறோம். விமர்சனங்களை பற்றி நான் கவலைப்படவில்லை. நாங்கள் எங்கள் இலக்குகளை நோக்கி பயணிக்கிறோம்.
எத்தனை அணி ஈரோட்டு இடைத்தேர்தலில் போட்டியிட்டாலும் எங்களுக்கு கவலையில்லை. நாங்கள் தனித்துப் போட்டியிடுவோம். எங்களிடம் கோடிகள் இல்லை. கொள்கைகள் இருக்கிறது. மக்களிடம் அதை எடுத்துச் சொல்வோம். கடுமையாக உழைப்போம். எங்கள் அளவுக்கு யாரும் பரப்புரை செய்ய மாட்டார்கள். மக்களை சந்திக்க மாட்டார்கள்.
மக்கள் மாற்றத்தை விரும்பிவிட்டால் ஆளும் கட்சி, எதிர்க்கட்சி அப்படியெல்லாம் ஒன்றும் கிடையாது. ஆளும் கட்சி தான் வெல்லும் என்று ஒரு மாயையை கட்டமைக்கிறார்கள்.
நாங்கள் யாருடனும் கூட்டணியில் இல்லாமல் தேர்தலில் போட்டியிடுகிறோம். எய்ம்ஸ் மருத்துவமனை வந்து என்ன ஆகப் போகிறது. இருக்கிற மருத்துவமனையை தரம் உயர்த்தினால் போதும்.
29ஆம் தேதி ஈரோட்டில் வேட்பாளர் அறிமுகக் கூட்டம் நடைபெறும். பின்னர் தேர்தல் பரப்புரையில் ஈடுபடுவோம் என்றார் சீமான்.
டாபிக்ஸ்