Erode East bypoll: ஈரோடு இடைத்தேர்தலில் திமுக கூட்டணிக்கு கமல்ஹாசன் ஆதரவு
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் திமுக கூட்டணி கட்சியான காங்கிரஸ் போட்டியிடுகிறது. இந்தக் கூட்டணிக்கு நடிகரும், மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவருமான கமல்ஹாசன் நிபந்தனையற்ற ஆதரவை தெரிவித்துள்ளார்.
ஈரோடு கிழக்கு தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளராக தமிழ்நாடு காங்கிரஸ் முன்னாள் தலைவர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் பெயரை காங்கிரஸ் தலைமை டிக் செய்துள்ளது.
ட்ரெண்டிங் செய்திகள்
தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவரான இளங்கோவனின் மகன் திருமகன் ஈவெரா மாரடைப்பு காரணமாக உயிரிழந்தார்.
இதையடுத்து, அவர் எம்எல்ஏவாக இருந்த ஈரோடு கிழக்கு தொகுதிக்கு இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. பிப்.27இல் இடைத்தேர்தல் நடைபெறவுள்ளது. வேட்பு மனுத் தாக்கல்-ஜன.31 முதல் தொடங்குகிறது.
இந்நிலையில், காங்கிரஸ் வேட்பாளராக ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் அறிவிக்கப்பட்டுள்ளார்.
அவர் கூட்டணி கட்சிகளின் தலைவர்களை சந்தித்து ஆதரவு கோரினார். மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசனை சந்தித்து ஆதரவு கோரினார். அவர் கட்சியினருடன் ஆலோசனை நடத்திவிட்டு தனது நிலைப்பாட்டை அறிவிப்பதாக தெரிவித்திருந்தார்.
இந்நிலையில், கட்சியினருடன் ஆலோசனை நடத்திய நிலையில், திமுக கூட்டணிக்கு ஆதரவு தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் இன்று செய்தியாளர்களிடம் கூறியதாவது:
காங்கிரஸ் சார்பில் ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிடப்போகும் ஈ.வி.கே.எஸ். இளங்கோவனுக்கு நிபந்தனையற்ற ஆதரவை வழங்க மக்கள் நீதி மய்யம் கட்சியின் நிர்வாகக் குழு மற்றும் செயற்குழு உறுப்பினர் கூடி ஆலோசித்து ஏகமனதாக முடிவு செய்துள்ளோம்.
அவரது வெற்றிக்காக நானும் எனது கட்யினரும் வேண்டிய உதவிகளை செய்வோம் என்பதை தெரியப்படுத்திக் கொள்கிறேன். 18 வயது பூர்த்தி அடைந்த ஈரோடு வாக்காளர்கள் அனைவரும் இடைத்தேர்தலில் இளங்கோவனுக்கு வாக்களித்து பெருவாரியான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறச் செய்ய வைக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.
இந்தத் தொகுதி இடைத்தேர்தலுக்கு மக்கள் நீதி மய்யம் கட்சியின் தேர்தல் பொறுப்பாளராக அருணாச்சலத்தை நியமிக்கிறோம் என்றார் கமல்ஹாசன்.
அடுத்த ஆண்டு நடைபெறும் நாடாளுமன்ற தேர்தலை மனதில் வைத்தே இந்த முடிவை மக்கள் நீதி மய்யம் எடுத்ததாக அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
டாபிக்ஸ்