Erode By Election : 'கமல் உணர்ந்து விட்டார்' கி வீரமணி ட்விட்!
ஈரோடு கிழக்கு சட்டமன்ற இடைத்தேர்தலில் கமல் திமுக கூட்டணிக்கு ஆரதவு தெரிவித்துள்ளதற்கு திராவிடர் கழக தலைவர் கி. வீரமணி தெரிவித்துள்ளார்.
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் திமுக கூட்டணி கட்சியான காங்கிரஸ்க்கு நடிகரும், மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவருமான கமல்ஹாசன் நிபந்தனையற்ற ஆதரவு தெரிவித்துள்ளார் . இந்நிலையில் கமலின் முடிவை திராவிடர்கழக தலைவர் கி.வீரமணி வரவேற்றுள்ளார்.
ஈரோடு கிழக்கு தொகுதியின் எம்எல்ஏவும், தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவரான இளங்கோவனின் மகன் திருமகன் ஈவெரா மாரடைப்பு காரணமாக உயிரிழந்தார். இதையடுத்து, அவர் எம்எல்ஏவாக இருந்த ஈரோடு கிழக்கு தொகுதிக்கு இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. வரும் பிப்.27இல் இடைத்தேர்தல் நடைபெறவுள்ளது. வேட்பு மனுத் தாக்கல் வரும் ஜன.31 முதல் தொடங்குகிறது. இந்நிலையில், காங்கிரஸ் வேட்பாளராக ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் அறிவிக்கப்பட்டுள்ளார்.
இதையடுத்து ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் கூட்டணி கட்சிகளின் தலைவர்களை சந்தித்து ஆதரவு கோரினார். மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசனையும் நேரில் சந்தித்து ஆதரவு கோரினார். இந்நிலையில் நேற்று கமல்ஹாசன் திமுக கூட்டணியில் போட்டியிடும் காங்கிரஸ் கட்சியின் வேட்பாளர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவனுக்கு ஆதரவு தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
காங்கிரஸ் சார்பில் ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிடப்போகும் ஈ.வி.கே.எஸ். இளங்கோவனுக்கு நிபந்தனையற்ற ஆதரவை வழங்க மக்கள் நீதி மய்யம் கட்சியின் நிர்வாகக் குழு மற்றும் செயற்குழு உறுப்பினர் கூடி ஆலோசித்து ஏக மனதாக முடிவு செய்துள்ளோம்.
அவரது வெற்றிக்காக நானும் எனது கட்சியினரும் வேண்டிய உதவிகளை செய்வோம் என்பதை தெரியப்படுத்திக் கொள்கிறேன். 18 வயது பூர்த்தி அடைந்த ஈரோடு வாக்காளர்கள் அனைவரும் இடைத்தேர்தலில் இளங்கோவனுக்கு வாக்களித்து பெருவாரியான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறச் செய்ய வைக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.
இந்தத் தொகுதி இடைத்தேர்தலுக்கு மக்கள் நீதி மய்யம் கட்சியின் தேர்தல் பொறுப்பாளராக அருணாச்சலத்தை நியமிக்கிறோம் என்று கமல்ஹாசன் தெரிவித்தார்.
இதையடுத்து இன்று திராவிடர் கழக தலைவர் ஆசிரியர் கி.வீரமணி கமலஹாசன் முடிவை வரவேற்றுள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில்,
ட்ரெண்டிங் செய்திகள்
" மக்கள் நீதி மய்யத்தின் நிறுவனத் தலைவரான நண்பர் கலைஞானி கமலஹாசன்@ikamalhaasan அவர்கள் தனது கட்சி, ஈரோடு கிழக்குத் தொகுதி இடைத் தேர்தலில் காங்கிரஸ் கட்சியின் வேட்பாளர் நண்பர் ஈ.வெ.கி.ச.இளங்கோவனுக்கு ஆதரவு தரும் என்று தனது அறிக்கைமூலம் அறிவித்திருப்பது வரவேற்கத்தக்கது.
மதச் சார்பற்ற ஜனநாயகத் தத்துவங்களில் நம்பிக்கையுள்ள அவரும், அவரதுகட்சியும் இன்றுள்ள அரசமைப்புச் சட்ட விரோதப் போக்கினை தடுத்து நிறுத்த- மதவெறித் தீயை அணைக்க - அனைவரும் ஒன்று சேர வேண்டியது எப்படி முக்கியமோ அதனை அப்படியே உணர்ந்து அறிவித்திருப்பது சீரிய முடிவாகும். வாழ்த்துகள். என்று தெரிவித்துள்ளார்.
டாபிக்ஸ்