தமிழ் செய்திகள்  /  தமிழ்நாடு  /  வேங்கைவயல் விவகாரம்: 45 பேரிடம் சிபிசிஐடி விசாரணை

வேங்கைவயல் விவகாரம்: 45 பேரிடம் சிபிசிஐடி விசாரணை

Priyadarshini R HT Tamil
Jan 20, 2023 12:51 PM IST

வேங்கைவயலில் குடிநீர்த்தொட்டியில் மனிதக்கழிவு கலக்கப்பட்ட வழக்கில் சிபிசிஐடி போலீசார் இதுவரை 45 பேரிடம் விசாரணை நடத்தியுள்ளதாகவும், தீவிர விசாரணை நடைபெற்று வருவதாகவும் தெரிவித்துள்ளனர்.

வேங்கைவயல் மேல்நிலை நீர்த்தேக்கத்தொட்டி
வேங்கைவயல் மேல்நிலை நீர்த்தேக்கத்தொட்டி

ட்ரெண்டிங் செய்திகள்

இந்நிலையில், புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடி திருமணஞ்சேரியை சேர்ந்த சண்முகம் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் தாக்கல் செய்த மனுவில் கூறியிருப்பதாவது :

புதுக்கோட்டைமாவட்டம் அன்னவாசல் ஒன்றியம் கந்தர்வக்கோட்டை சட்டமன்றத்தொகுதியில் உள்ள இறையூர் வேங்கைவயல்கிராமத்தில்பட்டியலின மக்கள் பயன்படுத்தும் குடிநீர் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியில் மனிதக்கழிவு கலக்கப்பட்டது. அந்த தொட்டியில் உள்ள குடிநீரை குடித்த குழந்தைகள் உள்பட பலருக்கு வாந்தி, வயிற்றுப்போக்கு ஏற்பட்டது. இந்த குடும்பங்களுக்கு இழப்பீடு வழங்க வேண்டும் என்று மனுவில் கூறப்பட்டிருந்தது. 

மனுவை நீதிபதிகள் டி.கிருஷ்ணகுமார், ஆர்.விஜயகுமார் அமர்வு விசாரித்து வந்தது. அப்போது மனுதாரர் கூடுதல் மனு ஒன்றை தாக்கல் செய்தார். 

அதில், புதுக்கோட்டை மாவட்டத்தில் பட்டியலின மக்களுக்கு எதிரான தீண்டாமை பல வடிவங்களில் நடைமுறையில் உள்ளது. மாவட்டத்தில் 33 கிராமங்களில் தீண்டாமை குறித்து முதல்கட்ட ஆய்வு நடத்தப்பட்டது. இதில் 23 கிராமங்களில் 49 கோயில்களில் பட்டியலின மக்களை கோயில்களில் அனுமதிப்பதில்லை. வேப்பன்பட்டி கிராமத்தில் உள்ள முருகன் கோயில் அறநிலையத்துறைக்கு சொந்தமானது. அதில் பட்டியலின மக்களுக்கு மண்டகப்படி உரிமை வழங்குவதில்லை. 14 கிராமங்களில் 26 டீக்கடைகளில் இரட்டை குவளை முறை உள்ளது. நெடுவாசல், வேம்பன்குடி மற்றும் கூத்தன்குடியில் பொது கண்மாய்களில் பட்டியலின மக்கள் குளிக்க அனுமதிப்பதில்லை.

எனவே குடிநீர்த்தொட்டியில் மனிதக்கழிவு கலந்தவர்களை கண்டுபிடிக்க சிறப்பு விசாரணைக்குழு அமைக்க வேண்டும். இரட்டை குவளை முறையை ஒழிக்க வேண்டும். கோயில்களில், பொது கண்மாய்களில் பட்டியலின மக்களை அனுமதிக்க உத்தரவிட வேண்டும் எனக்கூறப்பட்டிருந்தது.

பின்னர் அரசு வழக்கறிஞர் வாதிடுகையில், ‘வேங்கைவயல் வழக்கு சிபிசிஐடி போலீசாருக்கு மாற்றப்பட்டுள்ளது. சிபிசிஐடி டிஎஸ்பி விசாரணை நடத்தி வருகிறார். 3 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, 2 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். 10 தனிப்படை விசாரணை நடத்தி வருகிறது. இரட்டை குவளை மற்றும் தீண்டாமை குறித்து புகார் வந்தால் நடவடிக்கை எடுக்கப்படும்‘ என்றார்.  

இதையடுத்து, மனுதாரரின் புகார் தொடர்பாக கலெக்டர், சிபிசிஐடி டிஎஸ்பி, மாவட்ட எஸ்பி ஆகியோர் அறிக்கை தாக்கல் செய்து உத்தரவிட்டு விசாரணையை பிப்ரவரி 2ம் தேதிக்கு ஒத்திவைத்தனர். 

இதனிடையே தற்போது வரை அந்த கிராமத்தில் உள்ள மூன்று சமூகங்களை சேர்ந்த 45 பேரிடம் தனித்தனியாக விசாரணை நடத்தி உள்ளதாகவும், யூகத்தின் அடிப்படையில் குற்றவாளியை கண்டுபிடிக்க முடியாது. முழுமையாக விசாரித்து இதில் ஈடுபட்டவர்களை விரைவில் கைது செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என்று சிபிசிஐடி டிஎஸ்பி பால்பாண்டி தெரிவித்துள்ளார்.

IPL_Entry_Point

டாபிக்ஸ்