PTR Leaks: பாஜகவினர் கையில் திமுக கொடி - அமைச்சர் பி.டி.ஆரை பாராட்டி ஊர் முழுக்க போஸ்டர்..!
ஆடியோ விவகாரத்தில் தமிழ்நாடு நிதியமைச்சர் பி.டி.ஆர் பழனிவேல் தியாகராஜனைப் பாராட்டி பாஜக கட்சியினர் ஊர் முழுக்க போஸ்டர் ஒட்டி உள்ளனர்.
தமிழ்நாட்டின் நிதியமைச்சராக பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் இருந்து வருகிறார். இவர் விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் மற்றும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மருமகன் சபரீசன் குறித்துப் பேசிய ஆடியோ ஒன்றைத் தமிழ்நாடு பாஜக மாநில தலைவர் அண்ணாமலை வெளியிட்டிருந்தார்.
ட்ரெண்டிங் செய்திகள்
அந்த ஆடியோவில், நான் அரசியலுக்கு வந்த நாள் முதலிலிருந்தே ஒரு நபர் ஒரு பதவி என்ற கொள்கைக்கு ஆதரவு தெரிவித்து வருகிறேன். பாஜக கட்சியில் எனக்குப் பிடித்த விஷயம் என்னவென்றால் கட்சியை மக்களையும் பார்த்துக் கொள்ளும் பொறுப்பு பிரிந்து இருக்க வேண்டும். ஆனால் இங்கு எடுக்கும் எல்லா முடிவுகளையும் எம்எல்ஏக்களும், அமைச்சர்களும் தான் தீர்மானிக்கிறார்கள்.
நிதி மேலாண்மை செய்வது சுலபம். அவர்களுக்கு வரும் ஊழல் பணத்தை அனைத்தையும் அவர்களே எடுத்துக் கொள்கிறார்கள். இந்த கட்சியில் நடத்துவது முதலமைச்சரின் மகனும், மருமகனும் தான்.
அவர்களின் நிதி மேலாண்மை செய்யச் சொல்லுங்கள். ஆனால் 8 மாதங்கள் பார்த்த பிறகும் முடிவு செய்து விட்டேன். இது ஒரு நிலையான முறை கிடையாது என்று. எனக்கு இதில் இருக்கும் மிகப்பெரிய வசதி என்னவென்றால் ஒருவேளை இப்போது நான் விலகினால் அவர்கள் செய்தது அனைத்தும் அவர்களுக்கே எதிர்வினை ஆகிவிடும்.
நான் என்னுடைய யுத்தத்தை மிகச் சீக்கிரமாகக் கைவிட்டதாக எனது மனசாட்சி சொல்லாது என நினைக்கிறேன். நான் ஒரு பதவியில் இல்லாத போது அதைப்பற்றி ஏன் கவலைப்பட வேண்டும். அதைப் பற்றி கவலையே எனக்குத் தேவையில்லை" என அதில் பேசப்பட்டிருந்தது.
தற்போது இந்த ஆடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது. பலரும் இது குறித்து கருத்து தெரிவித்து வருகின்றனர். இதனைத் தொடர்ந்து பாஜக கட்சியின் மாநில செயற்குழு உறுப்பினர் ச.சங்கர பாண்டி என்பவர் நிதியமைச்சர் பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜனுக்கு வாழ்த்து தெரிவித்து போஸ்டர் அடித்து ஒட்டி உள்ளார்.
அந்த போஸ்டரில், தமிழ்நாடு முதலமைச்சர் மு.க ஸ்டாலினின் மகன் உதயநிதி மற்றும் அவரது மருமகன் சபரீசன் இருவரும் சேர்ந்து கடந்த ஒரு வருடத்தில் ரூபாய் 30,000 கோடி சம்பாதித்து உள்ளனர். இந்த உண்மையை உரக்கச் சொன்ன தமிழ்நாடு நிதி அமைச்சர் பி.டி.ஆர் பழனிவேல் தியாகராஜனுக்கு எனது நெஞ்சார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்" எனக் குறிப்பிடப்பட்டிருந்தது.
நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் பேசிய ஆடியோ மட்டுமல்லாது அவரைப் பாராட்டி தற்போது பாஜக கட்சியினர் ஊர் முழுக்க ஒட்டிய போஸ்டரும் சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது.