விளையாடிக்கொண்டிருந்த சிறுவனின் கழுத்தில் நைலான் கயிறு இறுக்கி பலியானது எப்படி?
5-Year-Old Boy Died in vilathikulam: தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே விளையாடிக் கொண்டிருந்த 5 வயது சிறுவனின் கழுத்தில் கயிறு இறுக்கி பரிதபமாக உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி இருக்கிறது.
தூத்துக்குடி மாவட்டம், விளாத்திகுளம் அருகே சுரக்காப்பட்டியைச் சேர்ந்தவர் கிருஷ்ணவேல். இவரது மனைவி செல்வி. இந்த தம்பதிக்கு சிவரஞ்சன் (5), மதுபாலா (2) ஆகிய இரண்டு குழந்தைகள் உள்ளனர். கிருஷ்ணவேல் மற்றும் செல்வி ஆகிய இருவரும் கருத்து வேறுபாடு காரணமாக கடந்த ஓராண்டாக பிரிந்து வாழ்ந்து வருகின்றனர். செல்வி தனது தாய் வீடான கீழ விளாத்திகுளம் கிராமத்தில் தனது இரு குழந்தைகளுடன் வசித்து வந்தார்.
ட்ரெண்டிங் செய்திகள்
இந்நிலையில், சிவரஞ்சன் நேற்று (ஜன.22) மாலை வீட்டின் கதவில் உள்ள கைப்பிடியில் நைலான் கயிற்றை கட்டி விளையாடிக் கொண்டிருந்தார். அப்போது, எதிர்பாராத விதமாக கதவின் கைப்பிடியில் கட்டப்பட்டிருந்த நைலான் கயிற்றில் சிவரஞ்சனின் தலை சிக்கியதாக கூறப்படுகிறது. கயிற்றில் சிக்கிய தலையை எடுக்க முடியாமல் சிறுவன் சிவரஞ்சன் அலறியபடி மயங்கியதாக தெரிகிறது. அப்போது, வீட்டின் உள்ளே வேலை பார்த்துக் கொண்டிருந்த செல்வி, சிறுவனின் அலறல் கேட்டு உடனடியாக வந்து பார்த்து அதிர்ச்சியடைந்துள்ளார்.
பின்னர் சிவரஞ்சனை மீட்டு விளாத்திகுளம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு வந்துள்ளார். அங்கு சிறுவனை பரிசோதனை செய்த மருத்துவர் சிவரஞ்சன் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்துள்ளனர். இதையடுத்து சிறுவனின் சடலம் விளாத்திகுளம் அரசு மருத்துவமனையில் பிரேத பரிசோதனைக்காக வைக்கப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக தகவல் அறிந்து விளாத்திகுளம் போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். கதவில் நைலான் கயிற்றை கட்டி விளையாடிக் கொண்டிருந்த சிறுவன் எதிர்பாராதவிதமாக கயிற்றில் தலை சிக்கி பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், புகைப்பட கேலரி, வேலைவாய்ப்பு, சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.
டாபிக்ஸ்