திடீர் உடல்நல குறைவு! மருத்துவமனையில் தெலங்கானா முதலமைச்சர் சந்திரசேகர ராவ்
Telangam CM Hostipatlized: தெலங்கானா முதலமைச்சர் கே. சந்திரசேகர ராவ் வயிற்று வலி காரணமாக ஹைதராபாத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அல்சர் காரணமாக அவருக்கு வயிற்றில் சிறிய புண் இருப்பதாக அவருக்கு பரிசோதனை செய்த மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
ஹைதராபாத்திலுள்ள பிரகதி பவனில் அமைச்சர்கள் கேடி ராமா ராவ், ஹரீஷ் ராவ் ஆகியோருடன் ஆலோசனை கூட்டத்தில் இருந்த முதலமைச்சர் சந்திரசேகர ராவ், திடீரென உடல்நல குறைவு ஏற்பட்டு பாதியிலேயே வெளியேறினார். இதன்பின்னர் உடனடியாக அவர் கஜ்ஜிபெளலியில் அமைந்திருக்கும் ஏஐஜி (ஆசிய இன்ஸ்டியூட் ஆஃப் காஸ்ட்ரோ என்டாலஜி) மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
ட்ரெண்டிங் செய்திகள்
அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள், வயிற்றில் சிறிய அளவிலான அல்சர் புண் இருப்பதை கண்டறிந்தனர். தற்போது முதலமைச்சர் சந்திரசேகர ராவ் மருத்துவ கண்காணிப்பில் இருந்து வருகிறார்.
இதுதொடர்பாக மருத்துவமனை தரப்பில் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: "முதலமைச்சர் கே. சந்திரசேகர ராவ் வயிற்றில் வலி ஏற்பட்டதன் காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு உடனடியாக எண்டோஸ்கோபி மற்றும் ஸ்கேன் உள்பட இரைப்பை தொடர்பான பரிசோதனைகள் செய்யப்பட்டன.
இதன் முடிவில் அவருக்கு அல்சர் காரணமாக வயிற்றில் சிறிய புண் இருப்பது தெரியவந்தது. இதையடுத்து அதற்கான சிகிச்சை அவருக்கு அளிக்கப்பட்டு வருகிறது.
ஏஐஜி மருத்துவமனை தலைவரும், மருத்துவருமான டி. நாகேஷ்வர் ரெட்டி தலைமையிலான மருத்துவ குழு சிகிச்சை அளித்து வருகிறது."
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. முதலமைச்சர் சிகிச்சை பெற்று வருவதால் மருத்துவமனையை சுற்றி பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
கடந்த ஆண்டில் முதலமைச்சர் கே . சந்திசேகர ராவ் உடல்நலகுறைவு காரணமாக தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அப்போது அவருக்கு கரோனரி ஆஞ்சியோகிராம், எம்ஆர்ஐ பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டன. இதைத்தொடர்ந்து அவர் கடந்க ஓர் ஆண்டாக மருத்துவ கண்காணிப்பில் இருந்து வரும் நிலையில், தற்போது மீண்டும் உடல்நல குறைவு ஏற்பட்டுள்ளது.
முன்னதாக, கே. சந்திரசேகர ராவ் மகளும், பாரத் ராஷ்ட்ரா சமிதி கட்சியின் மேலவை உறுப்பினரான கவிதா, டெல்லி மதுபான கொள்கை ஊழலில் தொடர்பு இருப்பதாக குற்றம்சாட்டப்பட்டார்.
இதையடுத்து அவரிடம் கடந்த சனிக்கிழமை அமலாக்கதுறையினர் டெல்லியில் வைத்து விசாரணை மேற்கொண்டனர். இதன் பின்னர் கவிதா ஹைதராபாத் திரும்பிய நிலையில், முதலமைச்சர் சந்திரசேகர ராவ் உடல்நிலை பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.