Karnataka Election: 10 லட்சம் மக்கள்! 36 கி.மீ தூரம்! பெங்களூருவை வளைக்கும் மோடியின் மாஸ்டர் ப்ளான்!
கடந்த குஜராத் தேர்தலின் போது கூட, பிரதமர் மோடி அகமதாபாத்தின் 19 சட்டமன்ற தொகுதிகளை உள்ளடக்கி 25 கிலோ மீட்டருக்கும் அதிகமான பேரணிகளை நடத்தினார்.
224 தொகுதிகளை கொண்டுள்ள கர்நாடக சட்டப்பேரவைக்கு வரும் மே 10ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெறுகிறது. இதற்காக தேசியத் தலைவர்கள் கர்நாடகாவில் முகாமிட்டு தீவிர பரப்புரை மேற்கொண்டு வருகின்றனர். பாஜகவினருக்கு பிரதமர் நரேந்திர மோடியின் பரப்புரை உத்வேகத்தை அளித்து வருகிறது. வெறும் பொதுக்கூட்டங்களில் மட்டும் பேசி செல்லாமல் சாலைகளில் பிரதமர் மோடி நடத்தும் பேரணி அக்கட்சியினரிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.
ட்ரெண்டிங் செய்திகள்
இந்த நிலையில் பாரதிய ஜனதா கட்சியின் பிரச்சாரத்திற்கு பெரும் ஊக்கமளிக்கும் வகையில், பிரதமர் நரேந்திர மோடி பெங்களூருவில் வரும் சனிக்கிழமை அன்று 17 சட்டமன்றத் தொகுதிகளை உள்ளடக்கி 36.6 கி.மீ தூரம் சாலைக் காட்சியை நடத்த உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இந்த பேரணியில் 10 லட்சத்துக்கும் மேற்பட்டோர் பங்கேற்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த வார இறுதியில் பிரதமர் மோடி இரண்டு மெகா சாலை பேரணிகளிலும் நான்கு பொதுக்கூட்டங்களிலும் பிரதமர் பங்கேற்க உள்ளதாக தகவல்கள் வெளிகாகி உள்ளது. இதன்படி நாளை இரவு பெங்களூரு மாநகருக்கு வரும் பிரதமர் மோடி மறுநாள் மே 6 ஆம் தேதி இரண்டு பிரம்மாண்ட சாலை பேரணியை நடத்துகிறார். முதல் சாலை பேரணி 8 கிலோ மீட்டர் தூரமும், இரண்டாவது சாலை பேரணி 36.6 கிலோ மீட்டர் தூரமும் செல்லும் என பாஜக வட்டாரங்கள் கூறுகிறது.
இது மட்டுமின்றி மே 7 ஆம் தேதி கர்நாடக மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் நடைபெறும் நான்கு பிரம்மாண்ட பொதுக்கூட்டங்களிலும் உரையாற்றுவார் என்றும் தேர்தல் பரப்புரையின் இறுதி நாளான மே 8ஆம் தேதியன்றும் தொடர் பரப்புரையில் பிரதமர் ஈடுபடுவார் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
முன்னதாக, பிரதமர் மோடி பெங்களூரில் நடத்திய 5 கிலோ மீட்டர் தூர பேரணியிலும், மைசூரில் நடந்த பேரணியிலும் ஆயிரக்கணக்கான மக்கள் கலந்து கொண்டது குறிப்பிடத்தக்கது.
கடந்த குஜராத் தேர்தலின் போது கூட, பிரதமர் மோடி அகமதாபாத்தின் 19 சட்டமன்ற தொகுதிகளை உள்ளடக்கி 25 கிலோ மீட்டருக்கும் அதிகமான பேரணிகளை நடத்தினார். மாநிலத்தில் 2வது முறையாக ஆட்சியை பிடிக்கும் முயற்சியில் பாஜக முழுப்பெரும்பான்மையுடன் ஆட்சியை தக்க வைக்கும் என்ற நம்பிக்கையில் உள்ளது.