பெண் பயணி மீது சிறுநீர் கழித்த விவகாரம்: ஏர் இந்தியா நிறுவனத்திற்கு அபராதம்!
DGCA fines Air India: பெண் பயணி மீது விமானத்தில் சிறுநீர் கழித்த விவகாரத்தை ஏர் இந்தியா நிறுவன ஊழியர்கள் மிகவும் அலட்சியத்துடன் கையாண்டதால் ரூ. 30 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
அமெரிக்காவின் நியூயார்க்கில் இருந்து டெல்லிக்கு கடந்த நவம்பர் 26 ஆம் தேதி வந்த ஏர் இந்தியா விமானத்தில் , சக பெண் பயணி மீது குடிபோதையில் ஒருவர் சிறுநீர் கழித்துள்ளார். இந்த சம்பவம் விமான பயணிகள் இடையே கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருந்தது. இந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த விவகாரத்தில் உடனடியாக நடவடிக்கை எடுக்காததால் ஏர் இந்தியா மீது கடும் விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டன.
ட்ரெண்டிங் செய்திகள்
பெண் மீது சிறுநீர் கழித்த இந்த விவகாரத்தை ஏர் இந்தியா நிறுவன ஊழியர்கள் மிகவும் அலட்சியத்துடன் கையாண்டதால், விசாரணை நடத்த மத்திய விமானப் போக்குவரத்து இயக்குனரகம் உத்தரவிட்டிருந்தது.
விசாரணையில், ஏர் இந்தியா நிறுவன ஊழியர்கள் தங்களது கடமையை செய்ய தவறி இருப்பது உறுதியாகி இருக்கிறது. இதையடுத்து ஏர் இந்தியா நிறுவனத்துக்கு ரூ.30 லட்சம் அபராதம் விதித்து மத்திய சிவில் விமானப் போக்குவரத்து இயக்குனரகம் உத்தரவிட்டுள்ளது. மேலும், இந்தச் சம்பவத்தின் போது பணியில் இருந்த விமான பைலட்டின் லைசென்ஸை மூன்று மாதத்துக்கு இடைக்கால ரத்து செய்வதாகவும் மத்திய விமானப் போக்குவரத்து இயக்குனரகம் தெரிவித்துள்ளது.
பின்னணி என்ன?
கடந்த நவம்பர் 26 ஆம் தேதி நியூயார்க்கில் இருந்து டெல்லிக்கு வந்து கொண்டிருந்த ஏர் இந்தியா விமானத்தில் 72 வயது பெண் ஒருவர் பயணித்துள்ளார். அதே ஏர் விமானத்தில் 34 வயதான நபர் ஒருவரும் பயணித்தார். அந்தப் பயணி 72 வயதான பெண் பயணி மீது சிறுநீர் கழித்துள்ளார்.
இது குறித்து அந்தப் பெண் கூறுகையில், விமானத்தில் போதையில் இருந்த ஒருவர் என் இருக்கைக்கு அருகே வந்து தான் சுதாரிப்பதற்குள் அங்கே சிறுநீர் கழித்தார். அதன்பின்னரும் கூட அவர் ஆடையை சரி செய்யாமல் ஆபாசமாக முகம்சுழிக்கும் அளவுக்கு நின்றுகொண்டிருந்தார். என் சத்தம் கேட்டு சக பயணிகள் அந்த நபரை அப்புறப்படுத்தினர். விமான ஊழியர்கள் எனக்கு வேறு ஆடை அளித்தனர். இது பற்றி புகார் அளித்தேன். ஆனால், விமானம் தரையிறங்கிய பின்னர் அந்த நபர் எதுவுமே நடக்காததுபோல் இறங்கிச் சென்றார். இந்த விஷயத்தில் விமான ஊழியர்கள் மெத்தனமாக செயல்பட்டதாக தெரிவித்திருந்தார்.
இதையடுத்து ஏர் இந்தியா விமானத்தில் அவர் பயணிக்க 30 நாட்கள் தடை விதித்து அந்நிறுவனம் உத்தரவிட்டது. இந்த விவகாரத்தை ஏர் இந்தியா நிறுவன ஊழியர்கள் மிகவும் அலட்சியத்துடன் கையாண்டதால், விசாரணை நடத்த மத்திய விமானப் போக்குவரத்து இயக்குனரகம் உத்தரவிட்டது.
டெல்லி போலீசார் விசாரணை நடத்தியதில், விமானத்தில் மதுபோதையில் சிறுநீர் கழித்த நபர் பெயர் ஷங்கர் மிஸ்ரா என்பது தெரியவந்தது. இதையடுத்து பெங்களூருவில் பதுங்கியிருந்த ஷங்கர் மிஸ்ராவை சமீபத்தில் தனிப்படை போலீஸார் கைது செய்தனர்.
டாபிக்ஸ்