நரபலி, தெறிக்கும் ரத்தம்..தொடர்ந்த சர்ச்சை.. ஓராண்டிற்கு முன் லியோ படம் செய்த சம்பவங்கள் என்ன தெரியுமா?
தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  நரபலி, தெறிக்கும் ரத்தம்..தொடர்ந்த சர்ச்சை.. ஓராண்டிற்கு முன் லியோ படம் செய்த சம்பவங்கள் என்ன தெரியுமா?

நரபலி, தெறிக்கும் ரத்தம்..தொடர்ந்த சர்ச்சை.. ஓராண்டிற்கு முன் லியோ படம் செய்த சம்பவங்கள் என்ன தெரியுமா?

Malavica Natarajan HT Tamil
Published Oct 19, 2024 06:00 AM IST

நரபலி கொடுப்பதை மையமாக வைத்து அதிகளவில் வன்முறை காட்சிகளுடன் உருவாகி மாபெரும் வெற்றி திரைப்படமாக மாறிய நடிகர் விஜய்யின் லியோ திரைப்படம் வெளியாகி இன்றுடன் ஓராண்டு நிறைவடைகிறது.

நரபலி, தெறிக்கும் ரத்தம்..தொடர்ந்த சர்ச்சை.. ஓராண்டிற்கு முன் லியோ படம் செய்த சம்பவங்கள் என்ன தெரியுமா?
நரபலி, தெறிக்கும் ரத்தம்..தொடர்ந்த சர்ச்சை.. ஓராண்டிற்கு முன் லியோ படம் செய்த சம்பவங்கள் என்ன தெரியுமா?

அதிகரிக்கும் போதைப்பொருள் கலாச்சாரம்

தமிழ் சினிமாவில் மாநகரம் படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமான லோகேஷ் கனகராஜ், ரத்தமும் சதையுமாக, வன்முறைகள் தெறிக்க தெறிக்க, போதைப் பொருட்களை மையமாக வைத்து எடுக்கும் படங்களுக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல மவுசு இருக்கிறது. இதனால், அவர் இந்த உக்தியை தனது கைதி படத்திலிருந்து பிடித்துக் கொண்டு, அடுத்தடுத்த படங்களிலும் பின்பற்றி வருகிறார்.

தமிழ்நாட்டில் இளைஞர்களிடம் போதைப் பழக்க வழக்கங்கள் அதிகரிக்கத் தொடங்கியுள்ளதாக பல செய்திகள் வெளிவந்த வண்ணம் இருக்கும் நிலையில், பெரிய ஹீரோக்கள் சமீப காலங்களில் போதை பழக்க வழக்கங்களை ஊக்குவிப்பது போன்று வரும் சில திரைப்பட காட்சிகள் அவர்களுக்கு மேலும் உத்வேகம் அளிப்பது போல மாறிவிடுகிறது.

மாஸ் ஹீரோ கதை தேடும் நடிகர்கள்

கைதி படத்தில் வரும் காட்சிகளை மையமாகக் கொண்டு லோகஷ் கனகராஜ் நடிகர் கமல் ஹாசனை வைத்து விக்ரம் படம் எடுத்திருந்தார். இந்தப் படம் வசூலில் மாபெரும் வெற்றிய பெற்ற நிலையில், விக்ரம் படத்தின் கதாப்பாத்திரம் நடிகர் விஜய்யை வைத்து எடுத்துள்ள லியோ படத்தில் பின்தொடர்வது போல காட்டியிருப்பார் லோகேஷ். இதன் மூலம் அவர் லோகேஷ் சினிமாட்டிக் யுனிவர்ஸ்ஸை உருவாக்கி ரசிகர்களை குஷிபடுத்தியிருப்பார்.

நாம் என்னதான் வன்முறை தவறு என பேசினாலும், தங்களது மாஸ் ஹீரோ இதுபோன்ற கதைகளில் நடிப்பதையே மக்கள் பெரும்பாலும் விரும்புகின்றனர். இதுபோன்ற படங்களுக்குத்தான் வெற்றியையும் தருகின்றனர்.

மக்கள் விரும்பும் கதை

அப்படி நடிகர் விஜய் ரசிகர்களின் விருப்பத்திற்கு விருந்து வைக்கும் நோக்கில் எடுக்கப்பட்டது தான் லியோ திரைப்படம். நடிகை த்ரிஷா, நடிகர்கள் கௌதம் வாசுதேவ் மேனன், சஞ்சய் தத், அர்ஜூன், மன்சூர் அலிகான் என பெரும் நட்சத்திரப் பட்டாளமே நடித்திருந்த இந்தப் படம் நடிகர் விஜய்யின் கெரியரில் அதிகம் வசூல் செய்த படமாக மாறியது.

சர்ச்சைக்குள்ளான பாடல்

செவன் ஸ்கிரீன் ஸ்டூடியோ தயாரிப்பில் அனிருத் இசையில் வெளியான இந்தத் திரைப்படம் வெளியாகும் முன்பே சர்ச்சையைக் கிளப்பியது. இந்தப் படத்தில் வெளியான நான் ரெடி தான் வரவா எனும் பாடல், விஜய் ரசிகர்களால் பெரிதும் கொண்டாடப்பட்டது. அதே சமயத்தில், இப்பாடலில் இடம் பெற்றிருந்த சில வரிகள் போதைப்பழக்கத்தை ஊக்குவிப்பதாக அமைந்திருந்தது. இதையடுத்து அந்த பாடல் வரிகள் பாடலில் இருந்து நீக்கப்பட்டதுடன், சில இடங்களில் பாடல் மியூட் செய்தும் ஒலிபரப்பப்பட்டது.

லியோ கதை

ஹிமாச்சலப் பிரதேசத்தில் மனைவி, மகன் மகளுடன் சந்தோஷமாக வாழ்ந்து வருகிறார் பார்த்திபன்(விஜய்). இந்நிலையில், இவர் நடத்திவரும் காஃபி ஷாப்பிற்கு வந்த கொள்ளை கும்பல் ஒன்று, பார்த்திபனின் மகளை தாக்க வரும்போது, தன் கட்டுப்பாட்டை இழந்த பார்த்திபன், கொள்ளைக் கும்பலிடம் அதிரடியாக சண்டையிட்டு அவர்களை கொலை செய்கிறார்.

இந்த செய்தி நாடு முழுவதும் பரவ, பார்த்திபன் தான் நாம் தேடிவரும் லியோ தாஸ் என நினைத்து அடுத்தடுத்த கும்பல் அவரைத் தேடி இமாச்சலப் பிரதேசத்திற்கு வருகிறது. இதனால். பார்த்திபனின் குடும்பத்திற்கு பெரும் அச்சுறுத்தல் ஏற்படுகிறது. முதலில் இதை போலீஸ் உதவியுடன் சரிசெய்ய நினைக்கும் பார்த்திபன், பின் குடும்பத்தைக் காக்க அவரே களத்தில் இறங்குகிறார்.

அவர் ஏன் லியோ தாஸ் என அழைக்கப்படுகிறார். அவரிடம் மிருகத் தனமான குணம் எப்படி வந்தது என்பதை அடிப்படையாக கொண்டு உருவான ஆக்ஷன் திரில்லர் திரைப்படம் தான் லியோ.

நரபலியால் நடக்கும் சம்பவங்கள்

போதைப் பொருள் கடத்தல் கூட்டத்தின் தலைவர் அந்தோனி தாஸின் (சஞ்சய் தத்) இரட்டை பிள்ளைகளில் ஒருவர் தான் விஜய். இவர், தந்தைக்கு உதவியாக பல வேலைகளை செய்து வருகிறார். இந்நிலையில், இவர்களின் தொழில் மேலும் சிறந்து விளங்க நரபலி கொடுக்க வேண்டும் என முடிவு செய்கின்றனர் அந்தோணி தாஸூம் அவரது தம்பியும். விஜய்க்கு வைத்த பொறியில், அவரது சகோதரி சிக்கி நரபலிக்கு உள்ளாக்கப்படுகிறார். இதனை தாங்கிக் கொள்ள முடியாத லியோ, அங்குள்ள அனைவரிடமும் சண்டையிட்டு தப்பிக்கிறார்.

பின்னர், யாரும் எதிர்பார்க்காத வகையில், பார்த்திபன் எனும் பெயரில் ஹிமாச்சலப் பிரதேசத்தில் வசித்து வருகிறார். பின் சத்யாவை (த்ரிஷா) திருமணம் செய்து வாழ்வது போல் காட்சி அமைக்கப்பட்டிருந்தது.

தனி ஆளாக ஸ்கோர் செய்த விஜய்

மனைவிக்கு பயந்த கணவராக கழுதைப் புலியைக் காப்பாற்றுவது, வீக்கெண்டை ஜாலியாக பாடல்களுக்கு நடனமாடி கொண்டாடுவது, தன்னைச் சந்தேகப்படும் மனைவியிடம் உருகி அழுவது போன்ற இடங்களில் நடிகர் விஜய் பக்காவாக ஸ்கோர் செய்திருக்கிறார்.

அதிகப்படியான நடிகர்கள் படத்தில் இருந்தாலும் அவர்களுக்கான ஸ்பேஸ் குறைவாக இருந்ததால்,, கதாப்பாத்திரங்களால் அவர்களுக்கான நடிப்பை முழுமையாக வழங்க முடியவில்லை, இதனால் பிளாஷ்பேக் சொல்லும் 2ம் பாகும் விறுவிறுப்பாக அமையவில்லை. கிளைமேக்ஸ் காட்சிகளுக்காக மட்டும் நடிகர் அர்ஜூன் பயன்படுத்தப்பட்டது போல் தோன்றுகிறது.

கொண்டாடும் ரசிகர்கள்

படம் நம்மை சோர்வடையச் செய்யும் போதெல்லாம் நடிகர் விஜய்யும், இசையமைப்பாளர் அனிருத்தும் படத்தை தூக்கி நிறுத்துகின்றனர். பின் ரசிகர்களை ஆரவாரம் செய்ய, கிளைமேக்ஸ் காட்சியில், விக்ரம் படத்தின் நாயகனான கமல்ஹாசன் லியோ தாஸிடம் பேசுவது போல் காட்சி அளிக்கிறது.

படத்தின் பாதி இடங்களில் சண்டை காட்சிகளும் தெறிக்கும் ரத்தங்களும், கொலைகளும் நிகழ்ந்திருந்தாலும், விஜய் ரசிகர்கள் படத்தை கொண்டாடி வந்தனர். லியோ படம் தமிழ்நாட்டில் விரைவில் 100கோடி வசூலை எட்டியப் படம் என்ற அந்தஸ்தை பெற்றதுடன், அண்டை மாநிலங்களிலும் வெளிநாடுகளிலும் வெளியாகி மாபெரும் வெற்றி பெற்றது. இப்படத்தில் வெளியான பாடல்கள்அனைத்தும் பெரியவர்களைக் கடந்து குழந்தைகளுக்கும் பிடிக்கும் வண்ணம் அமைந்துள்ளது. இதனால். இப்படத்தின் பாடல்கள் யூடியூபிலும் சாதனைகள் படைத்தன.

லியோ 2

இந்தப் படத்தின் வெற்றியைத் தொடர்ந்து இயக்குநர் லோகேஷ் கனகராஜூடன் இணைந்து பணியாற்ற பலரும் விருப்பம் தெரித்து வருகின்றனர். இளைஞர்கள் அவரது லோகேஷ் சினிமாட்டிக் யூனிவர்ஸை புகழ்ந்து தள்ளி வருகின்றனர். அத்துடன் நில்லாமல் லியோ படத்தின் 2ம் பாகம் குறித்தும் தொடர்ந்து கேள்வி எழுப்பி வருகின்றனர். இதற்கு பதிலளித்த லோகேஷ் கனகராஜ், நிச்சமயம் அந்த ஆசை உள்ளது. அப்படி எடுத்தால் அந்த படத்திற்கு பார்த்திபன் என்ற பெயரைத்தான் வைப்பேன் என்றார். ஆனால், அதற்குள்ளாக நடிகர் விஜய் முழுநேர அரசியலில் இறங்க உள்ளதாகக் கூறி திரைப்படங்களில் இனி நடிக்கமாட்டேன் என அறிவித்து அவரது ரசிகர்களை சோகத்திற்கு உள்ளாக்கியுள்ளார்.

வசூலில் சாதனை

இந்தப் படம் வெளியாகி இன்றுடன் ஓராண்டு ஆகியிருந்தாலும், லியோ படத்தைத் தொடர்ந்து நடிகர் விஜய் நடிப்பில் வெளியான கோட் திரைப்படத்தால், லியோ படத்தின் வசூல் சாதனைகள் முறியடிக்க முடியவில்லை என்ற செய்திகள் வெளியான வண்ணம் இருக்கின்றன.