H Vinoth on Rn Ravi: துணிவில் ஆளுநரை தாக்கினேனா? - ஹெச்.வினோத் விளக்கம்!
துணிவு படத்தில் தமிழக கவர்னரை தாக்கவில்லை என்று இயக்குநர் ஹெச்.வினோத் பேசியிருக்கிறார்.
ஜனவரி 11 ம் தேதி வெளியான துணிவு திரைப்படம் உலகளாவிய அளவில் கொண்டாடப்பட்டு வருகிறது. அஜித், மஞ்சுவாரியர், சமுத்திரக்கனி, ஜான் கோக்கன் உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் நடித்த இந்தப்படத்தை இயக்குநர் ஹெச்.வினோத் இயக்கி இருந்தார்.
ட்ரெண்டிங் செய்திகள்
வங்கிகள் எப்படி மக்களின் பணத்தை அவர்களுக்கே தெரியாமல் கொள்ளை அடிக்கிறார்கள் என்பதை புட்டு புட்டு வைத்த இந்தப்படம் பொதுமக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தும் படமாகவும், அதே நேரத்தில் அஜித் ரசிகர்களை கொண்டாட வைக்கும் படமாகவும் அமைந்தது. சிங்கிள் மேன் ஷோவாக அஜித் படத்தில் மிரட்டி இருந்தார்.
பாராட்டுக்கள் ஒரு புறம் இருந்தாலும், இன்னொருபுறம் துணிவு படம் மியூச்சுவல் ஃபண்ட்டில் முதலீடு செய்வதை தவறாக சித்தரிப்பதாக விமர்சனங்களும் எழுந்தன. அதே போல படத்தில் சமுத்திரக்கனி ரவீந்தர் என்ற பெயர் கொண்ட ராணுவ அதிகாரியை ‘ரவீந்தர் இது தமிழ்நாடு’ என்று சொல்லும் காட்சியும் சமூகவலைதளங்களில் வைரலானது. அதற்கு காரணம், தமிழ்நாட்டில் முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கும் ஆளுநர் ரவிக்கும் இடையே நடக்கும் முட்டல் மோதல்கள்தான்.
தமிழ்நாடு சட்டப்பேரவையின் 2023ஆம் ஆண்டுக்கான முதல் கூட்டத் தொடரில் ஆளுநர் தான் வாசித்த உரையில் சில பகுதிகளை விட்டதால், அவருக்கு எதிரான தீர்மானத்தை சட்ட சபையிலேயே இயற்றினார் முதல்வர். இதனால் கோபமடைந்த ஆளுநர் அங்கிருந்து கோபமாக வெளியேறினார். இது தவிர தமிழ்நாடை தமிழகம் என்று ஆளுநர் கூறியதும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இந்த நிலையில் இதனை சுட்டிக்காட்டும் விதமாகத்தான் ஹெச். வினோத் அந்தக்காட்சியை காட்சிப்படுத்தி இருக்கிறார் என்ற தகவல் பரவியது;
இந்த நிலையில், அண்மையில் behindwoods யூடியூப் சேனலுக்கு பேட்டியளித்த வினோத் இது குறித்து பேசியிருக்கிறார். அதில் அவர் பேசியதாவது, “ அது என்னுடைய உதவி இயக்குநர் செய்த தவறால் வந்து விட்டது; உண்மையில் ராணுவ அதிகாரி கேரக்டர் பெயர் பிரவீன். ஆனால் ஆடை தைத்து வரும் போது ரவீந்தர் என வந்து விட்டது. அவர் ஏன் ரவீந்தர் என்று தைத்தார் என்று அவருக்கும் தெரியவில்லை. ஏன் அப்படி தைத்தாய் என்று கேட்டால், இல்லை சார்.. தெரியல சார் வந்து விட்டது என்றான். அப்படி தெரியாமல் வந்ததுதான் அந்த பெயர். அதனால் நாங்கள் கதையிலும் ரவீந்தர் என்று மாற்ற வேண்டிய சூழ்நிலைக்கு தள்ளப்பட்டு விட்டோம். ஆனால் அது தற்போதைய அரசியல் சூழ்நிலையோடு தொடர்பு படுத்தப்பட்டு என்னவல்லாமோ நடக்கிறது. அதற்கும் இதற்கும் சம்பந்தமில்லை.” என்று அ வர் அதில் பேசினார்.
டாபிக்ஸ்