கோயில் அருகில் கட்டிடங்கள் கட்ட அனுமதி வழங்கியது எப்படி? - நீதிபதிகள் கேள்வி
Nov 28, 2022, 08:23 PM IST
மதுரை: ஸ்ரீரங்கம் அருள்மிகு அரங்கநாத சுவாமி கோயிலைச் சுற்றி கட்டிடங்கள் கட்ட அனுமதி வழங்கியது எப்படி? என உயர் நீதிமன்ற மதுரை கிளை நீதிபதிகள் கேள்வி எழுப்பி உள்ளனர்.
கரூர், குளித்தலையைச் சேர்ந்த மகுடேஸ்வரன் என்பவர் உயர் நீதிமன்ற மதுரை கிளையில் ஒரு பொதுநல மனுத்தாக்கல் செய்திருந்தார். அதில் "தமிழகத்தில் பழமையான கோயில்கள், கோபுரங்கள் உள்ள பகுதிகளில் ஒரு கிலோ மீட்டர் சுற்றளவிற்குள் 9 மீட்டர் உயரத்திற்கு மேல் கட்டிடங்கள் கட்டக்கூடாது என விதிமுறை வகுக்கப்பட்டுள்ளது.
திருச்சி, ஸ்ரீரங்கம் அருள்மிகு அரங்கநாத சுவாமி கோயிலைச் சுற்றி உள்ள பகுதிகளில் அரசாணையை மதிக்காமல் சட்ட விரோதமாக கட்டிடங்கள் கட்டி உள்ளனர். 30.01.1997 ஆம் ஆண்டு அரசாணை படி கோயிலைச் சுற்றி 1 கிலோ மீட்டர் தூரம் வரை கட்டிடங்கள் கட்டக்கூடாது என்றும் 9 மீட்டர் உயரத்துக்கு மேல் கட்டிடங்கள் கட்டக்கூடாது என்றும் அரசாணை பிறப்பிக்கப்பட்டது.
அரசாணையை மீறி அப்பகுதியில் 73 கட்டிடங்கள் 9 மீட்டர் உயரத்துக்கு மேல் கோயிலில் இருந்து 100 மீட்டர்க்குள் கட்டப்பட்டுள்ளது. கோயில் அருகே அமைந்துள்ள உத்தர வீதி, சித்திர வீதிகளில் வீடுகள் மற்றும் கட்டிடங்கள் கட்டப்பட்டுள்ளது. விதிகளை மீறி பல கட்டிடங்கள் 9 மீட்டர் உயரத்துக்கு மேல் கட்டப்பட்டுள்ளது. விதிமீறி கட்டபட்டுள்ள கட்டிடங்களை ஆய்வு செய்து அகற்ற கோரி வழக்கறிஞர் ஆணையாளர்யை நியமனம் செய்ய வேண்டும் என அந்த மனுவில் கூறியிருந்தார்.
இந்த வழக்கு நீதிபதிகள் மகாதேவன் மற்றும் சத்யநாராயண பிரசாத் அமர்வு முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள், கோயில் அருகில் உள்ள இடங்களில் 9 மீட்டர் உயரத்தில் கட்டிடங்கள் கட்டுவதற்கு அனுமதி வழங்கியது எப்படி எனக் கேள்வி எழுப்பியதோடு, இந்த வழக்கு தொடர்பாக திருச்சி மாநகராட்சி ஆணையர், திருச்சி நகர திட்டமிடல் இணை இயக்குனர் மற்றும் ஸ்ரீரங்கம் அரங்கநாத சுவாமி கோயில் இணை ஆணையர் ஆகியோர் நீதிமன்றத்தில் நேரில் ஆஜராக உத்தரவிட்டு வழக்கு விசாரணையை டிசம்பர் 1 ஆம் தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டனர்
டாபிக்ஸ்