தமிழ் செய்திகள்  /  தமிழ்நாடு  /  சோழர் கால கல்வெட்டு கண்டுபிடிப்பு

சோழர் கால கல்வெட்டு கண்டுபிடிப்பு

Priyadarshini R HT Tamil

Feb 06, 2023, 12:31 PM IST

திருச்சி மாவட்டம் லால்குடி அருகே சோழர் காலத்து கல்வெட்டு கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
திருச்சி மாவட்டம் லால்குடி அருகே சோழர் காலத்து கல்வெட்டு கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

திருச்சி மாவட்டம் லால்குடி அருகே சோழர் காலத்து கல்வெட்டு கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

திருச்சி மாவட்டம் லால்குடி அருகே திருமங்கலம் என்ற கிராமம் உள்ளது. இங்குள்ள சாமவேதீசுவரர் கோயிலில் முசிறி, அறிஞர் அண்ணா அரசு கலைக்கல்லூரி வரலாற்றுத்துறை உதவிப்பேராசிரியர் முனைவர் அகிலாவும் திருச்சிராப்பள்ளி சீதாலட்சுமி ராமசாமி கல்லூரி வரலாற்றுத்துறைத் தலைவர் முனைவர் நளினியும் ஆய்வு மேற்கொண்டனர். அப்போது அங்குள்ள இரண்டு கல்வெட்டுகளில், சோழ அரசரான முதற் குலோத்துங்கர் காலத்தில் (பொதுக்காலம் 1070-1130), இந்த ஊரை நிர்வகித்த மகாசபை அங்கிருந்த திரு அயோத்தி ஆழ்வார் கோயிலில் கூடி ஊர் நிலவிற்பனை தொடர்பான சில முடிவுகளை மேற்கொண்டதை படித்தறிந்தனர்.

ட்ரெண்டிங் செய்திகள்

Fire Accident Near Sivakasi: சிவகாசி அருகே பட்டாசு ஆலை வெடிவிபத்து - 8 பேர் உயிரிழப்பு; முதலமைச்சர் ஸ்டாலின் இரங்கல்

Today Gold Rate: நாளை அட்சய திருதியை .. இன்று தங்கம் விலை திடீர் குறைவு. . இன்றைய நிலவரம் என்ன தெரியுமா?

Rain : மக்களே எச்சரிக்கை.. இந்த 8 மாவட்டங்களில் கனமழை கொட்ட போகுதாம்.. அடுத்த 5 நாட்கள் இடி மின்னலுடன் மழைக்கு வாய்ப்பு!

Captain Vijayakanth: ’நாளை விஜயகாந்திற்கு பத்மபூஷன் விருது!’ கேப்டன் கோயில் வரை பிரேமலதா செய்யப்போகும் சம்பவம்!

அக்கோயில் எங்குள்ளது என்று கோயில் அலுவலர்களிடம் கேட்க, அப்பெயரில் திருமங்கலத்தில் கோயில் ஏதுமில்லை என்றும் ஆனால், புதிய கோயிலொன்று வரதராஜப் பெருமாள் என்ற பெயருடன் ஊருக்குள் இருப்பதையும் அவர்கள் கூறியதுடன், அக்கோயில் பட்டாச்சாரியார் கோபாலகிருஷ்ண மாதவன் உதவியுடன் அங்கு ஆய்வுசெய்யவும் துணைநின்றனர். 

ஒருதளத் திராவிட விமானம், முகமண்டபம், பெருமண்டபம், முகப்புக்கூடம் என அமைந்துள்ள வரதராஜப் பெருமாள் கோயிலின் விமானக் கீழ்த்தளமும் முகமண்டபமும் கருங்கல் கட்டுமானங்கள். பிற இரண்டும் செங்கல்லால் ஆனவை. ஊர்த் தோப்பொன்றில் அகழ்ந்தபோது கிடைத்த விஷ்ணுவின் பேரளவுச் சிற்பம் முகமண்டபத்தில் காட்சியளித்தது. சோழர் காலக் கலையமைதியில் இருந்த அச்சிற்பம் பொ. கா. 11ஆம் நூற்றாண்டை சேர்ந்ததாகும்.  

கோயில் விமானத்தின் வடசுவரிலும் தென்சுவரிலும் இரண்டு கல்வெட்டுகள் இருப்பதை பட்டாச்சாரியார் சுட்ட, அவற்றை ஆய்வாளர்கள் பார்த்தனர். வடசுவர்க் கல்வெட்டுப் படிக்க முடியாதவாறு சிதைந்திருந்தது. தென்சுவர்க் கல்வெட்டு தனிக் கற்பலகையில் பொறிக்கப்பட்ட பதிவாக இருந்து, பின்னாளில் கட்டுமானத்தில் இணைக்கப்பட்டிருந்தது. 

அக்கல்வெட்டில், கோடிட்டு எழுதப்பட்டிருந்த தொடர்களுக்கு மேலுள்ள பகுதியில் செதுக்கப்பட்டுள்ள சுருள்கத்தி, பசும்பை, ஏர், அரிவாள், சக்கரம் முதலியன அக்கல்வெட்டு வணிகக்குழுவினரால் பொறிக்கப்பட்டது என்பதைத் தெரிவித்தன. ஒன்பது வரிகளில் தமிழ் எழுத்துகளில் பொ. கா. 11ஆம் நூற்றாண்டு எழுத்தமைதியில் செதுக்கப்பட்டுள்ள அக்கல்வெட்டு, கோயிலுள்ள பகுதியை ‘திருஅயோத்தி எம்பெருமான் திருமுற்றம்’என்றழைக்கிறது. இத்திருமுற்றம் ‘பகவிருகாறர்’தன்மமாகக் கல்வெட்டில் சுட்டப்படுகிறது. பகவிருகாறர் என்ற தொடர் தனிமனிதரை குறிக்கிறதா அல்லது ஒரு குழுவைக் குறிக்கிறதா என்பதை அறியக்கூடவில்லை. முதற் குலோத்துங்கர் காலத்தில் திருமங்கலம் சபை கூடிய வளாகமாக இருந்த திருஅயோத்தியாழ்வார் திருக்கோயில் பகுதி அதுதான் என்பதைக் கல்வெட்டு அடையாளப்படுத்தியது. 

குலோத்துங்கர் காலத்தில் ஊர் சபை கூடுமளவிற்கு செழிப்பாக விளங்கிய அயோத்தியாழ்வார் கோயில் காலப்போக்கில் சிதைந்திருக்கலாம். கட்டுமானம் சிதறியபோதும் இவ்வரிய கல்வெட்டும் ஊர்த் தோப்பிலிருந்து அகழப்பட்ட திருமால் திருமேனியும் தப்பிப் பிழைத்துள்ளன. 

வரதராஜப் பெருமாள் கோயிலின் இன்றைய கட்டுமானம் அண்மைக் காலத்தது என்றபோதும், அது கட்டப்பட்டிருக்கும் இடம் திருமங்கலத்திலிருந்த அயோத்தியாழ்வார் கோயில் திருமுற்றமாகவே இருப்பது சிறப்பாகும் என்று கூறும் டாக்டர் மா.இராசமாணிக்கனார் வரலாற்றாய்வு மைய இயக்குநர் டாக்டர் இரா. கலைக்கோவன், கோயில் முகமண்டபத்திலுள்ள விஷ்ணுவின் திருமேனி பழங்காலத்தே திருஅயோத்தி ஆழ்வாராக இக்கோயில் கருவறையில் விளங்கியிருக்கலாம் என்றும் தெரிவித்துள்ளார். வரலாறு எப்படியெல்லாம் காலத்தை மீறிக் கருக்கொண்டுவிடுகிறது என்பதற்கு இக்கோயிலும் இங்குள்ள கல்வெட்டுமே சான்றுகளாகும் எனும் பேராசிரியர் மு. நளினி இக்கண்டுபிடிப்பு கல்வெட்டுத் துறையினருக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளதாக அறிவித்துள்ளார்.

டாபிக்ஸ்