Heavy Rain : கனமழையால் 36 பேர் உயிரிழப்பு.. வெள்ளக்காடாக காட்சியக்கும் பிரேசில்!
Feb 20, 2023, 02:11 PM IST
Brazil Heavy rain : பிரேசில் மழை-வெள்ளத்தில் சிக்கி பெண்கள், குழந்தைகள் உள்பட இதுவரை 36 பேர் பலியாகியுள்ளனர்.
பிரேசில் நாட்டில் தென்கிழக்கு கடற்கரையோர பகுதிகளில் கடந்த சில நாட்களாக கன மழை பெய்து வருகிறது. தென்கிழக்கு கடலோரப் பகுதிகளில் பெய்த கனமழையால் வெள்ளம் மற்றும் நிலச்சரிவில் சிக்கி 36 பேர் உயிரிழந்துள்ளனர்.
நூற்றுக்கணக்கானோர் சாங்பவுலோ பகுதியில் இருந்து இடம்பெயர்ந்துள்ளனர். ஆயிரக்கணக்கான மக்கள் வீடுகளை இழந்து தவிக்கின்றனர். அவர்கள் முகாம்களில் தங்க வைக்கப்பட்டு உள்ளனர். தொடர் மழையால் பலி எண்ணிக்கை அதிகரிக்கலாம் என அஞ்சப்படுகிறது.
இடைவிடாமல் பெய்து வரும் மழையால் பொது மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டு உள்ளது. சாங்பவுலோ மாகாணத்தில் பல இடங்களில் நிலச்சரிவு ஏற்பட்டது. இதனால் ஏராளமான வீடுகள் இடிந்து விழுந்தது. அப்பகுதியே வெள்ளக்காடாக காட்சி அளிக்கிறது.
சாலைகளில் வெள்ளம் ஆறு போல பெருக்கெடுத்து ஓடுகிறது. மேலும் நிலச்சரிவில் சிக்கி பலர் மாயமாகியுள்ளனர்.அவர்களை தேடும் பணியும் தொடர்ந்து நடைப்பெற்று வருகிறது.
இகபெல்லா உள்ளிட்ட நகரங்கள் வெள்ளத்தில் மிதக்கிறது. சாலைகள் பலத்த சேதம் அடைந்தது. சாலைகள் பிளந்து கிடப்பதால் போக்குவரத்து முற்றிலும் முடங்கி போய் கிடக்கிறது. பல இடங்களில் மரங்கள் வேரோடு சாய்ந்து விட்டது. மழை-வெள்ளத்தில் சிக்கி பெண்கள், குழந்தைகள் உள்பட இதுவரை 36 பேர் பலியாகியுள்ளனர்.
குடிநீர் மற்றும் போக்குவரத்து நிறுத்தப்பட்டு உள்ளதால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை கடுமையாக பாதிக்கப்பட்டு உள்ளது. தொடர்ந்து இடைவிடாமல் மழை கொட்டி தீர்ப்பதால் மீட்பு பணியில் தாமதம் ஏற்பட்டு உள்ளது. இடிந்து கிடக்கும் வீடுகளின் இடிபாடுகளை மீட்கும் பணி நடந்து வருகிறது.
சாங்பவுலோ கடலோரப் பகுதியில் கனமழை தொடரும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதனால் அங்கு நிலைமை இன்னும் மோசமாக கூடும் என அஞ்சப்படுகிறது.
தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், புகைப்பட கேலரி, சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.
டாபிக்ஸ்