Tamil Latest News Updates: வடமாநில தொழிலாளர்கள் பத்திரமாக உள்ளனர் -மா.சு
Mar 04, 2023, 07:20 AM IST
இன்று (04-03-2023) தமிழ்நாடு, இந்தியா, உலகம், விளையாட்டு உள்ளிட்ட செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள இந்தப் பக்கத்தில் இணைந்திருங்கள்.
ஆஸ்கர் மேடையில் தமிழில் பேச யார் காரணம்? - ஏ.ஆர்.ரஹ்மான் பேட்டி!
ஆஸ்கரின் மேடை பேச்சிற்காக நான் பெரிதாக எதுவும் தயார் செய்ய வில்லை. எது வருகிறதோ அதை பேசுவோம்.. விருது வாங்கிய உடன் நன்றி கூறி முடித்துக்கொள்வோம் என முடிவு செய்து வைத்திருந்தேன். ஆனால் நான் பார்வையாளர்களின் இடத்தில் அமர்ந்திருந்த போது, ஆஸ்கர் விருது வாங்கிய ஸ்பேனிஷ் நடிகை பெனெலொபே க்ருஸ் ஸ்பேனிஷ் மொழியில் பேசினார். அதை பார்த்த உடன்தான் நான் தமிழில் பேச முடிவு செய்தேன்.
-ஏ.ஆர்.ரஹ்மான்
வரிசை கட்டும் விருதுகள்; சொந்த பணத்தை கொடுத்தாரா ராஜமெளலி?
ஆஸ்கர், கோல்டன் குளோப் உள்ளிட்ட விருது நிகழ்ச்சிகளுக்கு ஆர்.ஆர்.ஆர் படத்தை கொண்டு செல்வதற்கான பிரசாரத்தை மேற்கொள்ள படக்குழு 83 கோடி ரூபாய் வரை செல்வழித்து இருக்கிறது. இதில் குறிப்பிடத்தக்க விஷயம் என்னவென்றால், அதில் பெரும் தொகையை இயக்குநர் ராஜமெளலியே தனது சொந்த பணத்தில் இருந்து எடுத்துக்கொடுத்துள்ளார்.
இதர தொகையானது ரஷ்யா மற்றும் ஜப்பான் ஆகிய நாடுகளில் ஆர்.ஆர்,ஆர் படம் வசூலித்த தொகையில் இருந்து கொடுக்கப்பட்டு இருக்கிறதாம். ஆனால் இது குறித்த அதிகாரப்பூர்வ தகவல்கள் ஏதும் வெளியாக வில்லை.
தமிழகத்துக்கு வரும் பீகார் அதிகாரிகள்
தமிழகத்தில் பீகார் மாநில தொழிலாளர்கள் தாக்கப்படுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ள நிலையில், பீகாரைச் சேர்ந்த 4 பேர் கொண்ட அதிகாரிகளை தமிழகத்திற்கு அனுப்ப அம்மாநில அரசு முடிவு செய்துள்ளது.
வடமாநில தொழிலாளர்கள் பத்திரமாக உள்ளனர் - அமைச்சர் மா.சுப்பிரமணியன்
தமிழ்நாடு வடமாநில தொழிலாளர்களுக்கு எதிரான இடம் என்பது போல் பொய் தகவலை பரப்புகின்றனர். இந்தியாவில் மற்ற மாநிலங்களை விட தமிழ்நாட்டில் தான் வடமாநில தொழிலாளர்கள் பத்திரமாக உள்ளனர் என அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.
போலி டாக்டர் பட்ட விவகாரம்: ஹரீஷின் முன் ஜாமின் மனு தள்ளுபடி
போலி டாக்டர் பட்டம் விவகாரத்தில் நிர்வாகி ஹரீஷின் முன் ஜாமின் மனுவை நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது-
நீதிமன்ற வளாகத்தில் பாதுகாப்பு அதிகரிப்பு
டெல்லி முன்னாள் துணை முதலவரும், நிதியமைச்சருமான மணீஷ் சிசோடியா புதிய மதுபான கொள்கையில் முறைகேடு செய்ததாக மணீஷ் சிசோடியாவை கடந்த மாதம் 27ம் தேதி சிபிஐ கைது செய்தது. இந்நிலையில் சிபிஐ நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தபட உள்ள நிலையில், நீதிமன்ற வளாகத்தில் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.
விராட் கோலி - அனுஷ்கா ஷர்மா வழிபாடு!
மத்திய பிரதேசத்தில் உள்ள மஹாகாளேஸ்வரர் கோயிலில் விராட் கோலி - அனுஷ்கா ஷர்மா தம்பதி சாமி தரிசனம் செய்தனர்
நூதன திருட்டில் ஈடுபட்ட தாய், மகன் கைது;
சென்னை திருவல்லிக்கேணியில் நகை வாங்குவதுபோல் நடித்து நூதன திருட்டில் ஈடுபட்டவர்கள் குறித்து கடை உரிமையாளர் ராஜேஷ் அளித்த புகார் அளித்தார். அதன் பேரில், சிசிடிவி காட்சி, செல்போன் எண்களைக் கொண்டு மயிலாடுதுறையைச் சேர்ந்த கவிதா, அவரது மகன் கவுதமை கைது செய்து காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
தங்கம் விலையில் புது மேஜிக்
சென்னையில் இன்று தங்கத்தின் விலை எந்த மாற்றமும் இல்லாமல் அதே விலையில் 5,240 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டிருக்கிறது.
பெரம்பூர் நகைக்கடை கொள்ளை: 2 பேர் கைது
பெரம்பூரில் உள்ள நகை கடையில் 9 கிலோ நகை கொள்ளை அடித்த வழக்கில், பெங்களூரில் 2 பேரை தனிப்படை போலீசார் கைது செய்துள்ளதாக சென்னை காவல்துறை தகவல் தெரிவித்துள்ளது.
மருத்துவக் கல்லூரி மாணவரின் சேர்க்கையை ரத்து செய்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு
2020ல் நீட் தேர்வு ஓ.எம்.ஆர் விடைத்தாளில் குளறுபடி இருந்தது தொடர்பான வழக்கில், தூத்துக்குடி மருத்துவக் கல்லூரி மாணவரின் சேர்க்கையை ரத்து செய்ய சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
மேலும் ஒருவர் தற்கொலை
ஆன்லைன் சூதாட்டத்தில் சுமார் 20 லட்சம் ரூபாய் பணத்தை இழந்த சென்னை, மாடம்பாக்கம் பகுதியை சேர்ந்த மருத்துவ பிரதிநிதி வினோத்குமார் தற்கொலை செய்து கொண்டுள்ளார்
3 மாவட்டங்களுக்கு இன்று விடுமுறை
அய்யா வைகுண்டர் அவதார தினத்தையொட்டி கன்னியாகுமரி, நெல்லை, தென்காசி ஆகிய மாவட்டங்களில் இன்று உள்ளூர் விடுமுறை அளிக்கப்பட்டிருக்கிறது.
முன்னாள் அமைச்சர் சி.விஜயபாஸ்கரின் உதவியாளர் கைது
அதிமுக முன்னாள் அமைச்சர் சி.விஜயபாஸ்கரின் உதவியாளர் ரவி, ஓட்டுநர் விஜய் ஆகியோர் சென்னையில் கைது செய்யப்பட்டுள்ளனர். முத்துலட்சுமி என்பவரிடம் அரசு வேலை வாங்கித் தருவதாக ரூ.11 லட்சம் பெற்று மோசடி செய்ததாக எழுந்த புகாரை அடுத்து இருவரும் கைது செய்யப்பட்டிருக்கிறார்கள்.
மெட்ரோ ரயில் சீரானது
சென்னையில் அனைத்து மெட்ரோ ரயில்களும் இன்று காலை முதல் வழக்கம்போல் சீரான நேரத்தில் இயக்கப்படுகிறது. ஆலந்தூர் மெட்ரோ ரயில் நிலையத்தில் ஏற்பட்ட தொழில்நுட்ப கோளாறு சரிசெய்யப்பட்டதை அடுத்து 20 மணிநேரத்திற்கு பிறகு மெட்ரோ ரயில் சேவை சீரானது.
டாஸ்மாக்கில் பெட்ரோல் குண்டு வீச்சு
காரைக்குடி அருகே பள்ளத்தூர் அரசு டாஸ்மாக் கடையில் 2வது முறையாக பெட்ரோல் குண்டு வீசப்பட்டதில், விற்பனையாளர் அர்ஜுனன் படுகாயம் அடைந்தாா்.