22 Years of Thulluvadho Illamai : விடலைப்பருவ மாற்றம்; தனுஷ்-செல்வாவுக்கு முகவரி! 22 ஆண்டுகளில் துள்ளுவதோ இளமை!
May 10, 2024, 05:15 AM IST
22 Years of Thulluvadho Illamai : தமிழ் சினிமா பல்வேறு சமூகம் சார்ந்த பிரச்னைகள் குறித்த பேசியுள்ளது என்றாலும், இதுபோல் விடலை பருவத்தினரின் மனநிலை, அவர்கள் எதிர்கொள்ளும் மாற்றங்கள் குறித்து அது அவ்வளவு பேசியதில்லை.
விடலைப்பருவம் என்பது மிகவும் கடினமான காலகட்டம் ஆகும். ஆண், பெண் குழந்தைகள் இருவருமே குழந்தை பருவத்தை கடந்து, அடுத்த ஒரு வளர்ந்தவர்களாக பரிணமிக்கும் பருவம்.
எனவே இந்த காலகட்டத்தில்தான் ஒருவர் கவனமுடன் செயல்படவேண்டும் என்று பெரியவர்கள் அறிவுறுத்திக்கொண்டும், அவர்களுக்கு வழிகாட்டிக்கொண்டும் இருப்பார்கள்.
தமிழ் சினிமா பல்வேறு சமூகம் சார்ந்த பிரச்னைகள் குறித்த பேசியுள்ளது என்றாலும், இதுபோல் விடலை பருவத்தினரின் மனநிலை, அவர்கள் எதிர்கொள்ளும் மாற்றங்கள் குறித்து அது அவ்வளவு பேசியதில்லை.
பன்னீர் புஷ்பங்கள் என்ற படம் பள்ளிப்பருவத்தில் ஏற்படும் காதலை பேசியிருக்கும். அதற்குப்பின்னர் அழியாம கோலங்கள் படமும் விடலை பருவ மாற்றங்கள் குறித்த படம். அந்த வரிசையில் துள்ளுவதோ இளமை படம் விடலைப்பருவம் குறித்து ஃபன் மற்றும் கருத்து கலந்து எடுத்துக்கூடிய படம்.
துள்ளுவதோ இளமை
துள்ளுவதோ இளமை படத்தை செல்வராகவன் எழுதி, அவரது தந்தை கஸ்தூரி ராஜாவு இயக்கிய படம். இந்தப்படத்தில் தான் தனுஷ் அறிமுகம் ஆனார். அவர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருப்பார். இந்தப்படத்தில் எண்ணற்ற புது முகங்களும் களம் இறக்கப்பட்டிருப்பார்கள். அபினே, ஷெரின், ஷில்பா, ரமேஷ் மற்றும் கங்கேஸ்வரி முக்கிய கதாபாத்திரத்தில் நடித்த அனைவருமே புதியவர்கள்தான். இதைத்தவிர தலைவாசல் விஜய், விஜயனுமார், ரமேஷ் கண்ணா என தெரிந்து முகங்களும் இருந்தனர்.
இந்தப்படத்தின் பெரிய பலமே கதைதான், படிக்கும் வயதில் வீட்டு பிரச்னையால் சிக்க தவிக்கும் விடலைப்பருவ பள்ளி மாணவர்கள் எடுக்கும் தவறான முடிவையும், அதன் விளைவுகளையும் எடுத்துக்கூறி, இறுதியில், பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளை குறிப்பாக விடலைப்பருவத்தினரை அணுகும் முறையும், அணுக வேண்டிய முறையும் என்னவென்று குறிப்பிட்டு இருப்பார்கள்.
இந்தப் படம் வெளியானபோது, பரபரப்பாக பேசப்பட்டது. மேலும் தமிழ் சினிமாவின் முக்கிய கலைஞர்களாக தற்போது ஜொலித்து வரும் நடிகர் தனுஷ், இயக்குநர் செல்வராகவன் ஆகியோரை கொடுத்தது.
செல்வராகவனுக்கு என்ட்ரி
இயக்குநர் கஸ்தூரி ராஜாவின் மகனான செல்வராகவன் இந்த படம் மூலம் இயக்குநராகவும், அவரது இளைய மகன் தனுஷ் கதாநாயகனாகவும் அறிமுகமானார்கள். கடும் பொருளாதார நெருக்கடியில் சிக்கி தவித்த கஸ்தூரி ராஜாவின் குடும்பத்தை கரை ஏற்றிவிட்ட படமாக அமைந்த இந்த படத்தை இயக்கியது செல்வராகவனாக இருந்தாலும், வியாபாரத்துக்காக கஸ்தூரி ராஜாவின் பெயர் டைட்டில் கார்டில் இடம்பெறும்.
மூன்று பெண்கள், மூன்று ஆண்கள் என உயர்நிலைப்பள்ளியில் படிக்கும் மாணவர்கள் சமூகத்தின் பல்வேறு சூழலில் இருந்து வருபவர்கள், வீட்டில் உள்ள பல்வேறு பிரச்னைகளால், வீட்டிலிருந்து வெளியேறி தாங்கள் ஒன்றுசேர்ந்து வாழ முடிவெடுப்பபார்கள். அவர்கள் எதிர்கொள்ளும் பிரச்னைகளைத்தான் இந்தப்படம் பேசியிருக்கும். இந்தப்படம் 2002ம் ஆண்டு மே 10ம் தேதி வெளியானது. ரசிகர்களிடம் நல்ல வரவேற்பையும், பத்திரிக்கைகளிடம் இருந்து நல்ல விமர்சனங்களையும் பெற்றது.
மேலும் செல்வராகவன் - யுவன் ஷங்கர் ராஜா - அரவிந்த் கிருஷ்ணா கூட்டணி இந்த படத்தில் இருந்துதான் தங்களது வெற்றி பயணத்தை தொடங்கினர். யுவனின் இசையில் பாடல்கள் அனைத்தும் படு ஹிட். குறிப்பாக நெருப்பு கூத்தடிக்கிது பாடலில் நடனம், தனுசை ஒரு சிறந்த நடிகராக மட்டுமின்றி, டான்சராகவும் காட்டியிருக்கும்.
தீண்ட, தீண்ட, இது காதலா, கண் முன்னே, வயதுக்கு வந்த பெண்ணே, காற்றுக்கு காற்றுக்கு என அனைத்து பாடல்களுமே படு ஹிட்.
தமிழ் சினிமாவில் மிகப் பெரிய திருப்புமுனை படமாக மட்டுமில்லாமல், சிறந்த சினிமாக்களின் லிஸ்டில் இடம்பெறும் படமாக அமைந்திருக்கும் துள்ளுவதோ இளமை வெளியாகி இன்றுடன் 22 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளது. அந்த நாளில் இந்தப்படம் குறித்து உங்களுக்கு சில தகவல்களை ஹெச்.டி.தமிழ் பகிர்ந்துகொள்கிறது.
டாபிக்ஸ்