கோலாகலமாக முடிந்தது அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு..18 காளைகளை அடக்கி காரை வென்ற கார்த்திக்!
Alanganallur Jallikattu 2024: தைப்பொங்கலை முன்னிட்டு இன்று காலை 7 மணிக்கு துவங்கிய உலகப்புகழ்பெற்ற அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டி நிறைவடைந்தது.

தைப்பொங்கல் பண்டிகையை முன்னிட்டு மதுரை மாவட்டம் அவனியாபுரம், பாலமேடு, அலங்காநல்லூரில் ஜல்லிக்கட்டு போட்டிகள் நடைபெறுவது வழக்கம். அந்தவகையில், அவனியாபுரம், பாலமேடு ஜல்லிக்கட்டுகள் முறையே ஜனவரி 15, 16 ஆம் தேதிகளில் நடைபெற்று முடிந்துள்ள நிலையில், உலகப் புகழ்பெற்ற அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு இன்று (ஜன.17) காலை 7 மணி அளவில் உறுதிமொழி உடன் தொடங்கியது.
தமிழக இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கொடி அசைத்து ஜல்லிக்கட்டு போட்டியை தொடங்கி வைத்தார். வணிகவரித் துறை அமைச்சர் மூர்த்தி, மாவட்ட ஆட்சியர் சங்கீதா, சோழவந்தான் சட்டமன்ற உறுப்பினர் வெங்கடேசன் ஆகியோர் உடன் இருந்தனர்.
இந்த ஜல்லிக்கட்டில் பங்கேற்க 6099 காளைகளும், 1784 மாடுபிடி வீரர்களும் பதிவு செய்திருந்தனர். போட்டி மாலை 5 மணி வரை நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், அடுத்தடுத்து சுற்றுகள் நீடித்து வந்ததால், மாலை 6 மணி வரை போட்டி நடைபெறும் என பின்னர் அறிவிக்கப்பட்டது.