HT Special: வியக்க வைக்கும் கட்டிடக் கலையின் அடையாளச் சின்னம் செட்டிநாடு வீடுகள்!
Chettinad Houses: தமிழ்நாட்டுக்கு உள்ளே தனிப்புகழ் பெற்று விளங்கும் செட்டிநாடு வீடுகள் பற்றிய சிறப்பு தொகுப்பை இங்கு தெரிந்துகொள்ளலாம்.
தமிழகத்தின் பாரம்பரியக் கட்டிடக் கலையைப் பாருக்குப் பறைசாற்றும் ஊர் சர்வதேச கட்டிடக்கலைக்கு முன்னோடியாக திகழும் செட்டிநாடு. 'செட்டிநாடு'.. இது ஏதோ ஒரு தனி நாடு அல்ல. தமிழ்நாட்டுக்கு உள்ளே தனிப்புகழ் பெற்ற நாடு.
ட்ரெண்டிங் செய்திகள்
சிவகங்கை மாவட்டத்தில், காரைக்குடியை மையமாகக் கொண்டு நகரத்தார் சமூகத்தினர் வசிக்கின்ற சுமார் 96 ஊர்களும் சேர்ந்து செட்டிநாடு என்று குறிக்கப்படுகிறது.
சிறிய அரண்மனை 40 அடி அகலம், 120 அடி நீளத்திலும், மிகப்பெரிய அரண்மனை 60 அடி அகலம், 200 அடி நீள இடத்தில் கலைநயத்துடன் கட்டப்பட்டுள்ளது. இந்த மாளிகைகள் அலங்கார விளக்குகள், தேக்கு மரச்சாமான்கள், பளிங்குக்கல், கண்ணாடிகள், கம்பளங்கள் மற்றும் ஸ்படிகங்களாலும் வடிவமைக்கப்பட்டுள்ளன. செட்டிநாடு வீடுகளின் கட்டிடக் கலை உலகப் புகழ்பெற்றவை. இந்த வீடுகளில் குறைந்தது முப்பது அறைகள் வரை இருக்கும்.
தேக்குமரத்தால் ஆன பெரிய பெரிய கதவுகள், மர பீரோக்கள், பிரமாண்டமான இரும்புப் பெட்டகங்கள், நாற்காலிகள், ஊஞ்சல் என மரவேலைப்பாடு நிறைந்த பொருள்கள், வீட்டுக்கு அழகு சேர்க்கின்றன.
சினிமாவில் சில பிரமாண்டமான வீடுகளை பார்த்திருப்போம். பாட்டி, தாத்தா, பெரியம்மா, பெரியப்பா, அத்தை, மாமா எனக் கூட்டுக் குடும்பமாக வாழ்ந்த வீடுகளைப் பல திரைப்படங்களில் கண்டிருப்போம். அந்த வீடுகள் தான் இந்த பகுதியில் உள்ள மாளிகை. காரைக்குடி செட்டியார்களின் கலையம்சத்துடன் கோட்டைபோல் கட்டப்பட்ட வீடு தான் அது. பஞ்சை, மஞ்சள், சிவப்பு போன்ற வண்ணங்களைக் கூடுதலாக பயன்படுத்தி வண்ணம் தீட்டி இருப்பார்கள்.
செட்டிநாட்டு வீடுகளின் மற்றொரு சிறப்பு ஆத்தங்குடி டைல்கள். இன்றைக்கு செட்டிநாடு வீடுகள் மட்டுமல்லாது எல்லாப் பகுதிகளில் இந்த டைல்களின் பயன்பாடு பரவலாகியுள்ளது. ஆனால் தொடக்கத்தில் செட்டிநாடு வீடுகளுக்காக இந்த டைல்கள் தயாரிக்கப்பட்டன. கண்ணாடிகளையும் இயற்கை வண்ணங்களையும் கொண்டு இந்த டைல் தயாரிக்கப்படுகிறது. ஆயிரம் ஜன்னல்கள் வைத்த வீடுகள் கூட இங்கு உண்டு. ஒரு அறை முழுவதும் கண்ணாடிகளால் பதிக்கப்பட்ட வீடுகளும் உண்டு. சுண்ணாம்புக்கலவை, கருப்பட்டி, சுடுக்காய்களை செக்கில் அரைத்து முட்டை வெள்ளைக்கரு கலந்த கலவையை கொண்டு சுவர் கட்டியுள்ளனர். தமிழகத்தின் பாரம்பரியக் கட்டிடக் கலையை பறைசாற்றும் செட்டிநாடு வீடுகள் பல தலைமுறைகளைக் கடந்து நிற்கும்.