MGR statue:எம்ஜிஆர் சிலைக்கு காவித்துண்டு அணிவிக்கப்பட்டதால் மதுரையில் பரபரப்பு
எம்ஜிஆர் சிலைக்கு காவித்துண்டு அணிவிக்கப்பட்டதால் மதுரையில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
மதுரை:
ட்ரெண்டிங் செய்திகள்
மதுரையில் மாவட்ட நீதிமன்றம் அருகே உள்ள எம்ஜிஆரின் சிலையில் காவித் துண்டு அணிவிக்கப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து அண்ணாநகர் காவல்துறையினர் நேரில் விசாரணை நடத்தினர்
மதுரை மாநகர் கேகே நகர் அதிமுக சார்பில் மாவட்ட நீதிமன்றத்தின் அருகில் எம்ஜிஆர் மற்றும் ஜெயலலிதா சிலையானது நிறுவப்பட்டுள்ளன.
இங்குள்ள எம்.ஜி.ஆரின் சிலை கடந்த 2001ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் மறைந்த முதல்வர் ஜெயலலிதாவால் திறந்துவைக்கப்பட்டது. இந்நிலையில் கடந்த 2019ஆம் ஆண்டு எம்.ஜிஆரின் சிலை அருகிலயே மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் சிலையும் அமைக்கப்பட்டது.
இதில் ஒவ்வொரு ஆண்டும் எம்.ஜி.ஆர், ஜெயலலிதாவின், பிறந்தநாள் மற்றும் நினைவுநாட்களில் ஏராளமான தொண்டர்கள் மாலை அணிவித்து மரியாதை செய்வார்கள்.
இந்த நிலையில் மதுரை கேகே நகர் பகுதியில் உள்ள எம்ஜிஆரின் முழு உருவச்சிலையில் இன்று மதியம் மர்ம நபர்கள் காவித்துண்டை அணிவித்து சென்றுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியது.
இதனையடுத்து அந்த பகுதிக்கு வந்த அண்ணாநகர் காவல் துறையினர் எம்ஜிஆர் சிலை மீது அணிவிக்கப்பட்டிருந்த காவிதுண்டைய அகற்றினர். எம்ஜிஆர் சிலைக்கு காவித்துண்டை அணிவித்தது யார் என்பது குறித்தான விசாரணையை நடத்து வருகின்றனர்.
முதற்கட்டமாக சிலை அருகே உள்ள கடைகளில் காவல்துறையினர் விசாரணை நடத்தியதோடு அந்த பகுதியில் உள்ள சிசிடிவி காட்சிகளையும் ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர்.
ஏற்கனவே தமிழகத்தில் திருவள்ளுவர், அண்ணா, பெரியார், அம்பேத்கர் சிலைகளுக்கு காவிச்சாயமும், காவித்துண்டும் அணிவிக்கப்படும் சம்பவங்கள் சர்ச்சையையும், பரபரப்பையும் ஏற்படுத்தும் நிலையில், மதுரை கே.கே.நகர் பகுதியில் உள்ள எம்ஜிஆர் சிலை மீது காவித்துண்டு போடப்பட்டு இருந்தது அதிமுக தொண்டர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.